PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, September 9, 2011

படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(2)

இதுக்கு முன்னாடி எழுதுன 'படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(1)' இதை முதல்ல படிச்சுடுங்க..

நான் கிராமத்துல படிக்கும்போது எங்கள் பள்ளியில் கைத்தொழில் என்று ஒரு வகுப்பு உண்டு. அதன் ஆசிரியர் தேவேந்திர வாத்தியார்.  இவர் வெளியூர்காரர்.  இங்கே வந்து தங்கி வார இறுதி நாட்களில் ஊருக்கு செல்வார்.  அவருக்கு பல வகையில் நான் உதவியா இருந்திருக்கிறேன்.  ஆகையால் என் மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

கைத்தொழில் வகுப்புகளில் தோட்டவேலைகளை கற்றுக் கொடுப்பார்.  அவரை, முருங்கை, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகளை வளர்த்து வந்தோம்.  அதில் விளைகிறதை எடுத்து விற்பனை செய்யும் உரிமையை ஏலம் விடுவார்.  அதை நான் இரண்டு ரூபாய்க்கு ஏலம் எடுத்தேன்.

அந்த இரண்டு ரூபாயை நான் திரும்பி எடுத்தேனா என்றால்... இல்லை.  அங்கு கிராமத்தில் எல்லோர் வீட்டிலும் இந்த மாதிரி சின்ன சின்ன வீட்டுதோட்டங்கள் இருக்கும்.  ஆகையால் நான் எடுத்துப்போகும் காய்கறிகளை வாங்குவார் யாரும் இல்லை.  இப்படி நஷ்டம் ஆகியது தனிக்கதை.

இதெல்லாம் விடுங்க மெயின் கதைக்கு வருகிறேன்.

நான் திருப்பூர் வந்தேனா... குடும்பமும் வந்தது... என்னை பள்ளிக்கு அனுப்பும் எண்ணம் வீட்டில் யாருக்கும் இல்லை.  பள்ளியில் அப்ளிகேசன்  வாங்க யாரும் போவதாகத் தெரியவில்லை. நானும் அழுது பார்த்துவிட்டேன்.. யாரும் மசிவதாகத் தெரியவில்லை.

அப்போதுதான் ஆபத்பாந்தவனாக தேவேந்திர வாத்தியார் வந்தார்.  என்னைப் பார்ப்பதற்காக அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறார்.  நான் விவரத்தை சொல்லவும் என் அம்மாவையும் அப்பாவையும் லெப்ட் அன் ரைட் வாங்கினார்.  கையிலிருந்து இருநூறு ரூபாயை எடுத்துகொடுத்து புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.  கண்ணில் நீர் வழிய நான் வாங்கிக்கொண்டது இன்னும் என் நினைவினில் அழகான புகை ஓவியமாய் இருக்கிறது.

அதற்கப்புறம் வேலை ஜரூராக  நடந்தது.   நான் பள்ளியில் சேர்ந்தேன்.  அதோடு டைப் ரைட்டிங் கிளாசும் சேர்ந்தேன்.  பத்தாவது போகும்போது டைப் ரைட்டிங் நன்றாக கற்றுக்கொண்டேன்.  அதே டைப் ரைட்டிங் ஆபீசில் என்னை பார்டைமாக ட்யுடராக போட்டார்கள்.  கொஞ்சம் வருமானம் வந்தது.  ஆகையால் வீட்டில் காசு கேற்கும் வழக்கத்தை விட்டேன்.  அதுவே சரியாக இருந்தது.  அதனால் எந்த இடைஞ்சலும்  இல்லாமல் என் படிப்பு போனது.

பத்தாவது பாஸ்.  மீண்டும் லீவில் வேலைக்குப் போயாயிற்று.  இந்த முறை கட்டிட வேலை.  ஏனெனில் என் வீட்டை சுற்றி இருப்போர் கட்டிட வேலை செய்வோர். அதில் கூலியும் அதிகம்.  ஆகையால் அந்த வேலைக்கே போனேன்.  ஆனால் இந்த முறையும் +2 அனுப்பும் எண்ணம் எங்கள் வீட்டில் இல்லை.  வேலைக்கே போகச் சொன்னார்கள்.

அப்போது என்னை தேடி வந்தவர் முதலில் எனக்கு உதவிய அதே தங்கபாண்டிய வாத்தியார்.  வந்து என் பெற்றோரிடம் பேசி வழிக்கு கொண்டு வந்தார்கள்.  +2 முதல் குரூப் இங்கிலீஷ் மீடியம் சேர்ந்தாயிற்று.  நண்பர்கள் அனைவரும் அதில்தான் சேர்ந்திருந்தார்கள்.  ஆகையால் கண்ணை மூடிக்கொண்டு சேர்ந்தாயிற்று.  ஆனால் மாதம் இருபது ரூபாய் கட்டவேண்டும்.  அரசாங்க பள்ளிதான், ஆனாலும் இங்க்லீஷ் மீடியம் என்பதால் இருபது ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.   எப்படியோ தக்கி முக்கி வீட்டில் கொஞ்சமும், கொஞ்சம் பார்டைம் வேலையிலும் சம்பாரித்து கஷ்டப் பட்டு படித்தாயிற்று.

+2 பாஸ்.  எனக்கு காலேஜ் போகும் எண்ணமெல்லாம் கிடையாது.  போதும் இது வரைக்கும் படித்ததே பெரிய விசயமாக இருந்தது.  இனிமேல் வீட்டையும் கவனிப்போம் என்று ஒரு பனியன் கம்பெனியில் ஆபீஸ் பாயாக சேர்ந்தாயிற்று.

ஆனால் இந்தமுறை என்னாச்சோ தெரியவில்லை  என் அப்பா எப்படியாவது என்னை படிக்க வைத்துவிடுவது என்று ரொம்ப ஆசைப் பட்டார்.  அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்.  எங்களது உறவினர் மூலமாக யுவராஜ் கார்மென்ட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு மனோகர் , திரு சம்பத் அவர்களிடம் உதவி கேட்டார்.  அவர்களும் சம்மதிக்க எனது கல்லூரி  பயணம் தொடர்ந்தது.
THIRU.SAMPATH  YUVARAJ MERCH X


சும்மா சொல்லக் கூடாது ஒவ்வொரு செமஸ்டர் தொடங்கும் போதும் அவர்களுடைய  ஆபீசுக்குச் சென்று பணம் கேட்பேன்.  எந்தவித கேள்விகளும் கேட்காமல் உடனே பணம் தரச்சொல்லி கணக்குப்பிள்ளையிடம் சொல்வார். மூன்று வருடங்களும் மனம்  கோணாமல் எந்த வித கேள்விகளும் கேட்காமல் கொடுத்ததை இன்றளவும் என்னால் மறக்க முடியாது.

காமராஜர் போல் நிறைய காமராஜர்கள் என் வாழ்வில் வந்து கல்வி விளக்கேற்றி வைத்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நினைத்து கண்ணீர்மிக   நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்கள் இல்லையென்றால் நான் இந்த நிலையில் இல்லை.

 கல்லூரி முடிக்கும் வரை விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்... சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் எங்கள் வீட்டு  வறுமை போய் ஓரளவு மூச்சு பிடிக்க முடிந்தது.  அதன் பிறகே மின்சார வசதியுள்ள வீட்டுக்கு மாறினோம். அதன் பிறகே எங்கள் வாழ்வு ஒளிமயமானது.

சாரி ரொம்ப போரடிச்சுட்டேன்....

 

2 comments :

  1. படித்து முடித்தபோது மனம் கனத்தது. தங்கபாண்டிய வாத்தியார், தேவேந்திர வாத்தியார், திரு மனோகர் மற்றும் திரு சம்பத் என்று சரியான நேரத்தில் உங்களுக்கு உதவி கிடைத்தது இறைவன் அருள் என்று நினைக்கத்துண்டியது. என்னுடைய படிப்பு பயணமும் கொஞ்சம் உங்களைப் போலத்தான்.

    ReplyDelete
  2. நன்றி முகில்...உங்கள் கதைகளையும் எழுதுங்களேன்.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......