PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, February 6, 2014

AMOUR (2012)-அன்பால் என்னைக் கொன்றுவிடு.

ன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் படம் AMOUR.  இதைப் பற்றிய விமர்சனம்..


முதியவர்களின் வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்ததுதான்.  அதுவும் படுத்த படுக்கையாய் கிடந்து உடனிருந்து கவனிப்போரை பாவமாக்கி இருக்கின்ற சொத்தையும் மருத்துவ செலவுகளுக்காக அழித்து  சிரமப்படும் குடும்பங்களை நிறைய கண்டிருக்கிறேன்.

முதிய தம்பதிகள் தங்கள் அன்பை  ஒருவருக்கொருவர் ஈந்து வாழ்ந்து காட்டியவர்கள்,  ஒருவர் (பெண்) நோயில் வீழ்ந்து கஷ்டப்படும்போது இன்னொருவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை அருமையாகச் சொன்ன பிரெஞ்சு படம்தான் AMOUR  என்கிற இந்தப் படம்.  இந்தப் படத்தின் முடிவு நிச்சயம் எல்லோரையும் உலுக்கிவிடும்.  தன்னுடைய வாழ்க்கையை நினைத்து எல்லோரையும் கலங்கவைத்துவிடும்.

ஜார்ஜ்-அன்னி தம்பதிகள் எண்பதை தொட்டுவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு மகள்- அவள் வெளிநாட்டில் வசிக்கிறாள்.  இவர்கள் இருவரும் ஒய்வு பெற்ற பியானோ கற்றுத் தரும் ஆசிரியர்கள்.  இவர்களிடம் கற்றவர்கள் இப்போது பெரிய ஆளாக இருக்கிறார்கள்.

அப்படியொரு மாணவனின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு  வீட்டுக்கு வந்த இருவரில் மனிவிக்கு  ஸ்ட்ரோக் வருகிறது.   அதனால் அவள் ஒரு நிமிடம் அப்படியே நிலையாக அமர்ந்திருக்கிறாள்.  அந்த நேரத்தில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.  ஜார்ஜ் அவள் விளையாடுகிறாள் என்றெண்ணி திட்டுகிறார்.  ஆனால் அவளால் தம்ளரில் தண்ணீர் கூட ஊற்றமுடிவதில்லை. மருத்துவமனை சென்றால் ஆபரேஷன் செய்யவேண்டும் என்கின்றனர்.  ஆனால் சிகிச்சை தப்பாகப் போய் அது பக்கவாதத்தில் முடிகிறது.  மனைவியோ மீண்டும் மருத்துவமனை கொண்டுபோகக்கூடாது என்று ஜார்ஜிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

பக்கவாதம் வந்த மனைவியை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட மனம் கோணாமல் ஜார்ஜ் பணிவிடை செய்கிறார்.  வாரத்தில் மூன்று நாட்கள் ஹோம் நர்ஸ் வந்து பார்த்துக்கொள்கிறார்.  பத்து நாளைக்கொருமுறை ஹேர் டிரஸ்சர் வந்து பார்த்துக்கொள்கிறார். அது போக பிசியோ தெரபிஸ்ட் என்று ஒரு குறையும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறார்.

மீண்டும் உடல்நலம் மோசமாக கொஞ்சம் நஞ்சம் பேச்சும் வராமல் போய்விட ஜார்ஜ் ரொம்பவும் சிரமப்படுகிறார். மகளோ மருத்துவமனைக்கு கொண்டுபோகலாம் என்று சண்டை போட ஜார்ஜ் தான் சத்தியத்துக்கு மாறாக நடக்கமாட்டேன் என்று கூறுகிறார்.  தானே எல்லா பணிவிடைகளும் செய்கிறார்.

ஒருநாள் சேவ் செய்துகொண்டிருந்த ஜார்ஜ் மனைவி அழைக்கும் குரல் கேட்டு உள்ளே போகிறார்.  மனைவி ஏதோ சொல்ல வர புரியாமல் அவரை அமைதிப் படுத்துகிறார்.  அப்போது தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை கோர்வையாக சொல்லி கொண்டிருக்கிறார்.   அது அவளை அமைதிப் படுத்துகிறது.  அந்தக் கதையின் முடிவில் அருகில் இருந்த தலையணையை எடுத்து அமுக்கி கொன்றுவிடுகிறார்.

பிறகு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் வெளியே சென்று மலர்கள் வாங்கி வந்து ஒவ்வொன்றாய் வெட்டி அவற்றையெல்லாம் மனைவியின் உடலைச் சுற்றி அலங்காரம் செய்து படுக்கையில் வைத்துவிட்டு போலீசுக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் புகுந்த ஒரு புறாவை பிடித்து வெளியே சுதந்திரமாக பறக்க விடுகிறார்.

இதுதான் கதை.  இதை எடுத்த விதம் அருமை.  சட்டென்று கட்டாகாத காட்சிகள்.  பின்னணியில் இசையே இல்லாமல் வெறும் ஒலிகளை மட்டும் வைத்துக்கொண்டு காட்சிகளை நகர்த்துவது.  முக பாவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெரிசுகளை நடிக்கவைத்து வேலை வாங்கியது என்று இயக்குனர் Michael Haneke சபாஷ் பெறுகிறார்.  புராவொன்று வீட்டுக்குள் புகுந்து விடும்.  அந்தப் புறாவை பிடிக்க பெட்ஷீட்டோடு அவர் படும் பாடு பிடித்த பிறகு நீவிக்கொடுக்கும் காட்சி என் மனதை என்னவோ பண்ணியது.


நடித்திருக்கும் Jean-Louis TrintignantEmmanuelle Riva இருவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.   முகபாவங்கள் காட்டுவதில் இருவருமே போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.  இந்தக் குழுவே ஐரோப்பியாவில் உள்ள எல்லா விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகு எனக்கு என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.  எனது பெரியம்மாவென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி விடுமுறைக்கு பொள்ளாச்சிக்கு இவர்கள் வீட்டுக்குத்தான் போவேன்.   சினிமா பார்ப்பதும் விளையாடுவதும் என்று ஜாலிதான்.  பெரியம்மாவின் முதிய காலத்தில் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்கள் கிடையில் கிடந்தார்கள்.  அவ்வப்போது போய் அருகில் உட்கார்ந்து கைகளை எடுத்து மடிமீது வைத்து சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன்.

மருமகளின் கவனிப்பு கொஞ்சம் கூட கிடையாது.  மகன் மட்டும் தினமும் காலையில் வந்து  தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு வேலைக்குப் போய்விடுவான்.  மீண்டும் அடுத்த நாள் காலைதான் வருவான்.  இடையில் அருகில் இருக்கும் மகளும் அவரது மகன்களும் பார்த்துக் கொள்வார்கள்.  இரண்டு வருடம் ஆகிவிட்டதால் எல்லோருக்குமே ஒருவித சலிப்பு வர ஆரம்பித்துவிட்டது.   எல்லோருக்குமே எப்படா போய்சேருமென்று  எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.   நான் கடைசியாக சென்று பார்த்தபோது மிகவும் அதிர்ந்துவிட்டேன்.

முதுகெல்லாம் புண்ணாகி மிகவும் கோர நிலையில் எனது பெரியம்மா இருந்தார்.  கட்டிலின் கால் வழியாக ஒரு எறும்புப் படை மேலேறி கையில் ஓட்டை போட்டு உடம்புக்குள் போய்க்கொண்டு இருந்தது.  இதைக் கண்டதும் என் கண்களில் இருந்து கண்ணீர் தன்னாலே வந்துகொண்டு இருந்தது.  பிறகு நானும் என் மனைவியும் கைத்தாங்கலாக எழுப்பி அமரவைத்து சுத்தம் செய்து எறும்பு மருந்து வாங்கி வந்து அருகில் போட்டுவிட்டு வந்தோம்.

அன்று இரவு மூன்று மணி இருக்கும்.  நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எனக்கு திடீரென விழிப்பு வந்துவிட்டது. அதன்பின்  எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர மறுத்தது.  என் நினைவுகள் முழுவதும் அந்த எறும்பு போன பாதையிலேயே இருந்தது.  ஒரு நிமிடம் கண்ணை மூடி எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.

"ஏன் பெரீம்மா இப்படி அவஸ்தைப் படற.  உன்னையும் கஷ்டப்படுத்தி மத்தவங்களையும் கஷ்டப்படுதிட்டு இருக்குற.  இனிமேலும் யாருக்கும் சிரமம் வைக்காம அமைதியா போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே.."

இப்படியெல்லாம் யாருக்கும் நான் வேண்டிக்கொண்டதில்லை.  சாமி பூதம் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்கு சுத்தமாக  கிடையாது.   என் இப்படி நினைக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.  ஏனோ தெரியவில்லை அந்த நள்ளிரவில் அப்படி நினைத்துக்கொண்டேன்.  பிறகு நிம்மதியாக உறங்கினேன்.

அதிகாலை நேரத்தில் போன் வந்தது.
"பெரியம்மா செத்துப் போச்சு" என்று எனது தம்பி  சொன்னான்,  அருகில் இருந்த டாக்டர் உறுதி செய்திருக்கிறார்.
"எத்தனை மணிக்கு உயிர் போனது ?"என்று கேட்டேன்.
 டாக்டர் சொன்ன நேரம் "சரியாக மூன்று மணி" என்றான்.
நான் அதிர்ந்துபோய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.
 

1 comment :

  1. வணக்கம்
    படத்திக் கதைக்களம் மிக அருமையாக உள்ளது...தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் படக்கதைக்கு ஏற்றது போல சொல்லியுள்ளிர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......