PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, August 27, 2011

நட்பில் தோல்வியுண்டா நண்பா?



நாம் ஒன்றாய்ச்
சாப்பிட்ட எச்சில் தட்டும்,

எப்போதாவது
ஒவ்வொன்றாய் இழுத்த
ஒரே தம்மும்....,

ஒவ்வொரு சிப்பாய்
மாற்றி மாற்றிக் குடித்த
ஒரே எச்சில் தம்ளரும்,

நேரம் போனதே  தெரியாமல்
விடிய விடிய நாம்
பேசிய பேச்சை
ஒட்டுக்கேட்ட
அதே ஒற்றை நிலவும்,

எதிர்காலக் கனவை
பல இரவுகள் திட்டமிட்டதை
பக்கத்தில் இருந்து பார்த்த
இரட்டை தண்டவாளங்களும்,

எப்போதும் நீயே
ஜெயிக்கும் ரகசியம்
தெரிந்த
ஜோக்கர் சீட்டும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
விட்டுக் கொடுத்த
பல்வேறு தருணங்களும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
அடுத்தவர்களிடம்
விட்டுக் கொடுக்காத
பாசமிகு  தருணங்களும்,

உன்னுடையதை
எனக்காகவும்
என்னுடையதை
உனக்காகவும்
செலவழிந்த
ரூபாய் நோட்டுகளும்,

பல வேளை
என் பசியை ஆற்றிய
உன் தாயின்
அன்பு கலந்த
அரிசியும் பருப்புச் சோறும்,

சோர்ந்த போதெல்லாம்
தோளோடு அணைத்து
ஆறுதல் தந்த
நம் தந்தையின்
நம்பிக்கை வார்த்தைகளும்,

என்னைப் பார்த்து
பரிகசிக்கின்றன....

"காதல் தோல்வி
கேட்டதுண்டு ....

 நட்பு தோல்வியை 

இப்போதுதான்
பார்க்கிறேன்"-என்று!


  

Wednesday, August 24, 2011

படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(1)

 நேற்று சட்டமன்றத்தில் காமராஜரா? எம்.ஜி.ஆரா? என்று பட்டிமன்றம் நடந்தது.  உண்மையை என்போன்ற சிலரால் மட்டுமே உணரமுடியும்...


நான் என்னுடைய படிப்பை படித்தது ஒரு மிகப் பெரிய போராட்டத்துக்கு இடையில்தான்.  அந்தக் கதையைச் சொல்றேன் கேளுங்க...


நான் எனது வீட்டில் இரண்டாவது பையன்.  எனது அண்ணன் என்னிலிருந்து நான்கு வயது வித்தியாசம். எனக்குப் பிறகு இரண்டு வயது வித்தியாசத்தில் எனது தம்பி.  எனது அப்பா ஒரு சுகவாசி.  இன்ன வேலை என்று கிடையாது.  எல்லா வேலையும் செய்வார். ஆனால் செய்யமாட்டார். 


 அவருக்கென்று பத்து பனிரெண்டு ஆடுகள் உண்டு.  அதை அவிழ்த்து காட்டுக்குள் விட்டுவிட்டு ஜாலியாக சுற்றுவார்.  மாலை ஆனதும் ஆடுகளை தேடிப் பிடித்து ஒட்டிவந்து கொட்டிலில் அடைப்பார். சில சமயங்களில்  எதாவொரு தோட்டக்காரன் தோட்டத்தில் பயிரை மெய்ந்துவிட்டது என்று ஆட்டைப் பிடித்து  பிடித்து கட்டிவிடுவான்.  பிறகு பஞ்சாயத்து பண்ணி ஆட்டை ஒட்டிவருவார். 

இதுதான் அவருடைய தொழில்.  நிரந்தர வருமானம் கிடையாது.  ஆகையால் எனது அம்மா கட்டாயம் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம்.  எனது அம்மா அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் இல்லை. 


 பிறந்தது முதலே எதாவொரு வேலைக்குச் சென்றுதான் வயிற்றை கழுவிப் பழக்கப்பட்டவர்கள்.   ஆனால் என்ன அப்போது எழுபதுகளில் உடல் உழைப்புக்கு கிடைத்ததோ சொற்ப்பக்கூலிதான்.  அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் காட்டுக்கு போய்விட்டால் வீடு வர மதியம் மணி இரண்டு மூன்று ஆகி விடும்.  கூலி இரண்டு ரூபாய்.  கடுமையான உழைப்பு. இந்த பணம்தான் ஒரு குடும்பைத்தையே ஓட்டவேண்டும்.


எனது தம்பி பிறந்த பிறகு அவனை பார்த்து வளர்க்கவேண்டிய பொறுப்பு எனது அண்ணன் தலையில் விழுந்தது.  அம்மா வேலைக்கு போக அண்ணன் தம்பியை வளர்க்க நான் பள்ளிக்கூடம் போனேன்.  அப்போது காமராஜ் மதிய உணவுத்திட்டம் இருந்த காலம்.  நானெல்லாம் சாப்பிடுவதற்க்காகவே பள்ளிக்கூடம் போகவேண்டியதாக இருந்தது.  ஆனால் சும்மா சொல்லக் கூடாது.  ஒரு நேரம் சாப்பிட்டாலும் நன்றாக வயிறார சாப்பிட முடிந்தது.  


காமராஜரைப் பொருத்தவரையில் எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு பசிப்பிணியைப் போக்கி படிப்பினை கொடுத்தவர்.  எனது வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது.  அரிசிச் சோறு என்பது கனவாகவே இருந்தது. ஏதாவது பண்டிகை காலங்களில் மட்டுமே அதை கண்ணில் காண முடிந்தது.  ராகிக் களியும், கம்பஞ்சோறும்,  கேழ்வரகு சோறும் தான் எங்களது அன்றாட மெனு.  


  அப்போதெல்லாம் நான் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு மிக அதிகமாக இருக்கும்.  அடுத்தவேளை ஒன்றும் கிடைக்காதது போல நிறைய சாப்பிடுவேன். என்னுடைய வயிறு மட்டும் தனியாக முன்னாடி துருத்திக் கொண்டிருக்கும்.
(இப்போ மட்டும் என்ன வாழுதாம்),  கல்யாண வீட்டுக்கெல்லாம் போனால் முதல் பந்தியிலே உட்கார்ந்து கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி வயிறு நிறைந்து, உணவுக்குழாய் நிறைந்து மூக்கு வரை நிறையும் வரை ரெண்டு பந்தியானாலும் சாப்பிடாமல் எழுந்து வரமாட்டேன்.  மற்றபடி இலையில் இருக்கும் மற்ற சைடு டிஸ்களை(போண்ட, இனிப்பு, பழம்) மேல் பாக்கெட்டிலும் கீழ் பாக்கெட்டிலும் பார்சல் பண்ணி எடுத்து வந்து கொஞ்சம் குறைந்ததும்  நிரப்பிக் கொள்வேன்.

கூப்பன் அரிசி சோறுஎன்பது கொஞ்சம் கூடுதல் தகுதியான உணவு.  அதற்கும் ரேசன் கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு கிலோமீட்டருக்கு  லைன் நிக்கும். ரேசன் கடைக்கோ பக்கத்துக்கு ஊருக்குத்தான் போகவேண்டும்.  அந்த அரிசியில் இரண்டு வகை இருக்கும்.  குருணை அரிசியும், முழு அரிசியும் கொடுப்பார்கள்.  குருணை அரிசியில் ஒருவிதமான ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும்.  அதையும் வாங்கி சாப்பிடுவோம்.  வேறு வழியில்லை.  

அப்போது மழை பொய்த்து பஞ்சம் தலை விரித்தாடியது.  பெரிசுகளைக் கேட்டுப் பாருங்கள்.  கதை கதையாக சொல்லுவார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எல்லோரையும் எலிக்கறி சாப்பிடச் சொன்னார்.  மக்கள் அதை மனதில் வைத்துதான் எம்ஜியாருக்கு அப்படியொரு அமோக ஆதரவு கொடுத்தனர். அதற்குப் பிறகு அவர் சாகும் வரை கருணாநிதியால் அந்த அரியணையை அடைய முடியாமல் போனதுக்கு காரண வறுமையை எள்ளி நகையாடியதுதான்.  

எதையோ சொல்ல வந்து எங்கெங்கோ சென்று விட்டேன்.  
எப்படியோ தக்கி முக்கி ஐந்தாவது வரை முடித்துவிட்டேன்.  இடையில் என் தம்பி இறந்துவிட எனது அண்ணனை தொழில் பழக திருப்பூரில் சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  ஆறாவது படிக்க வேறு பள்ளிக்கூடம் போகவேண்டும்.  ஆனால் மேலே படிக்க வைக்க வீட்டு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை.  இருக்கிற ஆடுகளை நான் மெயக்கவேண்டும் எனவும் எனது அப்பா வேறு ஏதாவது வேலைக்குப் போகவேண்டும் எனவும் முடிவு ஆகியது.  

அப்போது எனது அம்மாவிடம்  படித்தே ஆகவேண்டும் என்று அழுது அடம் பிடித்து  ஆர்ப்பாட்டம் பண்ணினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை.  அதனால் நானே ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி எனது சித்தப்பவிற்க்கு ஒரு கடிதம் எழுதினேன்.  உடனே வந்து என் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசி பள்ளிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டிருந்தேன்.  

ஆனால் அந்த கடிதத்தை போஸ்ட் செய்யும் முன் அம்மாவின் கையில் கிடைத்துவிட்டது. அதை படிக்கத் தெரியாமல்   அது என்னவோ ஏதோவென்று  நினைத்துக் கொண்டு என்னை விசாரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் நான் ஒன்றும் வாயைத் திறக்கவில்லை.  அதில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னையே படிக்கச் சொன்னார்கள்.  ம்ஹூம் கல்லுளி மங்கனாய் அமர்ந்து இருந்தேன். பிறகு அப்பா அடிக்க  ஆரம்பித்தார். அப்பவும் நான் வாயைத் திறக்கவில்லை. 

 அப்போது ரோட்டில் போய்க்கொண்டிருந்த தங்கபாண்டிய வாத்தியார் வந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி என்ன ஏதுவென்று
விசாரித்தார்.  அந்த கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது.  அதை படித்துப் பார்த்து என்னை தலை வருடி பயப்படாதே என்பது மாதிரி கண்களைக் காட்டினார். 

"எப்ப இந்த வயசுல எவனுக்கு லெட்டர் எழுதத் தெரியுது.  இவ்வளவு அழகா எழுதி இருக்கான்.  பையனை படிக்க வையுங்கப்பா... பெரிய ஆளா வருவான்..."


எனக்கு ஏதோ வானத்தில் மிதப்பது மாதிரி இருந்தது.  
அதற்குப் பிறகு இரண்டு ஆடுகள் விற்கப் பட்டது.  நான் புதுச் சட்டை அணிந்து ஹைஸ்கூல் போனேன்.  அங்கு எனக்கு வாத்தியாராக வந்தது அதே தங்கபாண்டிய வாத்தியார்தான்.  அவர் எல்லோருக்கும் கண்டிப்பான வாத்தியார். ஆனால் நான் அவருக்கு செல்லப் பிள்ளை.  அவருக்கும் அவரது வீட்டுக்கும் தேவையான எடுபிடி வேலைகளை செய்து  கொடுத்து  நல்ல பேர் வாங்கிவிட்டேன். 

அப்போது மதிய உணவுப் பிரச்சினை வந்தது.  ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே இருந்த மதிய உணவுத் திட்டம் உயர்நிலைப் பள்ளிக்கு இல்லை.  எனது வீட்டின் வறுமையை புரிந்து கொண்ட தங்கபாண்டிய வாத்தியார் அதற்கும் ஒரு திட்டம் கொண்டு வந்தார்.  கைப்பிடி உணவுத் திட்டம்.

மதிய உணவு கொண்டு வரும் மாணவர்கள் அவரவர் உணவில் இருந்து ஒரு கைப்பிடி உணவை வழங்க வேண்டும் என உத்தரவு போட்டார்.  மதிய பெல் அடித்ததும் தயாராக நான் கொண்டு வந்திருக்கும் இலையுடன் வகுப்பில் கீழே அமர்ந்து கொள்வேன்.  எல்லோரும் வரிசையாக வந்து எனது இலையில் பரிமாறிச் செல்வர்.  என்னோடு வீரமுத்து எனும் இன்னொரு மாணவனும் அதை சாப்பிட்டான். 

அப்போது எனது அப்பா கொஞ்சம் திருந்தி வேலைக்குப் போகிறேன் என்று  திருப்பூர்(இதுதான் அவருடைய சொந்த ஊர்) வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  எனது அண்ணனும் அப்பாவும் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து வேலைக்குப் போய் வந்தார்கள். எனது அண்ணன் சாக்கு தைக்கவும் எனது அப்பா கடலை மில்லில் மூட்டை தூக்கவும் போனார். 

எப்படியோ எட்டாம் வகுப்பை  முடித்துவிட்டேன்.  கோடை விடுமுறைக்கு  திருப்பூர் வந்தவன் என்னையும் சாக்கு தைக்க வேலைக்கு அனுப்பினார்கள்.  அதற்குப் பிறகு குடும்பமே திருப்பூருக்கு குடி பெயர்ந்தது.  எனது அம்மா பருத்தி மில்லுக்கு வேலைக்குப் போக ஒரு வழியாய் குடும்பம் செட்டில் ஆனது. என்னால் குடும்பத்துக்கு வருமானம் வரவும் எனது படிப்பை டீலில் விட்டார்கள்....   அது அடுத்த பதிவில்....


Saturday, August 6, 2011

தமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்.....முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு, முதல் உதை... இப்படி அவரவர் வாழ்க்கையில்(சேரன்னு நினைப்பு) ஆயிரம் முதல்கள் இருக்கும்.
அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.
அதைப்பற்றி நான் எழுதலாம் என்று இருக்கிறேன்....கொஞ்சம் சுய சொறிதல்தான் ...இருந்தாலும் நம்ம வரலாறு முக்கியமில்லையா, கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை.

அதற்குமுன் எனது வரலாறு..(புவியியல், இரசாயனம்,பௌதீகம்)!

எனது சொந்த ஊர் திருப்பூர் என்றாலும் நான் எனது 13 வயது  வரையில்  வளர்ந்தது பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் என்ற அழகான கிராமத்தில்தான்.உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம்... இங்கு ஒரு ஜமீன்தார் அரண்மனை இருக்கிறது..இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்,

இளையராஜா அடிக்கடி வந்துபோகும் கோடீஸ்வர சுவாமிகள் நினைவாலயம் உள்ள இடம். நாங்கள் கோடீஸ்வர சுவாமிகளின்  செல்லப் பிள்ளைகளாக வலம் வந்த காலம்.  அது ஒரு தனிக் கதை.

நான் அரசுப் பள்ளியில் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம். எனக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது.  அப்போது பக்கத்துக்கு ஊரில் தமிழ்நாடு (அநேகமாக எல்லா ஊர் டெண்டு தியேட்டர் பெயரும் இதுவேதான்) என்றொரு டூரிங் டாக்கீஸ் இருந்தது.  என்னோடு படிக்கும் நண்பனின் உறவினர்தான் அதில் ஆபரேட்டர் .  அந்த செல்வாக்கில் அவன் எல்லாப் படங்களையும் பார்த்து விடுவான். அது மட்டும் இல்லாமல் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் கூட்டம் போட்டு அந்த படத்தை டைட்டிலில் இருந்து சுபம் கார்ட் போடும் வரை விலா வாரியாக விவரிப்பான். எம்ஜியார் நம்பியார் சண்டையை அப்படியே நடித்து காட்டிவிடுவான்.  அதை நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்தபடி (கொசு போய் குடும்பம் நடத்திவிட்டு வெளியே வரும்) கேட்டுக்கொண்டு இருப்போம்.
எம்.ஜி.ஆர். அணி , சிவாஜி அணி என்று பிரிந்து சண்டை போட்டுகொண்டிருப்போம்.

எப்படியாவது ஒரு சினிமாவாவது பார்த்துவிடவேண்டும் என்று அம்மன் கோவிலில் காசு வெட்டி  சபதம் எடுத்துக்கொண்டேன்.   அம்மாவிடம் கேட்டால் உனக்கெல்லாம் எதுக்குடா சினிமா என்று புறந்தள்ளினார்கள்.  அதற்காக இரண்டு நாள் பாபா ராம்தேவ் கணக்காக உண்ணாவிரதம், தூங்காவிரதம், எடுபிடி வேலை செய்யா விரதம் என பல வி(ர)தங்களில் போராட்டம் செய்து கடைசியில் படிந்தார்கள்.   உடனே கை கால் முகம் கழுவி நெற்றி நிறைய விபூதியிட்டு அண்ணனோடு வெற்றிப் பெருமிதத்துடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படம் பார்க்க போனேன்.

தியேட்டருக்கு போனபிறகுதான் அது வேறு உலகம் என்று புரிந்தது.  கொடிகளும், தோரணங்களும் கூட்டமும் மிரள வைத்தன. இருபத்தைந்து பைசா கொடுத்து தரை டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனோம்.  முன்னாடி போய் மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து கொண்டோம்.  பீடி வாசனை தியேட்டர் முழுவதும் நிறைந்திருந்தது.
படம் போட்டு எம்ஜியார் வந்ததும் விசில் சத்தம் தியேட்டரின் கூரையைப் பிய்த்தது. அதுவே தனி உற்சாகமாக இருந்தது.

அடுத்த நாள் நான் எம்ஜியார் ரசிகனாக பதவியேற்றுக் கொண்டு தனியாக ஒரு கூட்டம் சேர்த்து கதை அளக்க ஆரம்பித்தேன்.  அப்போது தீப்பெட்டி பண்டல்களில் விதவிதமாக  எம்ஜியார் படம்  வரும்.  மாமாவின் மளிகைக்  கடையில் கெஞ்சி வாங்கி வந்து எனது வீட்டின் ஒரே ஒரு தட்டிக் கதவில் ஒட்டி வைப்பேன்.

அதற்குப் பிறகு எனக்கு கொடுக்கப்படும் ஐந்து பைசா, பத்துப் பைசா காசுகளை சேர்த்து நாலணா ஆனபிறகு யாராவது சினிமாவுக்குப் போனால் அவர்களோடு ஒட்டிக்கொண்டு போக ஆரம்பித்தேன்.  அடிக்கும் மேற்க்கத்திக் காற்றில்  மருத மலை மாமணியே முருகையா என்ற பாட்டை  கேட்டால் தியேட்டர் திறந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.  அந்த பாட்டைக் கேட்டவுடன் நமநமவென்று அரிக்க ஆரம்பித்துவிடும்.

அப்போது எனக்கு அந்த வயதிலேயே  பார்ட் டைம் வேலையொன்று  கிடைத்தது.   அந்த ஊரில் புதிதாக வந்த பேச்சிலர் குடும்ப கட்டுப்பாடு அலுவலர் ஒருவருக்கு காலையில் குளிப்பதற்காக தண்ணீர் காயவைத்துக் கொடுக்கும் வேலை.  மாதம் இரண்டு ரூபாய் கொடுப்பார்.  இடையில் அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்து கொடுத்தால் ஐந்து பைசா பத்து பைசா கொடுப்பார்.  அவருடைய ரூம் அந்த ஊரின் கேளிக்கை கிளப்-ஆக உருவெடுத்தது.  அந்த ஊரின் வாத்தியார்கள், படித்த பெரிசுகள் எல்லாம் பொழுதைக் கழிக்கும் இடமாக அது இருந்ததால் எனக்கு வேலை அதிகமானது.  சீட்டாட்டம் ஆடினால் எனக்கு டீ வாங்கி வரும் வேலை.  எப்படியும் அந்த மாதிரி நாட்களில்   இருபத்தைந்து பைசா கொடுப்பார்கள்.   எங்களது வீட்டின் வறுமையை ஓரளவு இது விரட்டியது.  மிஞ்சிய காசுகளில் எப்படியும் படம் பார்த்துவிடுவேன்.

படத்துக்கு தனியாக போக ஆரம்பித்தேன்.  போவது ஒன்றும் பிரச்சினையில்லை  படம் விட்டு வரும்போதுதான் பிரச்சினை.  தியேட்டருக்கும் எனது வீட்டுக்கும் நாலு மைல் நடக்க வேண்டும். ஊரே அடங்கி இருக்கும் அந்த ஒன்பது மணி இருட்டில் எப்படியும் மெயின் ரோடு வரை யாராவது துணை இருப்பார்.  மெயின் ரோட்டில் இருந்து வீடு வரை யாரும் இருக்க மாட்டார்கள்.  மூன்று புளிய மரம்தான் எனக்கு இருக்கும் ஒரே பயம்.  புளிய மரத்தில் பேய் எனக்காக உட்கார்ந்து காத்திருப்பதாக எனது கற்பனை. கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்து வீட்டிற்குள் புகுந்துவிடுவேன். நெஞ்சம் பட படவென்று அடித்துக்கொள்ளும்.

இப்படித்தான் வீட்டில் அனுமதியின்றி பத்ரகாளி படம் பார்த்துவிட்டு வந்தேன்.  படமே ஒரு டெரர்- ஆகத்தான்  இருக்கும்.  படத்தின் கதாநாயகி வேறு தலையை விரித்துப்போட்டு பேயாட்டம் ஆடியிருப்பார்.  மெயின் ரோடு வரை ஒரு துணை இருந்தது.  அதற்கு மேல் வழக்கம் போல் புளியமரத்து நண்பனிடம் இருந்து தப்பிக்க கூடுதல் பயத்துடன் கண்ணை மூடி ஓடிப் போய் கதவை திறந்து நின்றால் தலையை விரித்துப் போட்டு கையில் பிரம்புடன் அம்மா... அவ்வளவுதான் படத்தில் பார்த்த பத்ரகாளி ஆட்டம் நிஜத்தில் நடந்தது.
புண்ணிய பூமி என்றொரு சிவாஜி படம்.  அங்குதான் சூட்டிங் நடந்தது.  சிவாஜியை அப்போதுதான் முதன் முதலில் நேரில் பார்த்தது.  தொந்தியை இறுக்கிக் கட்டி பெல்ட் போட்டு மிலிடரி ட்ரெஸ்-ல் ஒரு தீவிரவாதி போல் நடித்திருப்பார்.  வாணிஸ்ரீ ஓல்ட் கெட்டப்-ல் நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.


அரண்மனை திண்ணையில் நம்பியார் v.k. ராமசாமியுடன் ரொம்ப சிம்பிளாக பேசிக்கொண்டிருந்தார்.  அவர் அருகில் போகவே எங்களுக்கெல்லாம் பயம்.  தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.  அப்போது என்னை தம்பி இங்கே வா என்று  அருகில் அழைத்தார்.    அவ்வளவுதான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிப்போய் வீட்டுக்குள் புகுந்துகொண்டேன்.  பிறகு இரண்டு நாள் சூட்டிங் பார்க்க போகவேயில்லை.  நம்பியார் என்னை தேடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் என்னை கலாய்த்தார்கள்.

கரையெல்லாம் செண்பகப் பூ படம்.  சுஜாதா அவர்கள் வர்ணித்திருந்த ஜமீன் பங்களாவும் கிராமும் எங்களது கிராமம்தான்.  பிரதாப் போத்தன் கித்தாரோடு ஒரு நாட்டுப் புறப்பாடலுக்கு அங்கு சூட்டிங் நடந்தது.  அன்று நான் சூட்டிங் பார்க்க போகவில்லை.  பிரதாப் போத்தனோடு ஆட அந்த ஊர் சிறுவர்கள் சிலரை தேர்வு செய்து காஜா செரீப்போடு ஆட வைத்திருக்கிறார்கள்.


 கசாப்பு கடைகாரர் பையன் மாரியப்பனும் அதில் ஒருவன். அதன் பின் அவன் செய்த அளப்பரைகள் இருக்கிறதே..... அப்பப்பா அவனே ஹீரோவாக நடித்த மாதிரி அலட்டிக் கொள்வான்.
அன்று மட்டும் நான் சூட்டிங் பார்க்கப் போயிருந்தால் இன்று தமிழ் சினிமா உலகில் ஒரு ஸ்டார் உருவாகி இருப்பேன்.   தமிழ்நாடு செய்த புண்ணியம் அவ்வளவுதான்.