PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, February 7, 2014

BEKAS (2012) - அழுக்குப் பசங்களின் அமெரிக்கப் பயணம்.

இன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் உலக சினிமாவின் வரிசையில் BEKAS (2012)...



இன்று தமிழ்நாட்டில் ரஜினி, விஜய் சூர்யா மோகத்தில் எத்தனையோ சிறுவர்கள் திருட்டு ரயிலேறி அவர்கள் வீட்டின் கேட்டை மட்டும் பார்த்து வரும் கதைகளை  தினசரிகளில் படித்துள்ளோம்.

இது ஈராக் நாட்டில் 1990ம் ஆண்டில் நடக்கிற கதை.  டானா, ஜானா எனுமிரு பெற்றோர் இல்லாத சகோதர சிறுவர்கள் ஷூ பாலீஸ் போட்டு பிழைத்து வருகிறார்கள்.  அவர்கள் ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் ஓடும் சூப்பர்மேன் படத்தை திருட்டுத்தனமாக பார்க்கிறார்கள்.  தியேட்டர்காரர்களிடம் அடி உதை வாங்கி சோர்ந்து போய் ஒரு மலையின் மீது நின்று சபதம் எடுக்கிறார்கள்.  மலையின் மறுபுறம் இருக்கும்   அமேரிக்கா போய் எப்படியும் சூப்பர்மேனை பார்த்துவிடுவது என்று.   சூப்பர்மேனை மட்டும் பார்த்துவிட்டால் தமது துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும், தனது எதிரிகளை வென்றுவிடலாம்  என்று நம்புகிறார்கள்.  எதிரிகளின் லிஸ்டில் முதல் பெயர் சதாம் ஹுசேன்.  அமேரிக்கா போக  பாஸ்போர்ட் வேண்டும்,  பாஸ்போர்ட் எடுக்க காசு வேண்டும்.  அதற்கு நிறைய பாலீஸ் போடவேண்டும் என்று சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

பாலீஸ் போட வரும் ஒரு வாத்தியார் மகளிடம் அண்ணனுக்கு காதல் வேறு.. அவளை தனியே சந்தித்து முத்தம் வரை காதல் வளர்ந்துவிடுகிறது.  காதலி ஏரியில் குளிக்கும்போது தங்கச் செயினை தொலைத்து விட,  டானா ஓடிப்போய் வீராவேசமாக நீச்சல் தெரியாமலே ஏரியில் குதித்துவிட அருகிலிருந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள்.  ஆனால் அந்த தங்கச் செயின் இப்போது அவன் கைகளில், காதலியோ ஊரைவிட்டே போய்விட்டாள்.

இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு கண் தெரியாத பெரிசு போய்ச் சேர்ந்துவிட இனி நாம் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று இருவரும் முடிவுக்கு வருகிறார்கள்.  கையிலிருக்கும் கொஞ்சம் காசைப்போட்டு ஒரு கழுதையை வாங்கி அதற்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயரிட்டு கழுதை மேலேறி அமெரிக்காவுக்கு பயணமாகிறார்கள்.

போகிற வழியில் கைவண்டி இழுத்துச் செல்லும் ஒரு பெரியவரைப் பார்த்து தன் கழுதையை அந்த வண்டியில் பூட்டி மூவரும் வண்டியில் செல்கிறார்கள். ஒரு இடத்தில் பெரியவர் போய்விட கழுதையில் ஏறி அந்த நாட்டின் எல்லையை அடைகிறார்கள்.  எல்லைப் பதுகாவலுக்கு நிற்கும் போலீஸ் சோதனையைத் தாண்டி நெடுநெடுவென போகும் இருவரும் தடுத்து நிறுத்தும் போலீசிடம் நாங்கள் அமெரிக்காவுக்கு போகவேண்டும் வழி விடுங்கள் என்று மிரட்ட சிரித்துக்கொண்டே போலீஸ் திருப்பி விரட்டுகிறார்கள்.

அங்கே ஒரு கடத்தல் கும்பலிடம் எப்படியாவது எல்லை தாண்டி விடச் சொல்ல கூலியாக தங்கச் செயினை தருவதாகச் சொல்கிறார்கள்.   காலை ஆறு மணிக்கு வரச் சொல்கிறார்கள்.  அதற்கிடையில் தனது பழைய காதலியைப் பார்த்துவிட்டு அவள் பின்னால் போய்விடுகிறான் டானா.  அவள் காலை ஆறு மணிக்கு வீட்டருகே வருமாறு சொல்லிவிட்டு போய்விடுகிறாள்.  இருவரும் அவள் வீட்டெதிரேயே தங்குகிறார்கள்.  டானா மட்டும் காதலியை ஜானாவுக்கு தெரியாமல் போய்ப் பார்த்து தங்கச் செயினை திருப்பித் தருகிறான்.  திரும்பி வந்து பார்த்தால்  தங்கச் செயின் இல்லாதலால் கடத்தல் கூட்டம் இவர்களை விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.

பிறகு கழுதையை விற்று காசு பண்ணிவிட்டு கோகோகோலா வேனில் ஏறிப் போய்விடலாம் என்று திட்டம் போடும்போது இருவரும் பிரிந்து விடுகிறார்கள். தம்பி மட்டும் வேனின் அடியில் தொற்றிக்கொண்டு எல்லைவருகிறான். அண்ணனும் எப்படியோ அங்கு வந்து விட இருவரும் சாதுர்யமாக எல்லையைக் கடக்கிறார்கள்.

ஓர்  இடத்தில் கடத்தல் கும்பல்காரனை பார்த்துவிட அவர்களை காரின் டிக்கியில் பொரி  மூட்டையில் ஒளிந்து செல்கிறார்கள்.  மீண்டும் சோதனை போலீசாரிடம் தப்பித்து கொஞ்ச தூரம் போய் இவர்களை இறக்கி விட்டு போய் விடுகிறார்கள்.

அமேரிக்கா அருகில் வந்து விட்டதாக நம்பி இருவரும் காட்டுவழியே நடந்து வருகிறார்கள்.  அப்போது அண்ணன் புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடியில் கால் வைத்துவிட அவனைக் காப்பாற்ற தம்பி ஊருக்குள் போய் உதவி கேட்டு அலைகிறான்... கடைசியில் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்களா,  கண்ணிவெடி டானாவை என்ன செய்தது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் Karzan Kader நல்ல குசும்பர் என்று தெரிகிறது.  அமெரிக்காவையும் அதன் கொள்கைகளையும் அழகாக பகடி செய்கிறார்.  கழுதைக்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயர் சூட்டி அதை கலாய்ப்பதும்,  சிறுவன் ஜானா மூத்திரம் பேயும்போது ஜாக்சனின் நடன அசைவை பிரதிபலிப்பதும் சிரித்து மாளாது.  ஒற்றைக் குச்சியை  முறிப்பதெனில்  சுலபமாக உடைத்துவிடலாம்.  கற்றைக் குச்சிகளை உடைப்பது மிகவும் சிரமம் எனும் ஜென் கதையை ஊடே அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

அச்சமில்லை அச்சமில்லை படத்தில் பாலச்சந்தர் சுதந்திரம் என்று ஒரு பாத்திரத்தை ஒன்றை உருவாக்கி அவ்வப்போது கலாய்த்திருப்பார்.  அது மாதிரிதான் இந்த ஜாக்சன் கழுதை..

மசூதியில் பிரார்த்தனை செய்யும்போது ஜானா செய்யும் குறும்புகள், கண் தெரியாத பெரிசிடம் என்னை மகனே என்று அழைக்க மாட்டாயா என்று கேட்பது என்று ஒரு தேர்ந்த இயக்கத்தைக் காணலாம்.  இது இவர் வாழ்வில் நடந்த கதையே என்கிறார்.  தான் பட்ட கஷ்டங்களையே நகைச்சுவையாக சொல்கிறார்.

சிறுவர்களாக நடித்திருக்கும் Zamand Taha, Sarwar Fazil இருவரின் நடிப்பும் அருமை.  அதுவும்  ஜானாவாக வரும் சிறுவனின் நடிப்பு நம்மை சொக்க வைக்கிறது.  அவனின் கோபம, அன்பு, மிரட்டல் .... எல்லாப் பாவங்களும் அவன் முகத்தில் ஊற்றாய் வருகிறது.படத்தை தனது பிஞ்சு கைகளாலேயே தாங்கிச் செல்கின்றனர்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கும்  இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.



 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......