PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, July 26, 2011

திருப்பூர் பெட்ரோல் பங்கில் கலப்படம்

அன்பு நண்பர்களே வணக்கம். 
பார்த்து பல நாட்களாகி விட்டது.   மன்னிக்கவும். ப்ளாக் வாசிப்பது மட்டுமே  ஒரே தகுதியாகி விட்டது.  ப்ளாக் ஏன் எழுதுவது இல்லை என்றால்.....நேரம் கிடைக்கவில்லை என்றெல்லாம் நொண்டியடிக்க விரும்பவில்லை... ஒரே காரணம், மிகப்பெரிய சோம்பேறித்தனம்..என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை
ஓகே ...எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் என்னுடைய staff  பெட்ரோல் அடித்தார்.  அடித்து ஒரு கிலோ மீட்டர்தான் ஓடியிருக்கும், வண்டி தகராறு பண்ணியது..

அப்படியே ஓரங்கட்டி ஒரு மெக்கானிக்கை அழைத்து பார்த்தபோது பிரச்சினையை புட்டு புட்டு வைத்தார்.
பிரச்சினை என்னவென்றால் அடித்த பெட்ரோலில் கலப்படம் இருந்திருக்கிறது.  பெட்ரோலை கையில் பிடித்து பார்த்தல் கெரசின் வாசனை அடித்தது.  எல்லாவற்றையும் கழற்றி கிளீன் பண்ணவேண்டும்.  எப்படியும் சுமார் 1500 ரூபாய் செலவு ஆகிவிடும் என்று மெக்கானிக் சொல்லவும் செலவானாலும் பரவாயில்லை சரி பண்ணச் சொல்லிவிட்டார்.



 காலையில் பில் என்னிடம் வந்தது.  விசயத்தைச் சொன்னார்.
நான் "இதற்கு என்ன செலவு ஆகிறதோ அதை பெட்ரோல் பங்க்தானே தரவேண்டும்.  போய்  கேட்டு வாங்கி வாருங்கள்"- என்றேன்.

அவர் "ஞே" என்று விழித்தார்.   "ஸார் அவங்க பெரிய ஆளுங்க... நாம எப்படி அவங்க கூட மோதறது..?" என்று கையைப் பிசைந்தார்.

"போய்  கேட்டு பாருங்க... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்"-என்று நான் சொல்லவும்.. அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
"நமக்கு எதற்கு ரிஸ்க் ..."-என்ற பாவனையில் இருந்தார்.
 நான் விடாமல் பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டேன்.
பிறகு தொகையை அவர் கணக்கில் எழுதச் சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய் விட்டார்.

நான் விடாமல் அவரை கொஞ்ச நேரம் கழித்து அவரை அழைத்து பெட்ரோல் பங்கின் நம்பரைப் பிடித்து டயல் செய்து கொடுத்து பேசச் செய்தேன்.

அவரும்" நேற்று உங்கள் பங்கில் பெட்ரோல் அடித்தேன்.  அதற்குப் பிறகு வண்டி ரிப்பேர் ஆகி வொர்க் ஷாப்பில் நிக்கிறது... செலவு 2500 ரூபாய் ஆகும் என்கிறார்கள்.  என்ன செய்ய?"-என்று கேட்டார்.

உடனே மறு முனையில் எதுவும் பேசாமல் "பில்லை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்லுங்கள்"-என்றனர்.

"ரூபாய் 2500 கொடுக்கவேண்டும்..  "-என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

"அட அதுதான் வந்து வாங்கிச் செல்லுங்கள்.  தெரியாமல் நடந்துவிட்டது என்ன பண்ணச் சொல்றீங்க..."

அடுத்த நாள் போய் பணத்தை வாங்கி வந்தார்.  பிறகு விசாரித்தபோதுதான் தெரிந்தது...அவர்களுக்கு இது வாடிக்கையானதுதான்... ஏனெனில் அவர்கள்தான் கேரசினுக்கும்  மொத்த டீலாராம்....

எப்படி இருக்குது பார்த்தீர்களா?

பெட்ரோல் அடிக்கும் போது முகர்ந்து பார்த்து வாங்குங்க மக்களா?