PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, August 24, 2011

படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(1)

 நேற்று சட்டமன்றத்தில் காமராஜரா? எம்.ஜி.ஆரா? என்று பட்டிமன்றம் நடந்தது.  உண்மையை என்போன்ற சிலரால் மட்டுமே உணரமுடியும்...


நான் என்னுடைய படிப்பை படித்தது ஒரு மிகப் பெரிய போராட்டத்துக்கு இடையில்தான்.  அந்தக் கதையைச் சொல்றேன் கேளுங்க...


நான் எனது வீட்டில் இரண்டாவது பையன்.  எனது அண்ணன் என்னிலிருந்து நான்கு வயது வித்தியாசம். எனக்குப் பிறகு இரண்டு வயது வித்தியாசத்தில் எனது தம்பி.  எனது அப்பா ஒரு சுகவாசி.  இன்ன வேலை என்று கிடையாது.  எல்லா வேலையும் செய்வார். ஆனால் செய்யமாட்டார். 


 அவருக்கென்று பத்து பனிரெண்டு ஆடுகள் உண்டு.  அதை அவிழ்த்து காட்டுக்குள் விட்டுவிட்டு ஜாலியாக சுற்றுவார்.  மாலை ஆனதும் ஆடுகளை தேடிப் பிடித்து ஒட்டிவந்து கொட்டிலில் அடைப்பார். சில சமயங்களில்  எதாவொரு தோட்டக்காரன் தோட்டத்தில் பயிரை மெய்ந்துவிட்டது என்று ஆட்டைப் பிடித்து  பிடித்து கட்டிவிடுவான்.  பிறகு பஞ்சாயத்து பண்ணி ஆட்டை ஒட்டிவருவார். 

இதுதான் அவருடைய தொழில்.  நிரந்தர வருமானம் கிடையாது.  ஆகையால் எனது அம்மா கட்டாயம் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம்.  எனது அம்மா அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் இல்லை. 


 பிறந்தது முதலே எதாவொரு வேலைக்குச் சென்றுதான் வயிற்றை கழுவிப் பழக்கப்பட்டவர்கள்.   ஆனால் என்ன அப்போது எழுபதுகளில் உடல் உழைப்புக்கு கிடைத்ததோ சொற்ப்பக்கூலிதான்.  அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் காட்டுக்கு போய்விட்டால் வீடு வர மதியம் மணி இரண்டு மூன்று ஆகி விடும்.  கூலி இரண்டு ரூபாய்.  கடுமையான உழைப்பு. இந்த பணம்தான் ஒரு குடும்பைத்தையே ஓட்டவேண்டும்.


எனது தம்பி பிறந்த பிறகு அவனை பார்த்து வளர்க்கவேண்டிய பொறுப்பு எனது அண்ணன் தலையில் விழுந்தது.  அம்மா வேலைக்கு போக அண்ணன் தம்பியை வளர்க்க நான் பள்ளிக்கூடம் போனேன்.  அப்போது காமராஜ் மதிய உணவுத்திட்டம் இருந்த காலம்.  நானெல்லாம் சாப்பிடுவதற்க்காகவே பள்ளிக்கூடம் போகவேண்டியதாக இருந்தது.  ஆனால் சும்மா சொல்லக் கூடாது.  ஒரு நேரம் சாப்பிட்டாலும் நன்றாக வயிறார சாப்பிட முடிந்தது.  


காமராஜரைப் பொருத்தவரையில் எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு பசிப்பிணியைப் போக்கி படிப்பினை கொடுத்தவர்.  எனது வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது.  அரிசிச் சோறு என்பது கனவாகவே இருந்தது. ஏதாவது பண்டிகை காலங்களில் மட்டுமே அதை கண்ணில் காண முடிந்தது.  ராகிக் களியும், கம்பஞ்சோறும்,  கேழ்வரகு சோறும் தான் எங்களது அன்றாட மெனு.  


  அப்போதெல்லாம் நான் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு மிக அதிகமாக இருக்கும்.  அடுத்தவேளை ஒன்றும் கிடைக்காதது போல நிறைய சாப்பிடுவேன். என்னுடைய வயிறு மட்டும் தனியாக முன்னாடி துருத்திக் கொண்டிருக்கும்.
(இப்போ மட்டும் என்ன வாழுதாம்),  கல்யாண வீட்டுக்கெல்லாம் போனால் முதல் பந்தியிலே உட்கார்ந்து கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி வயிறு நிறைந்து, உணவுக்குழாய் நிறைந்து மூக்கு வரை நிறையும் வரை ரெண்டு பந்தியானாலும் சாப்பிடாமல் எழுந்து வரமாட்டேன்.  மற்றபடி இலையில் இருக்கும் மற்ற சைடு டிஸ்களை(போண்ட, இனிப்பு, பழம்) மேல் பாக்கெட்டிலும் கீழ் பாக்கெட்டிலும் பார்சல் பண்ணி எடுத்து வந்து கொஞ்சம் குறைந்ததும்  நிரப்பிக் கொள்வேன்.

கூப்பன் அரிசி சோறுஎன்பது கொஞ்சம் கூடுதல் தகுதியான உணவு.  அதற்கும் ரேசன் கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு கிலோமீட்டருக்கு  லைன் நிக்கும். ரேசன் கடைக்கோ பக்கத்துக்கு ஊருக்குத்தான் போகவேண்டும்.  அந்த அரிசியில் இரண்டு வகை இருக்கும்.  குருணை அரிசியும், முழு அரிசியும் கொடுப்பார்கள்.  குருணை அரிசியில் ஒருவிதமான ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும்.  அதையும் வாங்கி சாப்பிடுவோம்.  வேறு வழியில்லை.  

அப்போது மழை பொய்த்து பஞ்சம் தலை விரித்தாடியது.  பெரிசுகளைக் கேட்டுப் பாருங்கள்.  கதை கதையாக சொல்லுவார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எல்லோரையும் எலிக்கறி சாப்பிடச் சொன்னார்.  மக்கள் அதை மனதில் வைத்துதான் எம்ஜியாருக்கு அப்படியொரு அமோக ஆதரவு கொடுத்தனர். அதற்குப் பிறகு அவர் சாகும் வரை கருணாநிதியால் அந்த அரியணையை அடைய முடியாமல் போனதுக்கு காரண வறுமையை எள்ளி நகையாடியதுதான்.  

எதையோ சொல்ல வந்து எங்கெங்கோ சென்று விட்டேன்.  
எப்படியோ தக்கி முக்கி ஐந்தாவது வரை முடித்துவிட்டேன்.  இடையில் என் தம்பி இறந்துவிட எனது அண்ணனை தொழில் பழக திருப்பூரில் சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  ஆறாவது படிக்க வேறு பள்ளிக்கூடம் போகவேண்டும்.  ஆனால் மேலே படிக்க வைக்க வீட்டு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை.  இருக்கிற ஆடுகளை நான் மெயக்கவேண்டும் எனவும் எனது அப்பா வேறு ஏதாவது வேலைக்குப் போகவேண்டும் எனவும் முடிவு ஆகியது.  

அப்போது எனது அம்மாவிடம்  படித்தே ஆகவேண்டும் என்று அழுது அடம் பிடித்து  ஆர்ப்பாட்டம் பண்ணினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை.  அதனால் நானே ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி எனது சித்தப்பவிற்க்கு ஒரு கடிதம் எழுதினேன்.  உடனே வந்து என் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசி பள்ளிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டிருந்தேன்.  

ஆனால் அந்த கடிதத்தை போஸ்ட் செய்யும் முன் அம்மாவின் கையில் கிடைத்துவிட்டது. அதை படிக்கத் தெரியாமல்   அது என்னவோ ஏதோவென்று  நினைத்துக் கொண்டு என்னை விசாரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் நான் ஒன்றும் வாயைத் திறக்கவில்லை.  அதில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னையே படிக்கச் சொன்னார்கள்.  ம்ஹூம் கல்லுளி மங்கனாய் அமர்ந்து இருந்தேன். பிறகு அப்பா அடிக்க  ஆரம்பித்தார். அப்பவும் நான் வாயைத் திறக்கவில்லை. 

 அப்போது ரோட்டில் போய்க்கொண்டிருந்த தங்கபாண்டிய வாத்தியார் வந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி என்ன ஏதுவென்று
விசாரித்தார்.  அந்த கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது.  அதை படித்துப் பார்த்து என்னை தலை வருடி பயப்படாதே என்பது மாதிரி கண்களைக் காட்டினார். 

"எப்ப இந்த வயசுல எவனுக்கு லெட்டர் எழுதத் தெரியுது.  இவ்வளவு அழகா எழுதி இருக்கான்.  பையனை படிக்க வையுங்கப்பா... பெரிய ஆளா வருவான்..."


எனக்கு ஏதோ வானத்தில் மிதப்பது மாதிரி இருந்தது.  
அதற்குப் பிறகு இரண்டு ஆடுகள் விற்கப் பட்டது.  நான் புதுச் சட்டை அணிந்து ஹைஸ்கூல் போனேன்.  அங்கு எனக்கு வாத்தியாராக வந்தது அதே தங்கபாண்டிய வாத்தியார்தான்.  அவர் எல்லோருக்கும் கண்டிப்பான வாத்தியார். ஆனால் நான் அவருக்கு செல்லப் பிள்ளை.  அவருக்கும் அவரது வீட்டுக்கும் தேவையான எடுபிடி வேலைகளை செய்து  கொடுத்து  நல்ல பேர் வாங்கிவிட்டேன். 

அப்போது மதிய உணவுப் பிரச்சினை வந்தது.  ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே இருந்த மதிய உணவுத் திட்டம் உயர்நிலைப் பள்ளிக்கு இல்லை.  எனது வீட்டின் வறுமையை புரிந்து கொண்ட தங்கபாண்டிய வாத்தியார் அதற்கும் ஒரு திட்டம் கொண்டு வந்தார்.  கைப்பிடி உணவுத் திட்டம்.

மதிய உணவு கொண்டு வரும் மாணவர்கள் அவரவர் உணவில் இருந்து ஒரு கைப்பிடி உணவை வழங்க வேண்டும் என உத்தரவு போட்டார்.  மதிய பெல் அடித்ததும் தயாராக நான் கொண்டு வந்திருக்கும் இலையுடன் வகுப்பில் கீழே அமர்ந்து கொள்வேன்.  எல்லோரும் வரிசையாக வந்து எனது இலையில் பரிமாறிச் செல்வர்.  என்னோடு வீரமுத்து எனும் இன்னொரு மாணவனும் அதை சாப்பிட்டான். 

அப்போது எனது அப்பா கொஞ்சம் திருந்தி வேலைக்குப் போகிறேன் என்று  திருப்பூர்(இதுதான் அவருடைய சொந்த ஊர்) வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  எனது அண்ணனும் அப்பாவும் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து வேலைக்குப் போய் வந்தார்கள். எனது அண்ணன் சாக்கு தைக்கவும் எனது அப்பா கடலை மில்லில் மூட்டை தூக்கவும் போனார். 

எப்படியோ எட்டாம் வகுப்பை  முடித்துவிட்டேன்.  கோடை விடுமுறைக்கு  திருப்பூர் வந்தவன் என்னையும் சாக்கு தைக்க வேலைக்கு அனுப்பினார்கள்.  அதற்குப் பிறகு குடும்பமே திருப்பூருக்கு குடி பெயர்ந்தது.  எனது அம்மா பருத்தி மில்லுக்கு வேலைக்குப் போக ஒரு வழியாய் குடும்பம் செட்டில் ஆனது. என்னால் குடும்பத்துக்கு வருமானம் வரவும் எனது படிப்பை டீலில் விட்டார்கள்....   அது அடுத்த பதிவில்....


2 comments :

  1. \\காமராஜரா? எம்.ஜி.ஆரா? \\ நதியில் சிறந்தது காவிரியா [இன்றைய] கூவமா?

    ReplyDelete
  2. நன்றி ஜெயதேவ் தாஸ ...
    எல்லோரும் நல்லவரே...

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......