PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, November 13, 2010

விதவை இலை சுமங்கலி இலை



தீபாவளிக்கு  வீட்டில் விருந்தினர்கள் வருகை...
என்னதான் இருந்தாலும் ஒரு பண்டிகையை உற்றாரும் சுற்றாரும் கூடி கொண்டாடினால் அதில் இருக்கும் சந்தோசமே தனிதான்.

நம்மைவிட பொடிசுகளுக்கு ஜாலியோ ஜாலிதான்.

நான் வாழை இலை வாங்க கடைக்கு போய் இருந்தேன்.

சாப்பாட்டு இலை 10ம் டிபன் இலை 10ம் வாங்கி வருமாறு தங்கமணியால் ஆணை ஸாரி அன்புக் கட்டளையிடப் பட்டிருந்தேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க..)

கடைக்காரரிடம் அப்படியே கேட்டேன் .....அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்..

கடையில் டிபன் இலை இல்லை.
கடைக்காரர்,"டிபன் இலையில் சாப்பிடக் கூடாது தம்பி... சாப்பாட்டு இலையே வாங்கிக்குங்க.."-என்றார்.

நாம் எதை வாங்குவது என்று இவர் எப்படி தீர்மானிக்கலாம்.  அதுமட்டும் இல்லாமல் தங்கமணியிடம போய் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது .....

நான் ஒரு ஐடியா சிகாமணி,
"தலைவாழை இலையை பிளந்து டிபன் இலை ஆக்கிடுங்க..." -என்றேன்.

அவர் இதைக் கேட்டதும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்....

"தம்பி அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது....ஏனா  தலைவாழை இலைங்கறது  சுமங்கலி இலை.  டிபன் இலைங்கறது விதவை இலை.  குடும்பம் வாழ்ற வீட்டுல விதவை இலை போட்டு சாப்பிடக்கூடாது.  நீங்க என்ன கேட்டாலும் நான் தரமுடியாது.  அது மாதிரி நான் ஏவாரம் பண்றதில்லை...தலைவாழை இலையே வாங்கிட்டு போங்க.."

தீர்மானமாக இருபது இலைகள் கட்டிக் கொடுத்தார்.

நானும் வேறு வழியில்லாமல் வாங்கி வந்தேன்.

வீட்டில் வந்து இதே கதையை சொன்னேன்.
 தங்கமணி என்னை ஏற இறங்கப் பார்த்தார்...
"நாங்களும் அதே கடையில எத்தனையோ தடவை இலை வாங்கி இருக்கோம்.  அதெப்படி உங்க கிட்ட மட்டும் ஏதாவொரு கதை சொல்றாங்க..."

நான் அப்படியே விலகிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன்.

ஒரு டன் அசடு வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.......




Wednesday, November 10, 2010

இதுவும் திருப்பூர்தான்....


 துதான் திருப்பூர் என்று அண்ணன் நிகழ் காலத்தில் எழுதி இருந்ததை படித்தபோது அன்று நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றி சொல்லலாம் என்று இதை எழுதிகிறேன்....

தீபாவளிக்கு ஒரு தினம் முந்திய நாள்....
நான் எனது பார்ட்டிக்கு ஒரு நேம் செக் ரூபாய் 1907/= க்கு கொடுத்திருந்தேன்.
அவர் பேங்க்குக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டார்.  எனக்கு இரவு எட்டு மணிக்கு பேங்கிலிருந்து போன்.
"சார் உங்க பார்ட்டிக்கு  ரூபாய் 1907 க்கு பதிலாக  ரூபாய் 19007 கொடுத்துவிட்டோம்...."
பதட்டமாக மேனேஜர் கூப்பிட்டார்.

"அதெப்படி சார் அவ்வளவு கரெக்டா நம்ம பார்ட்டி தான் வாங்குனாங்கனு சொல்ல்றீங்க...?" என்று கேட்டேன்.

"சார் நம்ம கேஷியர் செக்குக்கு பின்னாடி டினாமிநேசன் கரெக்டா எழுதி இருக்கார்.  நாங்க 3
மணி நேரமா மண்டையை போட்டு உடைச்சு இதை கண்டுபிடிசிருக்கோம் சார்.  நீங்க வேணா வந்து பாருங்க ஒரு தடவை...."

நான் உடனே பார்ட்டிக்கு போன் செய்து கேட்டேன்.

அவர் தெளிவாக மறுத்தார்.

"சார் அதெப்படி கொடுத்திருக்க முடியும்.  நான் மூணு ஐநூறு ரூபாய் நோட்டும், நான்கு நூறு ரூபாய் நோட்டும் சில்லறையும்தான் வாங்கினேன்..."

"சரி.. உடனே நீங்க ஆபீஸ் வாங்க.."

"இல்ல சார் ... நான் காலையில் வர்றேன்...."

எனக்கு இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.

"இத பாருங்க ..இப்ப நீங்க வந்தீங்கன்னா சரி... இல்லையின்னா உங்க மேல தப்பிருக்குன்னு அர்த்தம்.."-என்றேன்.

உடனே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரும் அவரது மனைவியும்  எனது ஆபீசில் இருந்தார்கள்.

"சார் இப்போ நான் தண்ணி அடிச்சிருந்ததால்தான்  நான் வர முடியாதுன்னு சொன்னேன்.
 இப்ப நான் என்ன செய்ய?"

"நீங்க அதிகமாக பணம் வாங்குனீங்களா?"

"கிடையவே கிடையாது சார்... மூணு ஐநூறு நாலு நூறு ஏழு ரூபாய் சில்லரையும்தான் சார் நான் வாங்குனது..."

"சரி இப்பவே பேங்க் போயி சொல்லீட்டு வந்துருங்க..."-என்றேன்.

உடனே அவர் கிளம்பி சென்றார்.  எனக்கு அப்போது வேலை இருந்ததால்  நான் எனது ஸ்டாப் ஒருவரையும் கூட அனுப்பி வைத்தேன்.

பாங்கில் இவர் வந்த கோலத்தை பார்த்து அடுத்த நாள் காலையில் வரும்படி  சொல்லிவிட்டார்கள்.

டுத்த நாள் காலையில் நானும் அவரை அழைத்தபடி சென்று இருந்தேன்.

பேங்க் மேனேஜர் அந்த செக்கை காட்டினார். அதன் பின்னாடி 190 x 100 தெளிவாக  டினாமிநேசன் எழுதி இருந்தது... அதே மாதிரி எல்லா செக்குக்களையும் காட்டினார். அதிலேயும் தெளிவாக டினாமிநேசன் போட்டிருந்தார்கள்.

"எப்போதுமே எந்த காஷியரும் செக்குக்கு பின்னாடி இந்த மாதிரி டினாமிநேசன் எழுத மாட்டார்கள்.   நல்லவேளை இவருக்கு இந்த பழக்கம் இருக்கு. அதனால கண்டுபிடிக்க முடிஞ்சது.....எங்களோட டோட்டல் சார்டேஜ் 17100 ரூபாய்.  இவருக்குதான் அவ்வளவு ரூபாய் கரெக்டா அதிகமா கொடுத்திருக்கோம்"

ஆனால் நம்ம பார்ட்டியோ ஒத்துக்கவே மாட்டேன்கிறார்.

"சார் இவுங்க எங்கோயோ விட்டுட்டு என்னை பிடிச்சு தொந்தரவு பண்ணறாங்க...இதுக்கு மேல பேசுனாங்கன்னா நான் மனித உரிமை கமிசன் தான் போகவேண்டி இருக்கும்...."

கேஷியர் புலம்போ புலம்பென்று புலம்புகிறார்.

"சார் நான் கை காசுதான் போட்டு கட்டனும்... இது எனக்கு ஒரு ப்ளாக் மார்க் ஆகிடும்.  என்னோட ப்ரோமொசன் எல்லாம் பாதிக்கும்.....இன்னும் என் குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கூட எடுக்கலை.... ."

இவரோ..."சார் நான் அப்படி பண்ற ஆளா....உங்க கூட இதனை நாளா பிசினஸ் பண்றேன்.  எம்மேல ஏதாவது சின்ன ரீமார்க் உண்டா?   நீங்களே என்னை சந்தேகப் படலாமா? "-என்கிறார்.

நான் இருவருக்கும் இடையில் சிக்கி படாத பாடு பட்டேன்.

"நீங்க வேணா வாங்க... மூணு ஐநூறு ரூபாயில் ஒரு ஐநூறு நோட்டை டீக்கடையில் கொடுத்தேன்.  இன்னொன்றை வீட்டுல கொடுத்தேன்.  இன்னொன்று என்னோட பாக்கட்ல வச்சு இருக்கேன்"

ஐநூறு ரூபாயை எடுத்துக் காட்டினார்.

பேங்க் மேனேஜர் என்னை தனியாக அழைத்தார்.

"சார் பார்ட்டியைப் பற்றி உங்க ஒப்பினியன்  எப்படி நல்லவரா?"-என்று கேட்டார்.

"சார் நல்ல பார்ட்டிதான்.  ஒரு வருசமா வரவு செலவு வச்சிருக்கேன்.  இதுவரை ஒண்ணும் பிரச்சினையும் இல்லை"

"சரி விடுங்க...எனக்கு உங்க ஒபினியன்தான்  வேணும்.  இன்னொருமுறை கேட்டுப் பாருங்க...மனசாட்சிப் பிரகாரம் வாங்கிருந்தா கொடுத்துடச் சொல்லுங்க...இல்லையினா நாங்க எல்லோரும் சேர்ந்து ஷேர் பண்ணி பணத்தை கட்டிடறோம்..."

அவரோ ஒத்துக்கொள்வதாக இல்லை. அவரது மனைவியும்  அதையே வழிமொழிந்தார்.

ருவழியாக தீபாவளி முடிந்தது....
இன்று பாங்கிலிருந்து வரச்சொல்லி போன் வந்தது.
போனபோது...மேனேஜர் சிரித்தபடியே வரவேற்றார்.
"சார்.. பாங்க்ல கேமரா இருக்கிறதையே மறந்துட்டோம்.   நேற்றுதான் நினைவு வந்து ஆட்களை வெச்சு பழைய பதிவுகளை பார்த்தோம்.  நீங்களும் பாருங்க.."

கம்ப்யூட்டர் ஆன் பண்ணி காமெராவை ஓட விட்டார்கள்.

கேஷியர் இவரை அழைக்கிறார்....வலது புற டிராவில் இருந்து முதலில் ஏழு ரூபாயை கொடுக்கிறார்....  பிறகு மூணு ஐநூறு ரூபாயை எடுக்கிறார் ... இவர் ஏதோ சொல்கிறார்....உடனே எடுத்த பணத்தை அதிலேயே போட்டுவிட்டு  இடது புற டிராவில் இருந்து இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து ஒரு கட்டிலிருந்து பத்து நூறு ரூபாயை எடுத்துவிட்டு செக்குக்கு பின்னாடி டினாமிநேசன்
 எழுதி விட்டு அப்படியே கொடுக்கிறார்....அதை எந்தவித கூச்சமும் இல்லாமல் வாங்கி செல்கிறார் நமது பார்ட்டி.

நான் பார்த்ததும் அதிர்ந்தேன்.  என்ன மனுசனையா இவர்...என்று திட்டியபடி அவரை போனில் அழைத்தேன்.   உடனே பேங்குக்கு வந்தார்.

வந்தவர் "என்ன சும்மா சும்மா கூப்பிட்டு தொந்தரவு பண்றீங்க... நான் மேயரைக் கூப்பிடறேன்.  இல்லாட்டி போலிசுக்கு பொய் பேங்க் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்... "-என்று தாம் தூம் என்று குதித்தார்.

அவரை அமைதி பண்ணி வீடியோவை போட்டு காட்டினோம்.

வீடியோவை பார்த்துவிட்டு ஆள் பேயடித்தது போல உட்கார்ந்துவிட்டார்.  அப்போதும்கூட சமாளிக்கப் பார்த்தார்.

நான் அவரது மனைவியை அழைத்து வீடியோவை போட்டுக் காட்டச் சொன்னேன்.  உடனே ஆள் சரண்டர் ஆனார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் பணத்தை கொண்டு வந்து கட்டியதாக பாங்கில் சொன்னார்கள்.

ணம் என்னென்ன மாயங்களை செய்கிறது...எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

Saturday, October 30, 2010

நாய் படுத்தும் பாடு.

 நாங்கள் எங்கள் வீட்டில்  எப்போதும்  வளர்ப்பு மிருகங்கள் வளர்த்துவதில்லை...
அது கொடுக்கும் இம்சைகளை  நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்... கண்கூடாகக் கண்டுமிருக்கிறோம்.
சிலர் நாய் வளர்ப்பதைப் பார்த்தால்  பொறாமையாக இருக்கும்.  அதுக்கு அவர்கள் கொடுக்கும் செல்லம் என்ன....முத்தம் என்ன...அதை அவர்கள் வீட்டுக்குள் விட்டு...அது மட்டும் இல்லாமல் படுக்கையில் கட்டிப்பிடித்து தூங்குவது வரை.....ராஜவாழ்க்கை வாழும்.




இப்படித்தான் எனது நண்பர் ஒருவரின்  15 வயது மகன் ஆசைப்பட்டானே என்று ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தார். அது பண்ணிய அலம்பல்களைப் பற்றி அவர் சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது.
அது கொஞ்சம் வளர்ந்த குட்டியாக இருந்தபோதே ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

  தினமும் எட்டு மணி வரை தூங்கும் அவரது தூக்கம்  அது வந்ததிலிருந்து காலை ஆறு மணி வரைதான் ஆனது .  அதை காலையில் எழுப்பி வெளியே சிறிது தூரம் நடத்திச் சென்று கக்கா, உச்சா போன்ற காலைக் கடன்களை கழிக்க வைத்து கூட்டி வரவேண்டியது இவரது வேலை. அதுவோ புது இடம் என்பதால் ஜாலியாக வரும்போதுதான் போகும்.  அதன் பின்னாடி ஓடி ஓடி இவருக்கே கக்கா வந்துவிடும். பிறகு ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீடு வரும்போது ஒரு மணி நேரம் ஆகிஇருக்கும்.

பிறகு அவரது மனைவியின் வேலை ஆரம்பித்துவிடும்.  அதற்க்கு தேவையான உணவுகளை சமைத்து போடுவது அவருக்கு பெரிய வேலையாக இருந்தது.  அது எதை விரும்புகிறது என்று கண்டுபிடிப்பதற்க்கே ஒரு மாதம் ஆகி விட்டது.  எதைப் போட்டாலும் திங்க மறுக்கும்.  பையனுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும்.  ஒரு வழியாக நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று தெரிய வந்தது.  அதுவும் சூடாக வைத்தால்தான் சாப்பிடும்.  சூடு இல்லையென்றால் ஒரு நாளானாலும் சாப்பிடாது.  சாப்பிடும்போது சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே நிற்கவேண்டும்.  கொஞ்சம் விலகினாலும் குரைக்கும்.  அவரது கணவருக்கு கூட பக்கத்தில் இருந்து பரிமாறும் வழக்கம் அவரிடம் இல்லை.  ஆனால் இந்த நாய் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே மாதிரி சாதாரண குடி  தண்ணீர் ஊற்றினால் குடிக்காது.  எல்லோரும் குடிக்கும் bisleri வாட்டர் ஊற்றினால்தான் குடிக்கும்.  அதற்கு வாரம் மூணு முறை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டவேண்டும்.  பாத்ரூம் சுத்தமாக   இருந்தால் மட்டுமே உள்ளேயே வரும்.  வாசனை பவுடர் வேறு.  எப்படியும் மாதம் நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை செலவு வைத்துவிடும்.

இரவு இவர் வரும் வரை  காத்திருக்கும்.  வந்துவிட்டால் பழகி பத்து வருஷம் ஆன மாதிரி குரைத்துவிட்டு இவர் மடி மீது ஏறி படுத்துக்கொள்ளும்.  இவர் முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் மெதுவாக தூங்கிவிடும்.  இது தினமும் நடக்கவேண்டும். இவர் வர தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்துகொண்டிருக்கும்.


அதை மாதம் ஒருமுறை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவது அவரது வேலை.  டாக்டரும் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன ஊசி போடுவது என்று ஒரு பைலே போட்டு கொடுத்திருக்கிறார்.  பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி விபரத்தை ஒரு அட்டையில் எழுதிக்  கொடுப்பார்களே அப்படி. ஒருமுறை போய் வந்தால் 500 ரூபாய் கழண்டுவிடும். அதுபோக அது விளையாட பிளாஸ்டிக் எலும்புத்துண்டு, பந்து என்று செலவு வேறு.

ஒருநாள் காலை அசதியில் கொஞ்சம் தூங்கிவிட்டார்.... அவரது மனைவி அவசரமாக அவரை எழுப்பினார்.எழுந்து பார்த்தால் நாடு ஹாலில் கக்கா போய் இருந்தது. அதை திட்டியபடியே எழுந்து அடிக்க ஓடினார். அது அவருக்கு தண்ணி காட்டிவிட்டு ஓடிவிட்டது.
 "அதை விரட்ட உங்களை எழுப்பலை....  இடத்தை சுத்தம் பண்ணத்தான் எழுப்பினேன்." -என்று அவர் மனைவி சொன்னபோது தலை சுற்றி கிழேயே விழுந்துவிட்டார். என்ன செய்ய விதியை நொந்து கொண்டு சுத்தம் செய்தார்.

எல்லா வீடுகளிலும் யாராவது தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் வந்தால் அந்த வீட்டில் உள்ள நாய் உள்ளேயே விடாது.  குரைத்து அதகளம் பண்ணிய பிறகு வீட்டுக்காரர் நசுங்கிய சொம்போடு வந்து பஞ்சாயத்து பண்ணிய பிறகே உள்ளே அனுமதிக்கும். ஆனால் இது மற்ற நாய்களைப் போல வீட்டுக்கு யார் வந்தாலும் குரைக்காது.   மாறாக அவர்களை போன ஜென்மத்தில் பழகிய மாதிரி அவர்களோடு பழகும்.   திருடனே வந்தாலும் அவனது காலை காலை  சுற்றி வந்து கல்லாப் பெட்டியை காட்டி கொடுக்கும்.  மாறாக இந்த வீட்டுக்காரர்கள் இவரோ, இவரது மனைவியோ, அல்லது பையனோ வெளியே போய் விட்டு உள்ளே  வந்தால் ஊரே அதிரும்படி ஐந்து நிமிடம் குரைக்கும்.

இதைவிட  பெரிய விஷயம் என்னவென்றால்.....பக்கத்துக்கு வீட்டிற்கும் இவர்களுக்கும் ஒத்து வராது.  பக்கத்து வீட்டம்மாவுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. எப்போதும் ஜாடையாக திட்டிக்கொண்டே இருப்பாள்.  நம்ம வீட்டம்மாவோ எந்த வம்பு தும்புவுக்கும் போகாதவர். இவர் கதவை சாத்திவிட்டு ஒன்றும் கொண்டுகொள்ளாமல் இருந்துவிடும் குணம்.  இவர்கள் நாய் வாங்கியதும் போட்டிக்கென்று அவரும் நாயை வாங்கி வளர்த்தார்.  அது எப்போதும் யார் வந்தாலும் வராவிட்டாலும் குரைத்துக் கொண்டே இருக்கும்.   அது வந்ததிலிருந்து அந்தம்மா குரைப்பதை நிறுத்திவிட்டார்.  ஆனால் நம்ம நாயோ எதிர்ப்பாட்டு மாதிரி ஒரு எதிர்க்குரைப்பு கூட குரைப்பதில்லை என்று இவரது மனைவிக்கு தீராத மனக்குரை ஸாரி மனக்குறை உண்டு. பதிலாக அந்த நாயோடு இது ஒரு அட்டாச்மென்டோடு பழகியதில் காதல் படத்து தகராறு மாதிரி அருவா கம்போடு மோதுகிற சூழ்நிலை வந்தது.

திடீரென்று ஒருநாள்  அது கத்திக் கொண்டே இருந்தது.  என்னவென்று தெரியாமல் டாக்டரிடம் அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தார்கள்.  ஆனால் காரை விட்டு இறங்கும்போது அது இறந்திருந்தது.  என்னவென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் ஒரு களை இல்லையாம்.  இன்னொரு நாய் எடுத்து வளர்த்தலாம் என்றிருக்கிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு கஷ்டமாய் இருந்தது.   நாய் வளர்த்துவதற்க்கு பதிலாக ஒரு அனாதைப் பிள்ளையை எடுத்து வளர்த்தலாமே என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கி விட்டேன்.

Friday, October 15, 2010

எங்கெங்கு காணினும் காமினி (சவால் சிறுகதை)

 
 ண்டி... ஒரு சுடிதார் எடுக்க இவ்ளோ நேரமா? .எடுத்துட்டுச் சொல்லு. அதுவரைக்கும் சித்தே உட்கார்ந்து இருக்கேன்....”- என்று உடம்பு பெருத்த ஐம்பது வயதை எட்டிய வைரம் என்னும் காமினியின் அம்மா சொன்னபோது அந்த கடைக்குள் இருவரும் வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.


இந்த காமினி எப்பவுமே இப்படித்தான், எந்த விஷயத்துலயும் அவ்வளவு சீக்கிரமா திருப்தி அடைந்துவிடமாட்டள்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஒரு சுடிதார் செட் எடுக்க இந்த போராட்டம்.  கலர் நன்றாக இருந்தால் டிசைன் சரியாக இல்லை, டிசைன் சரியாக இருந்தால் ஸ்டிச்சிங் சரியாக இல்லை.எல்லாம் சரியாக இருந்தால் பிட்டிங் இல்லை. இந்த காலத்து பெண்களை புரிஞ்சுக்கவே முடியவில்லை...

அலுப்பில் அம்மா ஹாண்ட் பேக்கை மார்போடு அணைத்தபடி அசந்து உட்கார்ந்து விட்டாள். அம்மா ஒரு மேக்கப் பைத்தியம்.  எப்போதும் இந்த ஹாண்ட் பேக்கை மட்டும் விடவே மாட்டாள். அதனுள் ஒரு மேக்கப் ருமே இருக்கும்.  அப்போது காமினியின் செல் சினுங்கியது.

“ஹலோ காமினியா...?-என்றது எதிர்முனையில் ஒரு பரிச்சயம் இல்லாத ஆண் குரல்.

“ஆமா நீங்க யாரு?-என்று கேட்டாள் காமினி.

“உங்கப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...உடனே பழைய பஸ் ஸ்டான்ட் பக்கம் தண்ணி டேங் இருக்கில்ல ....அங்க வாங்க.. சீக்கிரம்.

“ஐயையோ அப்பாக்கு  என்ன ஆச்சு?...

அலறிய அலறலில் துணிக்கடையே திரும்பிப்பார்த்தது.  அம்மா வைரத்துக்கு திடுக்கென்று இருந்தது. 

“பெருசா ஒண்ணும் இல்லைமா..கால்லதான் கொஞ்சம் அடி,  லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டான்.  காருக்கு நல்லா டேமேஜ், சாருக்கு  நல்லா  நினைவிருக்கு, நீங்க உடனே ஸ்பாட்டுக்கு வந்துருங்க...வந்துடுவீங்களா இல்லையா?

“இதோ வந்துடறேங்க... நாங்க பக்கத்துலதான் இருக்கோம். 5 நிமிசத்துல அங்கே இருப்போம்.  ஆம்புலன்சுக்கு...” 

“அதெல்லாம் ஆச்சு.. சீக்கிரமா வாங்க...

காமினிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.  அம்மாவை இழுத்துக்கொண்டு ஓடினாள்.  அவர்கள் சொன்ன அட்ரெஸ் நல்லவேளை அருகில்தான் இருந்தது.

“ஏண்டி என்னடி ஆச்சு...யாரு போன்ல?

கேள்விகளை அடுக்கிகொண்டே ஓடிவந்தாள்.

“என்னங்க இவ்வளவு நேரமா பார்த்துட்டு ஒண்ணுமே எடுக்காம போறீங்க...

கடைப் பையனின் அலுப்புக்கு பதில் சொல்ல நேரமில்லை....


வெகு தூரமில்லை...பத்து  நிமிடத்தில் தண்ணீர்  டேங்க் பக்கம் வந்து விட்டாள்.  
கூட்டத்தை காணவில்லை.  ஒரே ஒரு அம்பாசிடர் கார் மட்டுமே நின்று கொண்டிருந்தது.
எதிரில்தான் G.H.  ஒருவேளை அங்கு கொண்டு சென்றிருக்கலாம்.  காரின் அருகில் சென்றார்கள்.
திடீரென்று காரினுள் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கருப்பு துணி கட்டியிருந்தார்கள்.  ஒருவன் மட்டும் உயரமாக இருந்தான். அவன்
கையில் கார் ஜாக்கியை சுற்றும் லீவரை பிடித்தபடி இருந்தான். காமினியின் உள்மனசு எச்சரிக்கை விடுத்தது.

“அம்மா வேணாம் வா. திரும்பி போயிடலாம்...-என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்து ஓடினாள்.  அம்மா வைரத்தால் அவளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் திணறி கீழ விழுந்தாள்.

அதற்குள் மூவரும் அவர்களை நெருங்கி விட்டார்கள். முதலில் அருகில் நெருங்கிய ஒருவனை சடாரென்று காலை உயர்த்தி கொட்டையை குறி வைத்து அடித்தாள். அவன் அப்படியே சுருண்டு உட்கார்ந்தான். அதற்குள் பின்னால் வந்தவன் கையிலிருந்த லீவரால் காமினியின் மண்டையில் அடித்தான். காமினி அலறியபடி  ரத்தம் வழிய கீழே விழுந்தாள். 

அப்போது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க்–லிருந்தும் கார் ஸ்டான்ட்-லிருந்தும் ஆட்கள் வரத் துவங்கினர்.
“டேய்  என்னாடா இப்படி அடிச்சிட்டே.....செத்தே போய்டுவா போலிருக்கே... நம்ம திட்டம் எல்லாம் வேஸ்டா போய்டும் போலிருக்கே....சரி சரி அந்தம்மாவையே தூக்கு  கொண்டு போய்டலாம்...-என்று கூறியபடி வைரத்தின் வாயை  கையால் பொத்திக்கொண்டு மூவரும் அவளைத் தூக்கி காரில் திணித்து உடனே வண்டியை ஸ்டார்ட் செய்தார்கள்.

ஓடி வந்த ஆட்களின் மீது உரசியபடி கொஞ்ச தூரம் சென்று லெப்ட் எடுத்து பல்லடம் ரோட்டில் கார் விரைந்தது. காமினி ஒன்றும் செய்ய இயலாதவளாய் பார்த்தபடி மயங்கினாள்.


மீண்டும் நினைவு வந்தபோது முகத்தில் உருத்தியபடி மாஸ்க்  இருந்தது. உடம்பைச் சுற்றி வயர்களால் பிணைக்கப்பட்டிருந்தாள்.  அவளின் முன்னால் டாக்டரும் அப்பாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். திறக்க முடியாத கண்களோடு செவி வழியாக அவர்கள் பேசுவதை நன்றாக கேட்க முடிந்தது.

“டாக்டர் காமினியை எப்போ ரிகவரி ஆவாள்-னு எதிர்பார்க்கலாம்?

“நத்திங் டு ஒர்ரி... லேசான காயம்தான்.  கொஞ்ச நேரத்தில் ரிகவரி ஆய்டுவா.  உங்க ஓய்ப் பத்தி தகவல் ஏதும் கெடைச்சுதா?

“நோ டாக்டர்.  யாரோ தெரிஞ்சவந்தான் கடத்தி இருக்கனும்.  எங்கிட்ட பரம்பரை பரம்பரையா காப்பாத்திட்டு வர்ற ஒரு வைரம் இருக்கு.  அது எங்க வம்சாவளியா வந்தது.  அதை கொடுத்தாதான் மனைவியை விடமுடியும்னு டிமாண்ட் பண்றாங்க...

“அப்ப அந்த டையமண்ட் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோதான் இதை செய்திருக்கனும்.

“எஸ் டாக்டர் அதுதான் யார்னு தெரிய மாட்டேங்குது.

“போலீஸ்-ல இன்பார்ம் பண்ணீட்டிங்களா?

“இல்லை டாக்டர் .. ஏதாவது விபரீதமா ஆயிடுமோனு பயமா இருக்கு

“நோ நோ உடனே புகார் பண்ணுங்க பரந்தாமன்...உங்க மனைவியை எதாவது பண்ணிட போறாங்க

காமினிக்கு இந்த பேச்சை கேட்டவுடன் சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.
பேசியவாறு டாக்டரும் பரந்தாமனும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

பார்க்கிங்கில் அப்பாவுடைய கார் நின்றுகொண்டிருந்தது.  உள்ளே அப்பாவுடைய டிரைவர் சிவா  உட்கார்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்தான். கதவைத் திறந்து உள்ளே ஏறிய காமினியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனான்.

"சிவா உடனே வண்டியை எடு.......போகணும்"-என்றால் காமினி. 

 “அம்மா  ஐயாட்ட சொல்லிட்டு வந்துடறேன்..”-தயங்கினான் சிவா.

“எல்லாம் சொல்லியாச்சு.. அவர் வந்துடுவாரு...  நீ கெளம்பு.

உத்தரவிடும் பாணியில் சொன்னாள்.

மறுப்பு சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே ரோட்டுக்கு வந்தான் சிவா.

“உடம்பு எப்படி இருக்கும்மா?

“பரவாயில்ல. சிவா  .. நல்லாத்தான் இருக்கு.  சரி  உன் பிரண்ட் ராஜா  எங்கே?

ராஜா  பரந்தாமனின் மில்லில்  வேலை செய்யும் இன்னொரு டிரைவர். 

.அவன் இன்னைக்கு வேலைக்கு வர்லீங்கம்மா. ஏன் எதுக்கு கேக்கறீங்க?

“இல்ல அவன் கேரக்டர் எப்படி?

“அவனைப் பத்தி பேசதீங்கம்மா... அவனெல்லாம் ஒரு பிரண்டு

“இல்லை அவன்தான் அம்மாவை கடத்தி இருக்கனும்னு தோணுது

“இருக்கலாம்... ஏனா அவனோட சேர்க்கையே சரி இல்லீங்கம்மா.  உங்ககிட்ட முதலிலேயே சொல்லலாம்னு இருந்தேன்.  போலீஸ்காரங்களோட சேர்ந்துட்டு சுத்தறானுங்க
என்ன சொல்ற?

“ஆமாம்மா...லஞ்சம வாங்கி சஸ்பென்ட் ஆன ரெண்டு போலீஸ்காரர்கள் இவனுக்கு பழக்கம். அவங்களோட சேர்ந்துதான் இப்பல்லாம் சுத்துறான்.  என்ன பண்ணறான் ஏது பண்ணறான் அப்படீங்கறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது...

காமினிக்கு இப்போது சந்தேகம் உறுதியானது.  அவள் பார்த்த மூவரில் உயரமாய் இருந்தவன் ராஜாவாகதான் இருக்கவேண்டும்.  அவன்தான் தனது குடும்ப விவகாரங்கள் நன்றாகத் தெரிந்தவன். அவன் அந்த  போலீஸ்காரர்கள் ரெண்டு பேரோடு சேர்ந்து செய்கிற வேலைதான் இது என்று தெளிவாகப் புரிந்தது.

“சரி சிவா... அவனுக்கு பல்லடம் ரோடுல எந்த இடம் நல்லா  தெரியும்.....

“அவனோட மாமாவோட தோட்டம் ஒண்ணு பொங்கலூர் பக்கம் இருக்கும்மா.  ஒரு தடவை கெடா வேட்டுன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்கான்

“ரொம்ப நல்லதாப் போச்சு.  நேரா அங்க விடு

“இல்லம்மா நாம ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்.  பேசாம போலீஸ்-ல சொல்லி பார்துக்காலாம்மா

“இல்ல சிவா  இது வைரம் சம்பந்தப் பட்டது. வீணான பிரச்சினை வரும்.  அதும் மட்டுமில்ல போலீசே இதுல சம்பந்தப்பட்டிருக்கு.  அதனால அவங்களுக்கு போலீஸ்ல எப்படியும் செல்வாக்கு இருக்கும்.... ஸோ நம்மால ஏதாவது பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணி பார்ப்போம்.  முடிஞ்சா நீ வா. இல்லாட்டி நானே பார்த்துக்கிறேன்

அவளது உறுதியை பார்த்து சிவா மலைத்துப் போய் காரை பல்லடம் ரோட்டில் விட்டான்.



பொங்கலூரை அடையும் பொது லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. காரை கொஞ்சம் முன்னதாகவே ஒரு வீட்டின் பின்புறம் நிறுத்தி விட்டு இருவரும் அந்த தோட்டத்தை நோக்கி நடந்தார்கள்.

காமினி தான் முன்னால் போவதாகவும்.  சிவாவை ஐந்து நிமிடம் கழித்து தொடரச் சொன்னாள்.
தோட்டத்து நடுவில் ஒரு ஓலை வேய்ந்த குடிசை இருந்தது.  சுற்றிலும் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. குடிசையின் பின்புறம் மெதுவாக சென்ற காமினி ஓலையை விலக்கி உள்ளே பார்த்தாள்.  உள்ளே கும்மிருட்டாக இருந்தது. இருட்டு பழக உள்ளே யாரோ படுத்திருப்பது தெரிந்தது.  சுற்றி அடி மேல் அடி வைத்து முன்புறமாக வந்தாள்.  வீடு பூட்டி இருந்தது. கையில் கிடைத்த ஒரு பெரிய கல்லை  எடுத்து பூட்டை உடைத்தாள். சிரமம் வைக்காமல் பூட்டு திறந்து கொண்டது. உள்ளே மெதுவாக சென்று பார்த்தபோது.....
அம்மா வைரத்தை கைகளும் கால்களும் கட்டப்பட்டு வாயில் துணியோடு பார்க்க முடிந்தது. கண்கள் மூடி இருந்தது.  பதறியபடி காமினி அம்மாவின் அருகில் போய் கட்டுகளை அவிழ்த்தாள். வாயிலிருந்த துணியை எடுத்துவிட்டு மயங்கி இருந்த அம்மாவை எழுப்ப முயன்றாள்.
அப்போது மண்டையை ஏதோ உறுத்த திரும்பினாள்.

சிவா கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தான்.

“சிவா நீயா... ஏன் என்னாச்சு?

“ரொம்ப கஷ்டப்பட்டு உன்னைத்தான் கடத்திட்டு வர பிளான் போட்டோம்.  ஆனா நீ தப்பிச்சிட்டே.. மீண்டும் எங்ககிட்டேயே வந்து நீயா மாட்டிகிட்டே.. ரொம்ப தேங்க்ஸ்.

அப்போது மறைவிலிருந்து இருவர் வெளிப்பட்டனர். அவர்கள் பார்த்தவுடனே  அவர்கள்தான் சஸ்பென்ட் செய்யப்பட்ட  போலீஸ்காரர்கள் -என்று தெளிவாக தெரிந்தது.

“ஏன் சிவா சும்மா பேசிட்டு நிக்கிற... கொடுக்கவேண்டியதை கொடுத்தா எல்லாம் தானா வரும் பாரு-என்றான் அதிலிருந்த ஒருவன்.

காமினி அசராமல் ....

“இத பார் சிவா.....ராஜாவை விட  உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயா இப்படி பண்ணே. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.. அப்பாட்ட சொல்லி உனக்கு எதாவது செய்யச் சொல்லறேன்

“ராஜா ஒரு பிழைக்கத் தெரியாத ரொம்ம்ப நால்லவன்.   அதெல்லாம் வேண்டாம்மா ... எனக்கு டயமண்ட் மட்டும் கொடுத்துடச் சொல்லுங்க அது போதும்

இன்னொருவன் பொறுமை இழந்து “இத பார் பகவத்கீதை கேக்க இது நேரமில்லை.  உடனே உங்கப்பாக்கு போன் பண்ணி டயமொண்டோடு இங்க வரச்சொல்லு”-என்றான்.

“இல்லாட்டி என்ன பண்ணுவே?-காமினி தைரியமாக கேட்டாள்.

ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அப்போது சடாரென்று எழுந்த அம்மா வைரத்தின் கையில் பெப்பர் ஸ்ப்ரே இருந்தது.
காமினி கண்ணை மூடிக்கொண்டாள்.  சர் சர் என ஸ்ப்ரே பண்ணியதும். மூவரும் கண்களை மூடிக்கொண்டு அலறினார்கள்.

அம்மா கையில் ஹேண்ட்பாக்கோடு மலங்க மலங்க நின்றிருந்தாள். 

எப்படி தனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை.  ஆபத்துக்கு உதவும் என்று காமினிதான் அந்த பெப்பர் ஸ்ப்ரேயை வாங்கி போட்டிருந்தாள்..

கிடைத்த சந்தர்ப்பத்தில் காமினியும் அவள் அம்மாவும் வெளியே ஓடி வந்தார்கள். மரத்தடியில் அம்பாசட்டர் நின்று கொண்டிருந்தது.  அதிர்ஷ்டவசமாக சாவி அதிலேயே இருந்தது. சுதாரித்துக்கொண்டு அவர்கள் மூவரும் வருவதற்குள் காமினி அம்மாவோடு மெயின் ரோட்டை அடைந்திருந்தாள்.

ரந்தாமனால் நம்பவே முடியவில்லை.
அம்மாவின் தீரத்தை பாராட்டினார்.
அம்மாவுடைய ஹேண்ட்பேக்-ஐ வாங்கி அதனுள்ளே இருந்து அம்மாவின் மேக்கப் செட்டை எடுத்தார்.  அதுனுள் இருந்த கண்ணாடியை லாவகமாக கழட்டவும் அதிலிருந்த வைரத்தை  உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார்.
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன்.
காமினியால் நம்பவே முடியவில்லை. 

“ஏன்பா வைரைத்தை இதுக்குள்ளே வெச்சீங்க?

“அம்மா ஒரு மேக்கப் பைத்தியம் என்பது உனக்கு நல்லா தெரியும்  அவளோடு  எப்பவுமே இந்த மேக்கப் செட் ஒட்டிட்டு இருக்கும்.  உங்கம்மா எப்போதுமே இதை மிஸ் பண்ணவே மாட்டா.  அதனால டயமண்டுக்கு சரியான பாதுகாப்பான இடம் அம்மாவோட மேக்கப் செட்தான். அது மட்டுமில்லாம இந்த செட் உங்கம்மாவுக்கு நான் வங்கி கொடுத்த கிப்ட்.  ஸோ அதை எப்போதும் பொக்கிசமா பாதுகாப்பாள்.   உங்கம்மா வைரம்தான் எப்போதும் டயமண்டுக்கு பாதுகாப்பு

அப்பா சொல்லச் சொல்ல ஆச்சர்யமாக கேட்டாள். 

காமினி கைகள்  விரிய அம்மாவையும் அப்பாவையும் கட்டிக்கொண்டாள்.





Tuesday, September 21, 2010

ஷகிலா-விஜய்-மானாட மயிலாட!

இதென்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா?   கொஞ்சம் மொக்கை மிக்ஸ் போட்டாலென்ன என்று தோன்றியதின் விளைவு ..

ஷகிலாவும் வசந்த் & கோ விளம்பரமும்....... 


          சனிக்கிழமை இரவு  தூக்கம் வராமல் டிவியை நோண்டிக்கொண்டிருந்த போது வசந்த் டிவியில் ஷகிலா நடித்த மலையாளப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது...  ஆஹா நல்ல படம் சிக்குச்சு என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.  நாயகனும்  ஷகிலாவும் பேசிக்கொண்டபடியே பெட்ரூமுக்குள் போகிறார்கள். இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்காருகிறார்கள்...  பேசியபடியே கைகள் இணைகின்றன... நாயகனின் கை நாயகியின் முகத்தை வருடுகிறது...நாயகியின் கண் சொக்குகிறது...இப்போது நெருங்கி உட்காருகிறார்கள்...நாயகன் அவளை அப்படியே கட்டிப்பிடித்து தன் முகத்தை நாயகியின் முகத்தருகே கொண்டு போகும்போது........ 

நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் வசந்த் & கோ என்று விளம்பரம் வருகிறது.......

           அடங்கொய்யால விளம்பரம் போட ஒரு நேரம் காலம் கிடையாதா....?.   இப்படி இந்த நேரத்துல விளம்பரம் போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கிட்டா எவன் வசந்த் & கோ கடைப்பக்கம் போவான்னு தெரியலை.....

(விளம்பரம் முடிஞ்சு பார்த்தா ரெண்டு பேரும் ரூமை விட்டு வெளியே வருகிறார்கள்.....எத்தனை பேர் சாபம் விட்டார்களோ என்று தெரிய வில்லை.)


விஜய்-னா விஜய்தான். 

         சரி இதுதான் இப்படியென்று  இதைத்தாண்டி வேறொரு சேனலுக்கு போனால் விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது.  மின்சாரக்கண்ணா என்று நினைக்கிறேன்.  கதாநாயகி ரம்பாவை நடுஹாலில் கட்டிப்போட்டு வில்லனும் அவன் ஆட்களும் சுற்றி உட்கார்ந்து வசனம் பேசியபடி இருக்கிறார்கள்.. திடீரென்று நம்ம இளைய தளபதி மாடி பால்கனியில் என்ட்ரி ஆகிறார்.  அப்படியே வசனம் பேசிக்கொண்டே படியில் இருந்து இறங்கி வருகிறார்.  என்னடா இது ஆச்சர்யமா இருக்கே ....பால்கனியில் இருந்து அப்படியே ஒரு டைவ் அடிச்சு குதிக்காமல்  சாவகாசமாக படியில் இறங்கி  நடந்து வருகிறாரே... விஜய் படத்துக்கே கேவலமாச்சே-  என்று யோசித்தபடி இருந்தேன்....

         இறங்கி வந்தவர் வில்லனை பார்த்து "என்னடா ஹீரோ டைவ் அடிக்காம படியில இறங்கி வர்றானு பார்க்கிறீங்களா.... டைவ் அடிச்சுட்டாப் போச்சு.."-என்று சொல்லியபடி ஏறிப் போய் அங்கிருந்து ஒரு டைவ் அடித்தார் பாருங்கள்.

          நான் அசந்து போய்விட்டேன்... எப்போதுமே விஜய் ஏமாற்றமாடார் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.  அப்படியே ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால்கூட அதை உடனே திருத்திக்கொள்வார் என்பது இதுதானோ...?

மானாட மயிலாட 
         மானாட மயிலாட பார்த்து ரொம்ப நாளாச்சு.... ஏனோ  இப்போதெல்லாம் அதுக்கு க்ரேஸ் குறைஞ்சு போச்சு... அகஸ்மாத்தாய் பார்த்துகொண்டிருந்தபோது கோகுலும் தமிழரசனும் ஜோக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.   கோகுலை எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டிருப்பார்.  சிரிக்கவும் வைப்பார். இதில் சக நடன மணிகளை இமிட்டேட் செய்து அனைவரையும் சிரிக்கவைத்து கொண்டிருந்தார்.  நல்லாத்தான் இருந்துச்சு.....

        திடீரென்று நிகழ்ச்சிக்கு இடையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் போட்டார்கள். அது முடிந்தவுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது.  அது ஏதோ நிகழ்ச்சி தயாரிப்பாளரின் (ஜே.வீ.மீடியாஸ்) சொந்த விளம்பரம் போல் தெரிகிறது... அதுக்காக இப்படியா.. பிரேக் என்றுகூட சொல்லாமலே  விளம்பரம் போடுவது.... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா......!  இந்த டெக்னிக்  எப்படி கலாநிதி மாறனுக்கு தெரியாம போச்சு...  ?


திருப்பூர் பந்த் 
        திருப்பூர் நகரமே  இப்போது நூல் விலை உயர்வால் விழி பிதுங்கிகொண்டிருக்கிறது.  அரசாங்கத்தின் பார்வையை திருப்ப என்னென்னவோ செய்கிறார்கள். ஒருபக்கம் ஜெயலலிதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வரும் 24-25 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் பந்த் பண்ணலாம் என்று டீமா சங்கம் அறிவித்திருக்கிறார்கள்...  ஆகவே மகா ஜனங்களே வரும் வெள்ளி, சனி,  ஞாயிறு மூன்று நாட்களும்  எல்லா டூரிஸ்ட் சென்டர்களும் திருப்பூர்காரர்களால் நிரம்பி வழியப் போகிறது.... உற்சாக பானம் மடை திறந்து ஓடப் போகிறது... வாழ்க பந்த்.


Sunday, September 12, 2010

காக்கா... காக்க...ஒரு குட்டிப் பையனின் குறும் படம்.





        எங்க வீட்ல ஒரு வாண்டு இருக்கான்.  அவன் எதையாவது சுறுசுறுப்பா – பரபரப்பா செய்துட்டே இருப்பான்.  இன்னைக்கு என்கிட்டே வந்து நான் ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருக்கேன் –என்று சொன்னான். எல்லாம் கலைஞர் டி.வி. நாளைய இயக்குனர் – நிகழ்ச்சியின் பாதிப்பு.. 
       என்னடா இது இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே “அதுக்கெல்லாம் கதை வேணுண்டா- என்று சொன்னேன்.
       “இப்ப வர்ற படத்தில எல்லாம் கதைய வெச்சுட்டா எடுக்கிறாங்க?-என்று எதிர் கேள்வி போட்டான்.   
        அது நியாயம்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே “அதுக்காக நாமளும் அப்படி இருக்கலாமா? என்றேன்.
        “அதுக்குத்தான் நான் ஒரு கதையை யோசிச்சு வைச்சிருக்கேன் என்றான்.
         “ஓகே கதையை சொல்லு என்றேன்.
         “சொல்லறேன்... ஆனா ஒரு கண்டிசன்.....நீங்கதான் தயாரிப்பாளரா இருக்கனும், சம்மதமா?-என்று ஒரு பிட்டைப் போட்டான்.
         “அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்...முதல கதையைச் சொல்லு... கதை நல்லா  இருந்தா மேற்கொண்டு பார்க்கலாம் என்றேன்.
        “ ஓகே கதை கேக்க நீங்க ரெடியா?-என்று எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு இரண்டு கைகளையும் விரித்த  மாதிரி வைத்துக்கொண்டு  பாரதிராஜா போஸில் நின்றான்.
       “ஸீன்  ஓபன் பண்ணுனா என்று கைகளை அப்படியே மேலே கொண்டுபோனான்.
       “அபூர்வ ராகங்களில் ரஜினி கேட்டை தள்ளிட்டு வர்ற மாதிரி நம்ம ஹீரோ வர்றான்..
       “யாருடா ஹீரோ...?”-என்று கேட்டேன்.  எங்கே ஒரு பெரிய ஹீரோவை போட்டு நம்ம பட்ஜெட்டை எகிற விடுவானோ என்று பயம் எனக்கு.
      “பெரிய ஹீரோவை போட்டு படம் எடுக்கிற அளவுக்கு உங்க கிட்ட பணம் இல்லைன்னு எனக்கு தெரியும்.  அதனால ஹீரோவுக்கு ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுங்க போதும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “-என்றான்.
      “சரிடா...யாரு ஹீரோ  ?
       “நான்தான்...-என்ற போது நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.
       “சரி கதையைச் சொல்லு.. அப்புறம் பார்ப்போம்.-என்றேன்.
கதை சொல்ல ஆரம்பித்தான்..
      “ஒவ்வொருத்தனுக்கும் வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கும்.  ஆனா நம்ம ஹீரோவோட லட்சியம் ரொம்ப சிம்பிளானது.....ஆனா அதை அடைய அவன் எடுத்துக்கிடுற முயற்சிகளும், எதிர்படுகிற தடைகளும்தான் கதை.
      “என்னடா லட்சியம்?
      “ஒரு உண்டி வில்லால கல்லை வைத்து கரண்டு கம்பியில் உட்கார்ந்து இருக்கிற காக்காவை  அடிக்கனும்.- இதுதான் அவன் எடுத்திருக்கிற லட்சியம்.
     “கரண்டு கம்பியில உட்கார்ந்து இருக்கிற காக்காவை  அடிக்கிரது  எல்லாம் ஒரு லட்சியமாடா? என்று கேட்டேன்.
     “இடையில பேசாம கதையை கேக்கணும்-என்று சொல்லி கதையை தொடர்ந்தான்...                         
      “பரீட்சை சமயத்துல அவன் மொட்டை மாடிக்கு போய் படிக்கறது வழக்கம்.  ஆனா அங்க படிக்கறது மட்டும் நடக்காது.  படிக்கறது மட்டும் அல்ல படிக்கறதே நடக்காது....உண்டி வில்லால அங்க வர்ற போற காக்கையை கல்லால அடிச்சு விரட்டீட்டு விளையாடுவான். சில நேரங்களில் உண்டி வில்லால கரண்டு கம்பி மேல உட்கார்ந்து இருக்கிற காக்கையை அடிப்பான்.  ஆனா எந்த சமயத்துலயும ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது.   இவனெல்லாம் எங்க அடிக்கப்போறான் என்று தில்லாக காக்கா உட்கார்ந்து பார்த்தபடி இருக்கும்.
        கடைசியில முடிவு என்னாச்சுன்னா ஒரு காக்கையை கூட இவன் அடிச்சதே இல்லை.... ஆனா பரீட்சைல கோட்டை உட்டதுதான் மிச்சம்.... இதுக்காக அவங்க அம்மா அவனை விரட்டி விரட்டி காக்கையை அடிச்சதை விட கேவலமா அடிச்சாங்க....            அடி வாங்கிய நம்ம கதா நாயகன் அழுதபடியே மொட்டை மாடிக்கு போனான்.  அப்ப ஒரு காக்கா வந்து கரண்டு கம்பி மேல உட்கார்ந்தது. கா  கா  என்று கத்தியது,  அவனுக்கு “என்னையா அடிக்கப் பார்த்த... என்று  கிண்டலா சிரிச்ச மாதிரி தெரிஞ்சது.  இதனால ஆத்திரம் அடைந்த நம்ம கதா  நாயகன்      “சிரிப்பா சிரிக்கிற...என்று உண்டி வில்லை எடுத்து ஒரு கல்லை வைத்து அத்தனை ஆத்திரத்தையும் அதில் செலுத்தி “இன்னைக்கு    நீ  தந்தூரி ஆகப் போற... என்று சொல்லி கல்லை விட்டான்.              காக்கா  அசந்து   இருந்து இருக்கும் போல...கல்லடி பட்டு திருகி கீழே விழுந்தது...ஆகா நான் ஜெயிச்சுட்டேன்... என்று கத்தி ஆர்பபாட்டம் செய்தான்.   இதுக்கப்புறம்தான் கிளைமேக்சே... 
உடனே எங்கிருந்துதான் அத்தனை காக்கா வந்ததோ தெரியவில்லை.....ஒவ்வொன்றாய் வந்து அவன் தலையில் தபேலா  வாசித்தது.  அதிலிருந்து தப்பிக்க அவனும் தன்னை விஜய்-ஆக நினைத்துக்கொண்டு கையாலும் காலாலும் உதைக்கப் பார்த்தான்.  அதற்குள் அவனுடைய அம்மாவும் அண்ணனும் ஓடி வந்து காப்பாத்தினார்கள்.
இதுதான் கதை... என்றான்.
        “எப்படி இருக்கு?என்று என் முகத்தைப் பார்த்தான்.
        “நல்லாத்தான் இருக்கு.... ஆனா காக்காவா  யார் நடிக்கிறது...உனக்கு வேணா மேக் அப் பண்ணி பார்த்துடலாமா ?
        “அதெல்லாம் அனிமேசன்ல பண்ணிக்கலாம்.-என்ற அவன் தன்னம்பிக்கையைப் பார்த்து அசந்து நின்றேன்.
        “என்ன நீங்க தயாரிக்க ஒத்துக்கிறீங்களா...?
        “ஓகே எப்ப ரிலீஸ்?-என்றேன்....
        “எந்திரன் எப்ப ரிலீசோ  அப்பத்தான் நம்ம படமும் ரிலீஸ்...
        “படத்து பேர் என்ன?
        “காக்கா .... காக்க...

 

Thursday, September 9, 2010

வன வாசம்

தசரதன்
கைகேயிக்கு
கொடுத்த வாக்கு
 ராமனுக்கு-
 வனவாசம்!

தருமன்
சகுனிக்கு
கொடுத்த
வாக்கு,
பாண்டவர்க்கு -
வனவாசம்!

பாவம்
இங்கே
நாங்கள்
கொடுத்த வாக்கு
எங்களுக்கே
வனவாசம்!


பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா  

Friday, September 3, 2010

நடுநிசி நாய்கள்


















கடலில்
விழுந்து
காணாமல்
போன
கதிரவனுக்காக
 உலகம்  எனும் காதலி
உடுத்தும்
பனிரெண்டு
மணி நேர
கருப்பு உடை-
இருட்டு !

நடு நிசியில்
நிலவுக்(கள்ளக்)காதலன்
சற்றே
சிரித்தால் போதும்
முகத்திரை
விலக்கி
முறுவல்  காட்டுவாள்.














பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா.....


Wednesday, September 1, 2010

திருப்பூரைக் காப்பாற்றுங்கள்



பருத்தியின் வெண்மை ஆள்வோர் நெஞ்சில் இல்லையே...


           திருப்பூரில் ஏற்றுமதி தொழில் கரைந்து காணமல் போகப்போகிறது....  காரணம், அரசாங்கமும் அதன் கொள்கைகளுமே.

         நானும் ஒரு ஏற்றுமதி தொழில் செய்கிறவன் என்பதால் இன்றைய சூழ்நிலையை சரியாக என்னால் கணிக்கமுடிகிறது.

         ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தத்தித் தவழ்ந்து கொண்டிருந்த தொழில் டையிங் பிரச்சினையால் படுத்துகொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆரம்பித்த நூல்விலையேற்றப் பிரச்சினையால் முடங்கிப்போன தொழில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையால் நூல் விலை சற்று இறங்க தொழில் கொஞ்சம் மூச்சு விடத் தொடங்கியது.

        ஆனால் அரசாங்கம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துள்ளது.  தனது ஏற்றுமதி கொள்கைகளை மாற்றிய பின்னர் தைத்த உடைகளாக ஏற்றுமதி செய்வதைவிட நூலாகவே ஏற்றுமதி செய்ய முன்னுரிமை அளிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவு திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

        நூல் மில்கள் தற்போதைய விலையைவிட பத்து ரூபாயிலிருந்து பதினைந்து  ரூபாய் வரை விலையை ஏற்றும்.  இந்த விலையை அடிப்படையாக கொண்டு பையர்களுக்கு கொட்டேஷன் கொடுக்கும் பட்சத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பொய் விட வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை கொடுத்தாலும் கூட நூல் கிடைக்காத நிலை வரப்போகிறது. அப்படிப் போனால் தூங்கா நகரம் தூங்கி வழிய வேண்டியதுதான்.

         இப்படி ஒரு ஏற்றுமதி கொள்கையால் அரசாங்கம் மறைமுகமாக சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  தற்போதைய நிலவரப்படி சீனாவில் பருத்தி விளைச்சல் குறைவாகவே உள்ளது.  அதனால் தன்னுடைய பருத்தி தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியுள்ளது. ஆகையால் என்ன விலை கொடுத்தாலும் நம் வளங்களை வாங்கியே தீரும்.

          ஏற்றுமதியை விடுங்கள்... உள்நாட்டு பனியன், ஜட்டி உற்பத்திக்கும் இதே கதைதான்.  நூல் விற்கும் விலைக்கு ஏற்றபடி விலையை ஏற்றவே செய்வார்கள்.  அதனால் விற்பனை குறையும்.  அதை நம்பி நிற்கும் ஏராளமான தொழிலாளர்களின் நிலைமை நடுத்தெருவில்தான்.

          ஆங்கிலேயர் காலத்தில்தான் இங்கிருந்து பருத்தியாக லண்டன போய் ஆடையாக இந்தியாவுக்கு கொண்டுவந்து நமக்கே விற்பார்கள். அந்த காலம் மறுபடியும் வரப்போகிறது.  இந்த நிலை மாறும் வரை நாம் அனைவரும் அம்மணமாகவே நிற்க வேண்டிவரும். நெய்பவனுக்கு உடுத்த துணியில்லை என்பது எந்தக்காலத்திலும் மாறாது போலிருக்கிறது.

          திருப்பூரைப் பொருத்தவரை இங்கு மண்ணின் மைந்தர்கள் குறைவுதான். தமிழ்நாட்டின் எல்லா பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்து கிடக்கிறார்கள். ஏன் இப்போது பீகாரில் இருந்தும், ஒரிஸ்ஸாவில் இருந்தும்கூட ஏராளமான மக்கள் வந்து வேலை செய்கிறார்கள். 

 அவர்களுடைய பொருளாதாரம் இந்த தொழில் சார்ந்தே உள்ளது.  (இன்னும்கூட ஒரு தமிழ்நாடும்  ஒரு பீகாரும் திருப்பூருக்கு தேவைப்படும்)

அவர்கள் அத்தனை பேருடைய நிலையும் கேள்விக்குறிதான்.


        உடனடியாக திருப்பூரில் உள்ள தொழில் சார்ந்த சங்கங்களும், மக்களும் விழித்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினால்தான் அரசியல்வாதிகள் இறங்கி வருவார்கள்.  டீமா (Tiruppur Export and Manufactures Association) சங்கம் முழுமூச்சாக இறங்கி விவாதித்துக கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

        அரசியல்வாதிகளே.... எதையாவது செய்து இந்த தொழிலை  அழிந்துபோகாமல் காப்பாற்றுவீர்களா?.....
உருகி வழியுமுன்...


பிரியாத ப்ரியங்களுடன்
வெண் புரவி அருணா...
NEST FASHIONS 

Monday, August 30, 2010

பூஜை இல்லாமல் ஒரு புது (வலை)மனை புகு விழா

அன்பு பதிவுலக வாசகர்களே மற்றும் பதிவர்களே ....

நேற்று திருப்பூர் சேர்தளம் அறிவித்திருந்த வலைபதிவர் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற நானும் சென்றிருந்தேன்.  அங்கு நிறைய வலைப்பதிவர்களை காண முடிந்தது.
சாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும், முரளிகுமார் பத்மநாபனும், தல  வெயிலானும், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகியும்,  ராமன் மற்றும் கடலையூர் செல்வமும்(யாரையாவது விட்டிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க) எங்களை ஒரு குழந்தையைப் (எனக்கே இது கொஞ்சம் ஓவரா படுதுதான்) போல பாவிச்சு ஒவ்வொண்ணா சொல்லிகொடுதாங்க.
அதுவும் பரிசல்கார  அண்ணாச்சி மணல்ல ஆவன்னா போடற  மாதிரி கையை புடிச்சு சொல்லி கொடுக்காத குறைதான்.

அப்பவே வெண் புரவி என்கிற பெயரில் ஒரு புது வீடு (ப்ளாக்) கட்டி புது மனை புகு விழாவும் அமர்க்களமா நடந்துச்சு.
நானும் வெண் புரவியில் அட்டகாசமாய் ஏறி  அபூர்வ ராகங்கள் ரஜினி (அப்ப பரிசல்காரன் கே.பாலச்சந்தர்-ஆ) மாதிரி கேட்-ஐ உடைச்சிட்டு ஒரு என்ட்ரி கொடுத்திருக்கேன்.

இதை நல்லவிதமா உபயோகிச்சுக்கிட்டு   உங்களை கெட்டவிதமா  இம்சை பண்ணப் போறேன்.

எல்லாரும் காத்திருங்க.....

பி.கு.: (என்ன அண்ணாச்சிகளா இப்ப நீங்க வச்ச டெஸ்ட்-ல நான் பாஸா, பெயிலா. கொஞ்சம் மானாட  மயிலாட ரம்பா மாதிரி மார்க் போட்டு சொல்லுங்க).

அன்புடன்
வெண் புரவி அருணா  

Sunday, August 29, 2010

தொடக்கம்

வலைப்பதிவு என்னும் அடர்ந்த கானகத்துக்குள் வேட்டையாட வெண்புரவியில் ஏற்றி அனுப்பி வைக்கும் சேர்தளத்துக்கு நன்றி!