PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, February 4, 2014

FLY AWAY HOME(1996)-தாயை இழந்தவள் தாயான கதை.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நாளை திரையிடப்படும் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்...

ஒரு மழை நாளிரவு.  நியுசிலாந்த் நாட்டின் ஒரு நகரம். வழியும் நீரை ஒதுக்கி ஒதுக்கி வழிகாட்டும் காரின் வைப்பர்.  காரினுள் மனதுக்கு பிடித்த சங்கீதம் கேட்டபடி உரையாடிக்கொண்டிருக்கும் தாயும் மகளும்.  கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்படும் விபத்து.  தாய் இறந்து பதிமூன்று வயது மகள் மருத்துவ மனையில் இருக்கிறாள்.  நல்லவேளை பிழைத்துக்கொள்ள கண்விழித்துப் பார்க்கும்போது நீண்ட தலைமுடியும் தாடியும் கொண்ட ஒருவர் ‘நான்தான் உன் அப்பா.. உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்’ என்கிறார்.

அந்த விபத்து காட்சி படமாக்கிய விதம் மிகவும் அருமை.  ரத்தம்-சத்தம் எதுவில்லாமல் காருக்குள்ளிருக்கும் காமிரா எட்டிப்பார்த்தபடியே அறுந்து விடாத சங்கீதத்தோடு முடித்திருப்பது அழகு.

ஒருமாதம் கழித்து அப்பாவும் பெண்ணும் கனடாவுக்கு அப்பாவின் பார்முக்கு செல்கிறார்கள்.  இருவருக்கும் வேதியியல் ஒத்துப்போகவில்லை.  போதாதுக்கு அம்மாவின் இடத்தில் வேறொரு பெண் இருக்கிறாள்.  ஆகையால் எமி (ஆம் இதுதான் அவள் பெயர்) எதிலுமே ஒட்டாமல் இருக்கிறாள். அப்போது ஒரு கட்டிடம் கட்ட காட்டில் இருந்த மரத்தை பிடுங்கும்போது அதன் மீதிருந்த ஒரு வாத்துக் கூடு கீழே விழ நேர்கிறது.  தாய்ப்பறவை இறந்துவிட எமி பொரிக்காமல் விட்ட முட்டைகளை எடுத்துப்போகிறாள்.  அப்பாவின் பழைய டேபிள் டிராயரில் துணிகளை அடுக்கி ஒவ்வொரு முட்டையையும் அதன் மீது வைத்து அதற்கு நூறு வாட்ஸ் பல்பை எரியவிட்டு அடை காக்கிறாள்.


அடுத்த நாள் பள்ளிவிட்டு வந்து பார்க்கும்போது இரண்டு மூன்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வருகின்றது.  சில நாட்களில் எல்லா முட்டையும் குஞ்சுகளாகி ஒரு தாயாய் இருந்து எமி அதை பாதுகாக்கிறாள்.

இங்கே அவரது அப்பாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.  எமியின் அம்மாவை ஏதோ காரணங்களால் பிரிந்து கனடாவில் வசிக்கும் தாமஸ்க்கு வேலை அலங்கார உருவங்களை இரும்பில் வடிப்பதே.  அவ்வப்போது தானே செய்த ஏர்க்ராப்ட் விமானத்தில் தன் நண்பர்களோடு ஓட்டிப் பார்ப்பதே அவரது பொழுதுபோக்கு. தன்னிடம் ஒட்டாத மகளை வாத்துக்களை வைத்துத்தான் கவரவேண்டும் என்று முடிவுக்கு வருகிறார். எப்படி வளர்ப்பது என தெரிந்த உள்ளூர் வார்டனிடம் கேட்கிறார்.  அவர் இறகுகளை வெட்டிவிட வர எமி அவரைத் திட்டி அனுப்பிவிட வார்டன் வில்லனாகிறார். 

தாமஸ் வாத்து வளர்ப்புத் தகவல்களைத் தேட சில விவரங்கள் கிடைக்கிறது.  அந்தக் குஞ்சுகளுக்கு தாயாய் இருந்து வழிகாட்டவேண்டும், அவற்றுக்கு பறக்கப் பழக்கவேண்டும்,  குளிர்காலத்துக்கு நீண்ட தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் தங்கி குளிர்காலம் முடிந்தபிறகு திரும்பவேண்டும். இதை மைக்ரேசன் என்கிறார்கள். நம்ம ஊர் பெரியபாளையம் குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து இமய மழை தாண்டி நிற்காமல் பறந்து வரும் பட்டை தலை வாத்துக்களை பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் யார் பழக்குவது?.


அந்த கேள்விக்கே இடம் வைக்காமல் குஞ்சுகள் எமியிடம் பழகுகின்றன.  அவளது கட்டளைகளை ஏற்று அவள் பின்னால் ஓடுகின்றன,  அவள் கையை விரித்து ஓடினால் அவைகள் இறக்கை விரித்து ஓடுகின்றன. 

தாமஸ் தனது சிறு விமானத்தில் பறந்து தன்னை பின்தொடர பணித்தால்  பறவைகள் வர மறுக்கின்றன.  செய்வதறியாத நிலையில் இருக்க எமி அப்பாவுக்கு தெரியாமல் விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்து அதை இறக்க தெரியாமல் கீழே விழுகிறாள்.  நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

தாமஸ் அவளுக்கு பறக்கச் சொல்லித் தர முயற்சி செய்து அதில் வெற்றி பெற்று,  எமி பறவைகளையும் அவளது விமானத்தின் பின்னே பறக்க கற்றுக் கொடுக்கிறாள்.  ஜோராக பறக்கின்றன,  ஆனால் ஒரே ஒரு வாத்து (அதன் பெயர் இகோர்- அது ஒரு சோதா வாத்து) விமானத்தின் இறக்கையில் அடிபட்டுவிடுகிறது.  அதை இவர்கள் காட்டுக்குள் தேடிக்கொண்டிருக்கையில், பறவைகள் பறக்கப் பழகியதை அறிந்த வில்லன் வார்டன் இரவோடிரவாக பார்முக்குள் புகுந்து எல்லா பறவைகளையும் எடுத்துக் கொண்டுபோய் வைத்துக் கொள்கிறான்.

திரும்பி வந்த எமி குழு அதிர்ச்சியடைந்து பிறகு பக்காவாக திட்டம்போட்டு பறவைகளை மீட்டு அப்படியே அவற்றை நார்த் கரோலினாவில் இருக்கும் பறவைகள் சரணாலயத்துக்கு மைக்ரேசனுக்காக எமியும் தாமசும் அழைத்துச் செல்கிறார்கள்.

அந்த சரணாலயம் தாமஸின் நண்பருக்குச் சொந்தமானது.  அங்கு எந்த பறவைகளும் வருவதில்லையாதலால் நவம்பர் ஒன்றாம் தேதி வரை காத்திருப்போம் இல்லையெனில் சரணாலயத்தை அபார்ட்மென்ட் கட்ட அழித்துவிடுவோம் என்கின்றனர். ஆதலால் அந்த குறிப்பிட்ட தேதிக்குள் சென்றாகவேண்டிய நிலையில் அப்பா தனி விமானத்திலும் எமி தனி விமானத்திலும் பறவைகள் பின் தொடர பறக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவம் தனது ராடாரில் இதை மோப்பம் பிடித்துவிடுகிறது.  அதன் ராடார் ஏதோ பத்து பதினைந்து போர் விமானங்கள் அவர்களை நோக்கி பறந்து வருவதாக காட்டுவதால் மிரண்டு சுட்டுத்தள்ள துப்பாக்கியோடு காத்திருக்கிறார்கள்.  ஆனால் இவர்களைக் கண்டதும் சப்பென்று ஆகிவிட இவர்களை கைது செய்து விசாரிக்கிறார்கள்.  இவர்கள் கதையை கேட்டதும் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறார்கள்.

அங்கிருந்து போகும்போது மீண்டும் பிரச்சினை,  தாமஸின் விமானம் பழுதடைய எமி மட்டும் தனியாக பறவைகளோடு போக நேர்கிறது.  இடையில் வேட்டைக்காரர்கள் வேறு.  இப்பிடி பல தடைகளை கடந்து சரணாலயம் அடைந்தார்களா என்பதே மீதிக் கதை. 

முடிவில் ஒரு பரபரப்பான ஆக்சன் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.  இது ஒரு உண்மைக் கதை என்று நாம் அறியும்போது பிரமிப்பு கூடுகிறது.

வாத்துகளின் சில்மிஷங்கள் - ஆரம்ப காட்சியில் ஒரு வாத்து தன் தலையை 360 டிகிரியிலும் திருப்புவது அழகோ அழகு.  இறுதியில் வாத்துக்கள் அனைத்தும் ஏறி நீரில் பயணக் களைப்பை போக்க குளிப்பது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.  அதேபோல் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வரும் காட்சியும் குஞ்சுகள் எமியின் பின்னால் கும்பலாக ஓடிவரும் காட்சியும் பறக்கப் பழகும்போது எமியின் விமானத்தின் பின்னால் பறவைகள் அணிவகுக்கும் காட்சியும் மனதை அள்ளிச் செல்லும்.


ஒளிப்பதிவுக்கும் இசையமைப்பாளருக்கும் எழுந்து நின்று ஒரு சல்யூட் அடிக்கவேண்டும்.  அற்புதம்.

எமியாக நடித்த  Anna Paquin, அப்பாவாக நடித்த Jeff Daniels இருவரும் அருமையாக நடித்து இறுதிக் காட்சியில் நம்மை கண்ணீர் சிந்த வைத்திருப்பார்கள்.


இந்தப் படம் நம்ம ராமநாராயணன் கையில் கிடைத்திருப்பின் வாத்துக்களை கதாநாயகிக்கு லவ் லெட்டர் கொடுக்க வைத்திருப்பார்.  குரங்குகளோடும் வில்லன்களோடும் சண்டையிட வைத்து சுவராசியம் பண்ணியிருப்பார். அந்த மாதிரி படம் பார்த்து பழகிய நமக்கு இது நிச்சயம் அதிர்ச்சி தரும் அனுபவமாக அமையும்.  அதற்காகவேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது.

 

4 comments :

  1. அற்புதமான ஒரு படத்தைப்பற்றி
    அருமையாகப் பகிர்ந்தமைக்குப் பாட்டுக்கள்..!

    ReplyDelete
  2. மிக அருமையான படம். உங்கள் பதிவு நான் இந்தப் படத்தைப் பார்த்த உணர்வுகளை எழுப்பிவிட்டுவிட்டது. அதுசரி, தமிழில் இது போன்று என்றாவது படம் வருமா?

    ReplyDelete
  3. வணக்கம்
    படத்தின் கதைக்களம் மிக அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......