PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, June 27, 2014

KON TIKI (2012) - கடல் பயணங்களில்.


ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும்.  நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூபணம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

ஒருநாள் இரவில்  எங்கள் வீட்டின் வாசலில் புரோட்டா சால்னா பாக்கேட்டோடு உடைத்து சிதறிக் கிடந்தது.   காலையில் எழுந்து பார்த்த போது வாசலே அசிங்கமாக இருந்தது.  இதை யார் போட்டிருப்பார் என்று எங்களுக்குள் விவாதம் நடந்தது.  எவனாவது தண்ணியைப் போட்டுட்டு தெரு வழியா நடந்து போகும்போது போட்டுவிட்டு போயிருக்கலாம் என்று நம் வீட்டு அறிவு சிகாமணிகள் சொன்னார்கள்.  ஆனால் எனக்கு அதில் சந்தேகம் இருந்தது.  சால்னா பாக்கெட் நன்றாக உடைந்திருக்கிறது.  அப்படியெனில் நன்றாக ஓங்கி வீசியிருக்கவேண்டும்.  சிதறிய திசை வாசலெங்கும் வட தெற்காக இருக்கிறது.  அப்படிப் பார்த்தால்  எங்கள் வீட்டின் எதிரில் இருக்கும் அபார்ட்மென்ட் வீட்டு மாடியில் இருந்துதான் வீசி இருக்கவேண்டும் என்றேன். இதை நான் சொன்னவுடன் எல்லோரும் நம்ப மறுத்தார்கள்.  பிறகு ஒரு சின்ன பாலிபேகில் தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொண்டு எதிர்வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்து வீசிக் காட்டினேன்.  நான் வீசியதும்,  சால்னா பாக்கெட்டும் ஒரே மாதிரி சிதறி இருந்தது.  ஆனால் எதிர் வீட்டு மாடியில் நான்கு குடித்தனம் இருக்கிறது.  அதில் யார் வீசியவர்  என்று இன்னும் புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  

இந்த ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு EFFORT போடவேண்டியிருக்கும்போது ஒரு தீவை கண்டுபிடிப்பது போன்ற வரலாறுகளை நிரூபிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்.  இதைத்தான் நார்வே படமான KON TIKI (2012) பலப்பல சுவராஸ்யங்களோடு சொல்கிறது.

 Thor Heyerdahl என்னும் ஒரு ETHNOGRAPHER -அதாவது கலாசார ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதிய உண்மைக்கதையே இந்தப் படம்.  தோர் 1947-ல் தனது மனைவியோடு POLYNESIA தீவுக்கு ஒரு ADVENTURE பயணம் செல்கிறார்.

இந்த இடத்தில் POLYNESIA  தீவைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.  இந்தத் தீவு பசிபிக் கடலின் நடுவே உள்ளது.  தீவின் மேற்கே ஆசியாவும் கிழக்கே தென்அமெரிக்காவும் உள்ளது.  சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு இந்தத் தீவை ஆசியர்களே கண்டுபிடித்தார்கள் என்று வரலாற்றில் உள்ளது.  இப்போது தோர்-க்கு  அங்கே கிடைக்கும் சில தரவுகளை வைத்து அந்தத் தீவை கண்டுபிடித்தவர்கள் தென் அமெரிக்கர்களே என்று கண்டுபிடிக்கிறார்.

இந்த உண்மையை வெளி உலகத்துக்கு சொல்லும்போது அனைவரும் சிரிக்கின்றனர், நம்ப மறுக்கின்றனர்.  தென் அமெரிக்கர்கள் அங்கே சென்று குடியிருக்க வழியே இல்லை.  ஏனெனில் பசிபிக் கடலின் தண்ணீர் ஓட்டமும், காற்று வீசும் திசையும் தென் அமெரிக்காவுக்கு எதிரேயே உள்ளது.  1500 வருடங்களுக்கு முன்பு மோட்டார் படகு வசதி கிடையாது.  ஆகையால் தோர் சொல்வது சாத்தியமே இல்லை என்று எல்லோரும் மறுக்கின்றனர்.  இல்லை ஒரு பாய் கட்டிய கட்டுமரத்திலேயே சென்றுதான் அந்த தீவை கண்டுபிடித்திருப்பார்கள் என்று தோர் சொல்கிறார்.    அப்படியானால் ஒரு கட்டுமரத்தை எடுத்துக்கொண்டு நீயே அந்தத் தீவு வரை சென்றுவந்துவிடேன், நாங்கள் நம்புகிறோம் என்று கிண்டலாக சொல்கிறார்கள்.

அப்போது தோர் அதைச் செய்ய முடிவு செய்கிறார்.  ஆனால் அந்த முடிவு கொஞ்சம் ஆபத்தானது.  வெறும் கட்டுமரத்தை வைத்துக்கொண்டு சுமார் 4600 கடல் மைல் அளவு பயணம் செய்வது சாதாரண விஷயம் இல்லை.  என்ன செய்வது சில நேரங்களில் நாம் சொல்வதை நிரூபிக்க நாம் அதிக ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும்.  ரிஸ்க் எடுக்கிறார் தோர்.

துணைக்கு பிரிட்ஜ் ரிப்பேர் செய்யும் ஒரு என்ஜினீயர்,  சாகசங்களை விரும்பும் போர் வீரர்கள் இருவர், அதில் ஒருவர் ரேடியோவை கையாள்வதில் வல்லவர்.  ஒரு காமிராவை கையாளும் சாகச விரும்பி என்று எல்லோரும் இணைகிறார்கள். இவர்களோடு லோரிட்டாவும் இணைகிறார்.  லோரிட்டா என்பது ஒரு பஞ்சவர்ணக்கிளி.  

பால்சா மரத்துண்டுகளில் வெறும் கயிறைக்கொண்டு கட்டி மூங்கில் குடிசையோடு ஒரு மரப்படகை செய்கிறார்கள்.   ஒரு மிகப் பழமையான ரேடியோ ஒன்றை பிடிக்கிறார்கள்.  பழைய கத்திகபடாக்களோடு தென் அமெரிக்காவின் பெருவிலிருந்து பயணம் ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் தோர் எனும் அந்த ஆராய்ச்சியாளனுக்கு நீச்சல் தெரியாது.  சிறுவயதில் ஒரு பனிக்கட்டி மிதக்கும் ஒரு ஏரிக்குள் விழுந்ததனால் நீச்சல் பழகும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவே இல்லை.  அந்தப்பயணத்தில் இவர்கள் இல்லாது இன்னொருவரும் இருக்கிறார்.  அதுதான் KON TIKI எனப்படும் பொலினேசியக் கடவுள்.

மூன்று மாதம் பயணம் செய்த அந்த கடல் பயணத்தில் எத்தனை எத்தனை சோதனைகள்.  கிடைத்த அற்புத காட்சிகள் என படம் விரிகிறது.  நம்மையும் அவர்களோடு ஒருவராக உள்ளிழுத்து அழைத்துச் செல்கிறார்கள்.


படகை சிதைக்கும் புயல், ஆளைத் தின்னும் சுறாமீன்கள், கட்டுமரத்தின் அடிப்பகுதியை தின்னும் பாசி, ஐவருக்குள்ளும் ஏற்படும் புரிதலின்மைகள் என நிறைய பிரச்சினைகள் வருகிறது, என இவற்றை தாண்டி அந்தத் தீவை அடைந்தார்களா?  தோர்-ன் சித்தாந்தம் வென்றதா என்பதே படம்.

பால்சா மரத்தின் கட்டைகள் நெடுநாட்கள் தண்ணீரில் ஊறுவதால் அதன் அடிப்பாகங்கள் இற்றுப்போக ஆரம்பிக்கும்.  ஆகையால் இரும்புக்கம்பிகொண்டு கட்டிவிடலாம் என்று கம்பியை காட்டி சொல்வார் என்ஜினீயர்.  கம்பியை பிடுங்கி கடலில் எறிந்துவிட்டு எந்த சூழ்நிலையிலும் 1500 வருடத்திற்கு முன்பு எப்படி பயணம் செய்தனரோ அப்படித்தான் செய்யவேண்டும் என்று திட்டிவிடுவார் தோர். அப்போது இவர்கள் வளர்க்கும் லோரிட்டா என்கிற கிளி கடல் மீது பறக்கும்போது ஒரு சுறாமீன் லபக்கிவிடும், இதனால் எல்லோருமே அதிர்ச்சியாக அதில் ஒருவர் அந்த மீனை பிடித்து படகின் மீது போட்டு வயிற்றை அறுத்துவிடுவார்,  அந்த ரத்தம் என்ஜினீயர் உடல் முழுவதும் பீச்சி அடிக்க.  பெருகிவரும் ரத்த வாடைக்கு நிறைய சுறாமீன்கள் படகை சூழ்ந்துகொள்ளும்.  மனச்சங்கடம் அடைந்த என்ஜினீயர் தள்ளாடி நடக்கும்போது கால்தவறி கடலுக்குள் விழுந்துவிடுவார்.  அத்தனை சுறாமீன்களுக்கிடையில் அவரை காப்பாற்றி படகில் சேர்ப்பார் ஒருவர்.

டைடானிக், லைப் ஆப் பை போன்ற கடல் படங்களைப் போல்  இந்தப் படமும்  ஒரு வகையில் நமக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. படத்தின் காமிரா சோகத்தையும் அலுப்பையும் அழகையும் அப்படியே படமாக நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.

இப்படத்தின் இயக்குனர் இருவர் -    Joachim Rønning and Espen Sandberg . அருமையான இயக்கம்.  தோர் எழுதிவைத்திருக்கும் இந்த உண்மையான பயணசரித்திரத்தை அப்படியே படமாக்கி கொடுத்த விதத்தில் இவர்களை பாராட்டலாம். 
படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் Pål Sverre Valheim Hagen  நடிப்பு அபாரம்.  அந்த பாத்திரமாகவே மாறி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்ற படங்களைப் போல கடல் மாதிரி செட் போட்டு எடுக்காமல் பெரும்பான்மையான காட்சிகளை உண்மையான கடலிலேயே பல்வேறுவித சவால்களுக்கிடையில் படம் பிடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.  

இந்தப்படம் நார்வேயில் 2012-ம் ஆண்டின் சிறந்த வசூலைப் பெற்றிருக்கிறது.     அகாடமி விருது, கோல்டன் க்ளோப் விருது ஆகியவைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கு விருது வாங்கி இருக்கிறது.

இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.  தவறவிடாதீர்கள்.

 
 

Thursday, June 19, 2014

THE HEADMATE - குறும்படம் உருவான கதை.

னது மகன் சூர்யபாரதி இந்தவருடம் +2 படித்துக்கொண்டிருக்கிறான்.  கோடை விடுமுறை முடியும் முன்பு ஒரு வாரம் இருக்கும்போதே வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன.  விடுமுறையில் குதூகலமாய் இருந்தவன் இப்போது சார்ஜ் குறைந்த போன் போல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.  அன்றைய வாரத்தின் வியாழக்கிழமை மாலையில் "அப்பா நான் ஒரு குறும்படம் எடுக்கப் போகிறேன்" என்றான்.

நான் "அதுக்கு உனக்கு ஏதுடா நேரம்?" என்றேன்.

"இல்ல எனக்கு மூணு நாள் லீவு. அதுக்குள்ள எடுத்துருவேன்"

"மூணு நாளுக்குள்ள எடுத்துற முடியும்.  ஆனா எடிட்டிங் டப்பிங்க்னு ஒரு வாரம் ஆயிடுமே.  படிப்பு கெடாதா?"

"எல்லாத்தையும் மூணு நாளுக்குள்ளே முடிச்சுருவேன்"

எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.  மூன்று நாட்களுக்குள் எப்படி எடுத்து முடிக்க முடியும்.  சான்சே இல்லை.  சரி என்னவோ செய்யட்டும்.  வேண்டாம் என்றால் கேட்கப் போவதில்லை.

"சரி கதையைச் சொல்லு" என்றேன்.

"நைட் வாங்க சொல்றேன்" - என்றான்.

நான் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சென்றுவிட்டேன்.

இரவில் நான் வீட்டுக்குப் போனதும் அவனது ஸ்கிரிப்ட்டைக் காட்டினான். படித்துப் பார்த்தேன்.  நானொன்றும் கருத்துச் சொல்லவில்லை.

"ஓகே.. எப்ப சூட் போறே?"

"காலையில"

இவ்வளவுதான் சொன்னான்.  காலையில் எழுந்து பார்த்தால் ஆளைக்காணவில்லை.  போன் செய்தால் "ஷூட்டிங்ல இருக்கேன்பா" என்றான்.  "காமிரா யாருடா?" என்றேன்.  "நம்ம சந்தோஷ் தான்.  சென்னையில் இருந்து வந்திருக்கிறார்" என்றான்.

எனக்கு பகீரென்றது.  சந்தோஷ் எனில் CANON 5D கேமரா  மார்க் 3,  எப்படியும் வாடகை ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டி இருக்குமே எனும் கவலையில் " வாடகை யார் தர்றது?" என்றேன்.

"தயாரிப்பாளர்தான் தருவாரு"

"யாரு தயாரிப்பாளர்?" என்று அப்பாவியாய் கேட்டேன்.

"நீங்கதான்" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

அன்று இரவு வீடு திரும்பும்போது லாப்டாப்பில் நோண்டிக்கொண்டிருந்தான்.

"என்னடா ஷூட்டிங் முடிஞ்சுதா?" என்றேன்.

"அதெல்லாம் முடிஞ்சு எடிட்டிங் போயிட்டிருக்கு" என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.  இரவு சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன்.

எப்போதும் போல் காலையில் எழுந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த அவனும் எழுந்து வந்து லாப்டாப்பை திறந்தான்.

"படத்த முடிச்சுட்டேன்.  பர்ஸ்ட் காப்பி பாக்கிறீங்களா?"- என்றான்.

"என்னடா அதுக்குள்ள முடிச்சுட்டியா?" - எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  "படத்த பாருங்க.. இன்னும் மியூசிக் மட்டும் சேர்க்கல" என்று சொல்லி லாப்டாப்பை டிவியில் இணைத்து  போட்டுக் காண்பித்தான்.  படத்தைப் பார்த்துவிட்டு சில திருத்தங்கள் சொன்னேன்.  அதுக்கு மறுபடியும் சூட் பண்ணவேண்டும் என்றான்.  "அதனால என்ன பண்ணு" என்றேன்.

"நடிச்ச ஒருத்தன் இன்னைக்கு சென்னை போறான்பா" என்றான்.

"ஓகே அவன்கிட்ட பேசு.  கொஞ்ச நேரம்தான வந்துட்டு போகச் சொல்லு" என்று கொஞ்ச நேரம் பேசியதும்  அவன் அந்த நடிகனிடம் பேசினான்.

அவனோ வரமுடியாது என்று மறுக்க அவனது அப்பாவிடம் பேசச் சொன்னேன்.  அவனது அப்பா சென்னைக்கு ரயில் மூன்று மணிக்கு அவனை ஒருமணிக்குள் விட்டுவிடுவதாய் இருந்தால் அனுப்புகிறேன் என்று சொல்ல அதுக்கு ஓகே சொல்லி அவனை அழைத்துவர வண்டி அனுப்பியாயிற்று.

அடுத்து படத்தில்  நடித்திருந்த வண்டி மறுபடி வேண்டும்.  வண்டி கடன் கொடுத்தவனை கேட்டால் வண்டியில் சின்ன கீறல் விழுந்துவிட்டதால் வண்டி தரமாட்டேன் என்று சொல்ல மீண்டும் பிரச்சினை.  பிறகு அவனை நேரில் போய் பார்த்து சமாதானம் செய்து வண்டியை சூர்யாவே நண்பனோடு எடுத்துவந்தான்.

அடுத்து காமிராமேன் பிரச்சினை.  உறங்கிக்கொண்டிருந்த அவர்களை எழுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தும்போது மணி பத்து.  இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்துவிட்டார்கள்.

அன்று இரவு நான் வீட்டுக்கு போகும்போது படம் இசை எல்லாம் சேர்த்து ரெடியாக இருந்தது.  போட்டுப்பார்க்கும்போது திருப்தியாக இருந்தது.  மூன்று நாட்களில் முடிப்பதாய்ச் சொன்ன படத்தை இரவு பகல் பாராமல் இரண்டே நாட்களில் முடித்த அவனது ஆர்வத்திற்கும் அதற்கு அவன் போட்ட உழைப்பிற்கும் எனது பாராட்டுக்களை சொன்னேன்.

பிறகு ஒன்பதாவது படிக்கும் எனது சின்ன மகன் நவயுகனிடம் இந்த படத்திற்கான ட்ரைலரை தயாரிக்கும்படி சொன்னேன்.  அவனும் இரண்டே மணி நேரத்தில் அந்த ட்ரைலரை தயாரித்து கொடுத்தான்.  அருமையாக இருந்தது.  அது உங்கள் பார்வைக்கு....

HEADMATE-TRAILOR

இந்த ட்ரைலரை முகப்புதகத்தில் வெளியிட்டபோது நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.  பிறகு முழுப் படத்தையும் யூட்யூப்பில் படத்தை வெளியிட்டுள்ளோம்.  படத்தை பார்த்து  உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

படம்  உங்கள் பார்வைக்கு..

https://www.youtube.com/watch?v=5z_7NZrJMk4

THE HEADMATE - SHORTFILM

 

Monday, June 16, 2014

முண்டாசுப்பட்டி - மற்றும் ஒரு பரிமாணம்

முண்டாசுப்பட்டி படம் அதன் விளம்பரத்தால் பல விதங்களில் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட சனி இரவு படம் பார்த்துவிட்டேன்.  இந்தப் படத்தைப் பற்றி, படம் வருவதற்கு முன்னும்,  வந்த பின்னும் எல்லோரும் படத்தின்  முழுக்கதையையுமே இயக்குனர் ராம்குமாரை விட பிரமாதமாக திரைக்கதை எழுதிவிட்டதால் கதையைச் சொல்லப்போவது இல்லை.

வெறும்  பதினைந்து  நிமிடமே ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை 2:30 மணி நேரமாக ஓடக்கூடிய திரைப்படமாக எடுப்பதற்கென ஒரு தனிப்பட்ட திறமை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.   அந்த வகையில் குறும்படத்தில் இருந்த கதையை வெகு அழகாக வேறொரு பரிமாணத்தில் கொடுத்த இயக்குனர் ராம்குமாருக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனம் திறந்த பாராட்டுக்கள்.

ஒரு கிராமத்து கதைக்குள் வெள்ளைக்காரன் வந்து போவதையும்,  விண்கல் ஒன்று விழுந்து அது சாமி ஆனதையும் அந்தக் கல்லை திருட ஒரு பூனை சூப் குடிக்கும் ஜமீன்தார் முயல்வதையும்,  அந்தக் கல் திருட்டு கதாநாயகனுக்கு அவன் காதலிக்கும் பெண்ணின் கல்யாணத்தை நிறுத்த  ஒரு பொருத்தமான இடத்தில் உதவியதையும் கற்பனை செய்த குழுவினரை எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்.    இதுவெல்லாம் சும்மா காமா சோமாவென்று சொல்லாமல் சரியான டீடைலிங்குடன்  சொல்லி இருப்பதில்தான் இங்கு இயக்குனர் தனித்து தெரிகிறார்.  அது என்ன டீடைலிங் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஒரு  பாத்திரத்தை படைக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு கதைக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது முக்கியம். ஆண்மை விருத்திக்காக அடிக்கடி பூனை சூப் குடிக்கும் ஜமீன்தார், கதாநாயகன் போட்டோ  பிடிக்கப் போகும் போது அவனுக்கும் வழங்கப் படுகிறது.  இந்த பழக்கமே இறுதிக் காட்சியில் காணாமல் போன வானமுனி சிலை எங்கே இருக்கிறது என்பதற்கான க்ளுவாகிறது.  அதுமட்டுமில்லாமல் தன் இனத்தை அழித்தவனை பழிவாங்கவே பூனைகள் எல்லாம் சேர்ந்து கிளைமாக்சில் ஜமீந்தாரை பிராண்டி எடுக்கிறது.   இது ஒரு சிறந்த கற்பனை.

அதே மாதிரி சுடுகாட்டில் தங்கி இருக்கும் முற்போக்குவாதம் பேசும் தலித் இன கதாபாத்திரமும் அதன் வடிவமைப்பும்.  கதையின் போக்கில் கதாநாயகனுக்கு அந்த பாத்திரம் நன்கு உதவுகிறது. ஏறக்குறைய பாக்கியராஜின்  ஒரு கை ஓசையில் வருகிற சங்கிலி கதாபாத்திரம்தான் இது.ஆனால் இந்தக் கதாபாத்திரத்தை அப்படியே அம்போவென்று விட்டதுதான் ஏனென்று தெரியவில்லை.

 ஓடும்போது மட்டுமல்ல நிற்கும்போதே பெட்ரோல் குடிக்கும்,  எப்போதுமே மெதுவாகச் செல்லும் புல்லட் பைக் ஒரு பாத்திரமாகவே உலவுகிறது.  அதுவே இடைவேளை போடுவதற்கும், சுபம் போடுவதற்கும் அற்புதமாக உதவுகிறது.   அந்த வாகனத்தை கொசு மருந்து அடிப்பது போல புகையை கக்கிச் செல்லவும்,  சின்னப் பையன்கள் கூட ஓட்டிப் பழகவும்,  டயரைக் கழட்டி விளையாடவும் விட்டு அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல பிணத்துக்கு டூப்பாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் பாத்திரத்தை செதுக்கியதும் நன்றாகவே வந்துள்ளது.  சினிமாவில் நடிக்கும் ஆசையோடு வருகிறவரை பிணம் வேஷமிட்டு போட்டோ புடிக்கும் காட்சி வயிற்றை பதம் பார்க்கிறது.  தான் ஏமாந்துவிட்டோம் என்று உணர்ந்தபின் இவர்களை பழிவாங்க அந்த பாத்திரம் எடுக்கும் இன்னொரு அவதாரம்தான்  படத்தின் அச்சாணியாக மாறுகிறது.  அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ராம்தாஸ் - அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  அவரின் உடல்மொழியும், டயலாக் டெலிவரியும் அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் ஒருபடி மேலே ஏற்றுகிறது.  மிகச் சிறந்த ஒரு எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் ராம்தாஸ்.

இதேபோல அழகுமணியாக வரும் கதாநாயகனின் துணைப் பாத்திரம்  அழகுற வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  எல்லாப் படத்தில் வருவது மாதிரியான பாத்திரமே என்றாலும் கத்தி கத்தி வசனம் பேசாமல் அடக்கமாக செய்த விதத்தில் வித்தியாசம் காட்டி நடித்த காளிக்கே பெருமை சேரும்.  கொங்கு மொழியை கையாண்ட விதத்தில் தனித்து தெரிகிறார்.    போகிற போக்கில் அவர் போடுகிற காமெடி வெடி நன்றாக எடுபடுகிறது.  (துருபிடிச்ச துப்பாக்கிக்கு தொட்ட எதற்கு?)

கிராமத்து பெண்ணாக வரும் கலைவாணி பாத்திரமும் அழகுதான்.  கொங்கு கிராமத்தின் பெண் என்பதால் அடுத்த ஆடவனோடு சுலபமாக பெசிவிடாத குணம் இதன் சிறப்பு.  இதைச் செய்திருக்கும் நந்திதா அழகாக பொருந்தி நடித்திருக்கிறார்.  ஆனால் இவருடைய போர்ஷனை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இவருடைய காதலை வலுவாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  கதையில் இது ஒரு பலவீனமாக அமைந்துவிட்டது நேரப்பற்றாக்குறையா  என்பது தெரியவில்லை.   தனக்கு பிடிக்கதவனோடு கல்யாணம் என்பதால் எப்போதும் சோகமுகமாவே காட்சியளிப்பதுதான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது.

மற்றபடி வருகிற கிராமத்துப் பெரிசும் அவரது மனைவிக்கு இருக்கிற கள்ளத்தொடர்பும் அதைச் சுற்றி நடக்கிற நகைச்சுவைகளும் ரசிக்கக் கூடியதே.  இந்த மாதிரி எத்தனை எத்தனை பாத்திரங்களை கிராமத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் நடித்தவர்களின் முக பாவங்கள்தான் ரொம்பப் பாவமாக இருந்தது.

அதே போல சாமியார் பாத்திரம் நன்றாகவே இருந்தது.  பகலில் சாமியாராகவும் இரவில் திருடனாகவும் கடைசியில் பொட்டிக்கடைக்கரனின் மனைவியின் வலையில் வீழ்ந்த பலியாடாகவும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.  விஷ்ணுவிற்கும் சாமியாருக்கும் இடையில் ஓடும புரிதல்கள் சிரிப்புவெடி.

இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.  இதுவரை எத்தனையோ பேர் கொங்கு வட்டாரவழக்கில் படம் எடுத்திருக்கின்றனர்.  அதில் எல்லாம் கொங்குமொழியை துல்லியமாக கையாண்டு இருக்கமாட்டார்கள்.  கோவை சரளா, சத்யராஜ், மணிவண்ணன், இன்னும் சிலருக்கு மட்டுமே மிகச் சரியாக கைவந்திருக்கும்.  ஏன் கமல் கூட ஐம்பது பர்சன்ட்தான் அருகில் வந்திருப்பார்.  படத்தில் நடித்த எல்லோருமே அழகான கொங்குமொழி பேசி நடித்திருக்கும் படம் இதுதான் என்பதை திட்டவட்டமாக கூறலாம்.  விஷ்ணு மட்டுமே இந்த மொழியை பேச திணறி இருப்பார்.  மற்றபடி எல்லோருமே சரியாக உச்சரித்திருப்பர்.  அதற்காக இயக்குனர் ராம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஷேன் ரோல்டானின் பாடல்கள் பிரமாதம்.  ராசா மகராசா இன்னும் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  பின்னணி இசையில் நிறைய புது முயற்சிகள் எடுத்திருக்கிறார்.  சில ஈடுபடுகின்றன.  சில எரிச்சலூட்டுகின்றன.  இருந்தபோதும் திரை இசையில், ரஜினி  கோடம்பாக்கம் கேட்டினை உதைத்துக்கொண்டு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றி இருப்பது தெரிகிறது.

பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு நன்றாகவே இருந்தது.  கிராமத்துக் கதையில் நன்றாக ஸ்கோர் பண்ணவேண்டியது,  பீரியட் கதை என்பதாலும், பட்ஜெட் காரணத்தாலும்  காமிராவை அதிகமாக வெளியே கொண்டுவராதது தெரிகிறது.  இருந்தாலும் கொடுத்த களத்தில் நின்று விளையாடும் முரட்டுக்காளையைப் போல நின்று விளையாடி இருக்கிறார்.

படத்தில் மைனஸ்சே இல்லையா?... நிறைய இருக்கிறது.  அது இல்லாமல் எடுக்கவும் முடியாது.  மெதுவாக நகரும் கதை,    அதிகமாக ஆக்சன் காமெடியாக இல்லாமல் டயலாக் காமெடியாக இருப்பது,  நீட்டி முழக்கும் இறுதி சேஸ் காட்சிகள்,  சில இடங்களின் லாஜிக்குகள் என்று இருந்தாலும் படம் சிரிக்க வைத்துவிடுவதால் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம்.

விஷ்ணுவின் நடிப்பு சுமாராக இருப்பது படத்தின் பலவீனம்.  நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல்மொழி சுத்தமாக வரவில்லை.  முகத்தில் எக்ஸ்ப்ரசன் என்ன விலை என்று கேட்கிறார்.

அதே போல படத்தின் ஏனைய துணை கதாபாத்திரங்களுக்கும் தேர்ந்த நடிகர்களை போட்டிருந்தால் படம் அடுத்த லெவலுக்கு கொண்டுபோயிருப்பார்கள்.  ஊர்த்தலைவர் பாத்திரத்துக்கு நாசரை நினைத்துப் பாருங்கள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.  அதேபோல இருக்கும் எல்லோருமே புதுமுகமாக இருப்பதால் முகத்தை  இறுக்கமாகவே வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.  அங்கே கொஞ்சம் சுதாரிச்சிருக்கலாம்.

மற்றபடி படம் அருமையாக இருக்கிறது.  இயக்குனர் ராம்குமாருக்கும் அவருக்கு துணையாக நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.  இவர்களின் அடுத்த படம் பார்க்க ஆவலாக உள்ளேன்.