PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, March 21, 2012

MICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உலகம்!


நாம் என்றாவது ஒரு எறும்பின் பயணத்தை தொடர்ந்திருக்கிறோமா? சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா?  மழை வந்த பின்னால் எறும்புக்கு எப்படி இறக்கை முளைக்கிறது?

இப்படி பல கேள்விகள், நம் சிறுவயது சந்தேகங்களின் அவிழ்க்கப்படாத  முடிச்சுகள் எவ்வளவோ இருக்கின்றன.  அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமான செய்திப்படம்தான்-MICRO COSMOS.

இதை செய்திப்படம் என்று சொல்வதில் எனக்கு சம்மதமில்லை.  இது ஒரு முழுநீள சித்திரம் என்றே சொல்வேன்.  இதில் காதல் உண்டு.  சண்டை உண்டு.  வாழ்வுக்காகப் போராடும் போராட்டம் உண்டு.  கூட்டமாய் சாவும் மனதைப் பிழியும் சோகக்காட்சிகள் உண்டு. படத்தை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் முடியாமல் எழமாட்டீர்கள் என்பதை திண்ணமாகக் கூறமுடியும்.

படத்தின் ஆரம்பத்தில் காமிரா பிரபஞ்சவெளியில் துவங்கி மேகக்கூட்டத்தை கடந்து காட்டைக் காட்டி புல்வெளியில் இறங்கி ஒரு புல்லின் மீது நிற்கும்.  காமிரா அந்தப் புல்லை பிரமாண்டமாய்க் காட்டும். அந்த ஒற்றைப் புல்லைப் பற்றியபடி ஒரு வெட்டுகிளியின் கால்கள் மட்டும் நகரும்.

ஒரு ரஜினி படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி அருமையாக இருக்கிறது. ஒரு எறும்பு மெகா சைசில் புல்லுக்கு இடையில் நகர்ந்து செல்லும்.  ஒரு காண்டாமிருகத்தின் கொம்புகள் மட்டும் தெரியம்.  அதை முழுமையாகக் காட்டும்போது ஒரு வண்டாய் மாறும்.

பூ ஒன்று அழகாக விரியும்.  உள்ளிருந்து வண்டொன்று ஓடும்.  பூவுக்குள்ளிருந்த தேனை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது மாதிரி வண்டுகள் உறிஞ்சும் காட்சி, அப்போது நடக்கும் மகரந்த சேர்க்கை, பனித்துளியை குடிக்கும் எறும்பு, சூரிய வெப்பத்தில் ஆவியாகும் பனித்துளி, எறும்பும் வண்டும் சண்டையிடும் காட்சி என காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறார்கள்.

நத்தைகள் இரண்டு ஓருயிர் ஈருடலாய் ஆலிங்கனம் செய்யும் காட்சி...நாம் எந்தப் படத்திலும் பாராதது.  அதற்கான பின்னணி இசை பொருத்தமானது.  மணிரத்தினத்தின் ஓம் நமஹா பாடல் நினைவுக்கு வருகிறது. இதை மீறியொரு காதல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் வந்ததில்லை எனலாம்.

குளவி ஒன்று முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.  அது வெளியே வந்ததும் அதன் முதல் உணவே அந்த முட்டை ஓடுதான் எனும்போது அந்த குளவிக்கு அந்த உணவை தின்னவேண்டும் எனும் சிஸ்டத்தை நினைத்து ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது.

எட்டுக்கள் பூச்சி தன்னுடைய உணவை வேட்டையாடும் விதம் மற்றொரு ஆச்சர்யம்.  வலையை விரித்து காத்திருக்கும் சிலந்தி, அதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சியை உடனே நான்கு உருட்டு உருட்டி தனது வலையில் pack செய்து கொள்கிறது.  பிறகு அதன் ரத்தத்தை மட்டும் உறுஞ்சிக் கொள்கிறது.

பிறகு பூ வாடுகிறது.  கோடை தலை விரித்து ஆடுகிறது. நிலங்கள் வெடிக்கிறது.  எறும்புகள் சின்ன ஒரு குழியில் இருக்கும் கொஞ்சூண்டு தண்ணீரை குடிக்கிறது.  ஒரு தாய் எறும்பு தனது பிள்ளைக்கு தண்ணீர் ஊட்டிவிடும் காட்சி அற்புதமானது.  ஆபாவாணன் ஊமை விழிகளில் காட்டுவது போல கம்பளிப் பூச்சி ஒன்று தொலைவில் வருகிறது.  அருகில் வரும்போது நூற்றுக்கணக்காக மாறுகிறது.  அதுவும் உடையாத ஒன்றன் பின் ஒன்றான வரிசையில் வருகிறது.  மற்றொரு திசையில் வரும் இன்னொரு பூச்சி வரிசை இடையில் அழகாகச் சொருகி செல்லும் காட்சி அற்புதமானது.  ஊர்வலம் சென்ற பூச்சிகள் ஓரிடத்தில் இரை கிடைக்காததால் ஒன்றன் ஒன்றன்மீது விழுந்து அத்தனையும் இறந்து போகின்ற காட்சி உண்மையில் நெகிழச் செய்கிறது.

எறும்புகளின் வாழ்க்கை முறை அழகாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.  அது உணவை சேமிக்கும் முறை.  தனது வலைக்குள் உணவைக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் முறை.  திடீரென்று மழை வந்து அத்தனையும் வீனாதல்.  எறும்புகளுக்கு இறக்கை முளைத்து பறந்து செல்லுதல்,  எறும்புகளின் பார்வையில் வளைக்குள் இருந்து பறவையின் அலகு ஒன்று உள்ளே வந்து கொத்திச் செல்வது என்று அற்புதமாக இருக்கிறது.

சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டு ஒன்று அதன் பாதையில் எத்தனை மேடு பள்ளங்கள்.  அவற்றை எப்படி சமாளித்து உருட்டிச் செல்கிறது.  அது போகும் வழியில் ஒரு செடியின் முள்ளில் சாண உருண்டை மாட்டிக்கொள்ள சற்றும் மனம் தளராமல் முள்ளிளிருந்து அதை விடுவித்து எடுத்துச் செல்லும் காட்சி ஒரு அழகான த்ரில்லிங்கான கவிதை.

மாமிசம் தின்னும் தாவரம் ஒன்று தனது பூவை விரித்து காத்திருக்கிறது. வாசனை தேடி வருகின்ற பூச்சியை மடக்கிப் போட்டு பூவுக்குள் மூடி தின்னும் காட்சி இதுவரை நாம் பார்த்திராதது.

இன்னும் எதிரியிடம் தப்பிக்க பந்து போல் சுருண்டுகொள்ளும் வண்டு,  இலையைத் தின்னும் புழுக்களின் கூட்டம். பூவுக்குள் உறங்கும் வண்டு,  இரவுக்காட்டில் உறங்கும் ஒவ்வொரு பூச்சிகள் என மனதை விட்டு அகலாத அற்புதங்கள் நிறைந்தது இந்தப் படம்.

இறுதியில் கொசுவின் பிறப்பு அற்புதங்களின் உச்சம்.

நண்பர்களே மனிதனுக்குத்தான் ஆறறிவு எனும் தியரி இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் உடைந்து போகும் என்பது உறுதி.  படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

இப்போதைக்கு அதன் ட்ரைலர் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=76R2EKEnoJQ

 

Monday, March 19, 2012

கணினியும் கலப்பையும்- கருத்தரங்கம்.


நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.
பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது.  இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.

முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார்.  கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார்.  அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது.  அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.

 ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது.  ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது.  எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது.  பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது.  ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது.  நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன்.  ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது.  நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.

எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது.  புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது.  இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது.  அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன்.  ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது.  எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது.  அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது.  ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது.  அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன்.  ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன்.  ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது.  எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது.  அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது.  கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது.  (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே).  கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது.  பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது.  ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது.  ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது.  கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.

அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார்.  அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.


"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம்.  காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார்.  அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன்.  தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது.  (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார்.  இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார்.  அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள்.  இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது.  நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள்.  ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை.  இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள்.  நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"

இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.

அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார்.    இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர்.  எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.  எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும்.  மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார்.  மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார்.  நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.  எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.  நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.



தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார்.  ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார்.  இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.

சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.

இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும்.  நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று.  நீங்கள்?