PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, February 7, 2014

WADJDA (2012) - பாலைவனச் சோலை.

ன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் WADJDA என்கிற சவூதி அரேபிய படத்தைப் பற்றிய விமர்சனம்.

நான் சிறுவயதில் இருக்கும்போது சைக்கிள் வாங்கும் கனவை மூன்று ஆண்டுகள் கண்டிருக்கிறேன்.  திருப்பூரில் எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட போகவர எட்டு கி..மீ. வரும்.  இரண்டு வருடங்கள் நடந்தேதான் சென்று வருவேன்.  தினமும் என் அம்மாவையும் அப்பாவையும் ஒரு சைக்கிள் வாங்க நச்சரித்துக்கொண்டே இருப்பேன்.  இரண்டு வருடங்கள் அழுத்தத்தின் பலன் அப்பா ஒரு பழைய சின்ன சைக்கிள் முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தந்தார்.  அன்றைய நாள் நான் அடைந்த மகிழ்ச்சி இன்று வரை எப்போதும் அடைந்ததில்லை என்று சொல்வேன்.  அப்படி ஒரு சந்தோசம்.

இந்தியாவில் என்னைப்போன்ற ஒரு சிறுவனுக்கே சைக்கிள் என்பது ஒரு கனவென்றால் சவுதி அரேபியாவில் ஒரு சிறுமிக்கு சொந்த சைக்கிள் என்பது எப்படி சாத்தியப்படும்.  அதுவும் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்கிற நாட்டில்.





WADJDA ஒரு பதினோரு வயது சிறுமி, ரியாத் நகரில் அம்மாவோடு வசிக்கிறாள்.  அப்பா அவ்வப்போது வந்து செல்கிறார்.  அவருக்கு தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையென்பதால் இன்னொரு கல்யாணம் செய்யும் முடிவில் இருப்பதால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரிதல் இல்லை.

சிறுமியின் பக்கத்து வீட்டு நண்பன் அப்துல்லா.   அவளை துப்பட்டாவை விளையாட்டுக்கு இழுத்து எடுத்துக்கொண்டு சைக்கிளில் வேகமாக போகிறான்.  வாஜ்டாவுக்கு அவனை சைக்கிள் பந்தயத்தில் வெல்லவேண்டும். அதுவே குறிக்கோள். ஆனால் அந்த நாட்டில் பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை.  தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் புது சைக்கிளை பார்க்கிறாள்.  அதன் விலையை விசாரிக்கிறாள்.  800 ரியால்.. உன்னால் வாங்க முடியாது போ என கடைக்காரர் விரட்டுகிறார்.

அவளுக்கு அந்த சைக்கிளை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று அவளது அம்மாவிடம் கெஞ்சுகிறாள்.  அம்மா பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மறுத்து விடுகிறாள்.  ஆகையால் தானே காசு சேர்த்து வாங்கிவிடுவது என்று முடிவு செய்கிறாள்.  அதற்காக வீட்டிலேயே கையில் கட்டும் கலர் கயிறுகள் செய்து பள்ளியில் விற்கிறாள்,  பள்ளியில் படிக்கும் சீனியர்க்கு காசு வாங்கிக்கொண்டு  கடிதப் பரிமாற்றம் செய்கிறாள்.  பாடல் கேசட் விற்கிறாள்.

அப்போது பள்ளியில் குரான் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப் படுகிறது. அதில் ஜெயித்தால் ஆயிரம் ரியால் பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்படுகிறது.  அந்தப் பரிசை வெல்ல திட்டம் போடுகிறாள்.  குரான் கேம் CD வாங்கி விளையாட்டாக கற்கிறாள்.   குரான் பாடல்களை மனப்பாடம் செய்கிறாள்.  போட்டி நடைபெறுகிறது.  அதில் வெல்கிறாள்.

பரிசு தரும்போது இந்த பணத்தை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும்போது நான் சைக்கிள் வாங்குவேன் என்று சொல்கிறாள்.   அதிர்ச்சி அடையும் ஆசிரியை சைக்கிள் ஓட்டுவது தவறு என்று சொல்லி பரிசுப் பணத்தை அவள் சார்பாக பாலஸ்தீனத்துக்கு கொடுத்துவிடுகிறாள்.

பிறகு அவள் சைக்கிள் வாங்கினாளா?  அப்துல்லாவோடு சைக்கிள் பந்தயத்தில் வென்றாளா? என்பதே கதை.

மிகவும் சிம்பிளான கதை.. ஆனால் அதை சொன்ன விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் Haifaa al-Mansour.  இவர் சவூதி அரேபியாவின் முதல் பெண் இயக்குனர். சவுதியில் படமாகிய முதல் முழநீள திரைப்படமும் இதுதான்.  இக்கதையே தனது சொந்த வாழ்வின் பிரதிபலிப்புதான் என்று சொல்லும் இயக்குனர் இந்தப் படத்தின் மூலம் அரேபியப் பெண்களின் வாழ்வு முறை தெளிவாகக் காண்பிக்கிறார்.

தலைக்கு முக்காடு போடாமல் வெளியே வரக்கூடாது.   முகத்தைக் கூட மூடிக்கொண்டுதான்  வரவேண்டும்.  பள்ளியில் யாரும் நகங்களுக்கு  பாலீஸ் போட்டு வரக்கூடாது.  டாட்டூ வரைந்துகொள்ளும் பெண்கள் தண்டிக்கப் படுகிறார்கள்.  பள்ளியில் படிக்கும் சக தோழி 11 வயதுப் பெண் தனது இருபது வயதுக் கணவன் என்று போட்டோ காட்டுகிறாள்.   போட்டோக்கள் கூட பள்ளிக்கு கொண்டுவரக் கூடாது என்று ஆசிரியை சொல்கிறாள்.

வாட்ஜ்டாவின் அம்மாவின் வாழ்க்கை அங்கு வாழும் பெண்களின் ஒரு சோறு பதம்.  அழகான பெண் எனினும் ஆண் வாரிசை கொடுக்க முடியாதலால் குடும்ப வாழ்வில் இருந்து நிராகரிக்கப் படுகிறாள்.  வீட்டில் வரைந்திருக்கும் 'குடும்ப மரம்' வரைபடத்தில் எல்லாமே ஆண்கள் பெயர்கள்தான்..  பெண்கள் பெயர்கள் வரக்கூடாதாம்.   அதில் வாட்ஜ்டா தனது பெயரை எழுதி ஒட்டி வைப்பதும், அடுத்த நாள் அது உதிர்ந்து கிடப்பதும் நல்ல டச்.

வாட்ஜ்டாவின் ஆசை நிறைவேறாதபோது தன்னைவிட சிறிய வயதான பக்கத்து வீட்டுத் தோழன் சொல்வது, 'கவலைப்படாதே... நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்.  அதன் பிறகு நான் உனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் யாரும் கேட்கப்போவதில்லை'.  சின்னப் பையனல்லாம் பேசற அளவுக்குத்தான் அரேபிய பெண்கள் நிலைமை இருக்கிறது.

வாட்ஜ்டாவாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம்.  முகத்தில் குடிகொண்டிருக்கும் மெல்லிய சோகம், வாயாடல் இல்லை, சிரித்தால் மனதை  அள்ளிக்கொள்ளும் வடிவான முகம்.  நடக்கையில் ப்ரெயரில் நிற்கையில் என ஒரு வித அலட்சிய உடல்மொழி, அழும்போது கூட அளவான வெளிப்பாடு என நடிப்பின் சில பரிமாணங்களை அழகாக வெளிப்படுத்துகிறாள்.

தன் தோழனோடு சண்டை நடந்து பேசாமல் அமர்ந்திருக்க இரண்டு ரியால் தருகிறேன் என்று சொன்னதும் புன்சிரிப்பது,  சைக்கிள் கடையில் சைக்கிளை வேறொருவர் பேரம் பேசியதைப் பார்த்த வாட்ஜ்டா கடைக்காரரை கேசட் கொடுத்து சரிகட்டுவது, தோழனின் மாமாவின் மீசையைப் பார்த்து கேலி செய்வது, அம்மாவைத் திட்டிய டிரைவரை தன் தோழனோடு  போய்  மிரட்டுவது,  இறுதிக்காட்சியில் சைக்கிளை  பார்த்தவுடன் முகத்தில் ஒரு பாவம், அப்பாவுக்கு கல்யாணம் என்று அம்மா சொன்னவுடன் அப்பாவுக்கு பிடித்த சிவப்பு டிரஸ்-ஐ போட்டுப் போய் அப்பாவை அழைத்து வந்துவிடலாம் என்று வெள்ளந்தியாய் சொல்வது என நடிப்பில் பொளந்து கட்டுகிறது சின்னப் பெண்.

 தியேட்டர்கள் இல்லாத கட்டுபெட்டியான அரேபிய மண்ணில் எப்படி இந்த படப்பிடிப்பை நடத்தினாளோ மகராசி.  கேரவுனுக்குள் அமர்ந்துகொண்டு வாக்கி டாக்கி மூலம் கட்டளைகள் பிறப்பித்தே ரியாத் நகர வீதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.  ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டதற்கு பலனாக பல விருதுகளை அள்ளித் தந்திருக்கிறது இப்படம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.
 

1 comment :

  1. வணக்கம்
    படக் கதையை பார்த்தவுடன் பார்க வேண்டிய ஆசை வந்துள்ளது.... பதிவாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......