PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, September 30, 2011

எங்களுக்கு நண்பரான எஸ்.ரா.

"எழுத்தாளர் என்பவர் எப்போதும் நிலத்திலிருந்து ஒரு அடி மேல்தான் நடப்பார். தலையில் ஒரு கிரீடம் சூடியிருக்கும்.  சூடான கேள்விகளுக்கு கோபம் கொப்பளிக்க பதில் சொல்லுவார். அவருக்கு தெரியாதது எதுவும் கிடையாது."-என்பதான ஒரு பிம்பம்தான் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் எனக்கு இருந்தது.  சில வேளைகளில் அது உண்மையாகவும் இருந்தது.

24-ம் தேதி காலை எழுத்தாளர் எஸ்.ரா. திருப்பூர் வந்தார்.  நாங்கள்  அன்று மாலையில் சந்தித்தோம்.  ஊத்துக்குளி அருகில் உள்ள சுக்ரீஸ்வரர் எனும் பழம்பெருமை வாய்ந்த கோவிலில்தான் எங்களது சந்திப்பு நடந்தது.  கோவிலைப் பார்த்தவுடன் அதிலிருந்தே தனது பேச்சை தொடங்கினார். அந்த கோவிலின் காலம் சோழர் காலமாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு தேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் போல் அவர் எடுத்துச் சொன்னதில்  நாங்கள் அசந்து விட்டோம்.

எங்களுக்கென்று தனி பிரசங்கம்

அவருடன் பேசியதில் சில துளிகள்...

# சிற்பங்களையும் அதன் நுணுக்கங்களையும் கொண்டு அது யார் காலத்தில் வடிக்கப் பட்டது,  அதன்  வயதையும்  அறியலாம்.

# ஒரு கோவில் இருந்தால் அந்த கோவிலை சுற்றி பாளையம், மங்களம், பள்ளம் என்ற பெயரில் ஊர்கள் இருக்கும்.  கோவில் இருக்கும் இடம் பெரிய பாளையம், அருகில் விஜய மங்களம், பள்ளகவுண்டன் பாளையம்  எனும் ஊர்கள் இருக்கிறது.  பாளையம் என்பது பாளையக்காரர்கள் இருப்பது. இவர்களே சோழர்களின் பிரதிநிதிகள்.  மங்களம் எனும் ஊரில்தான் கோவிலை கட்டுபவர்கள்  குடி இருப்பார்கள். கோவில் வேலைக்கு வருபவர்கள் குடும்பத்தோடு வரக்கூடாது. அப்போதுதான் கண்ணும் கருத்துமாக வேலை செய்வார்களாம்.  என்னே ஒரு மேனேஜ்மென்ட் பாலிசி.  பள்ளம் எனும் ஊர்களில்தான் கோவிலை கட்டத் தேவையான மண்ணை வெட்டி எடுப்பார்களாம். மன்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் கோவிலில் நடத்தப்படவேண்டும் என்பது விதியாம்.

# ராமாயணத்தில் பல பர்வங்கள்(காண்டங்கள்) உண்டு.  சாந்தி பர்வம் மட்டும் இரண்டு இருக்கும். ஒன்று முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் இருக்கும்.  அது பிற்காலத்தில் பிராமணர்களால் எழுதி சேர்க்கப்பட்டது.

#எந்த எழுத்தாளர் அதிகமான புது வார்த்தைகளை உபயோகித்து எழுதுகிறாரோ அவரே  சிறந்த எழுத்தாளராக புகழ் பெறுவார்.  அப்படி அதிகமான புது வார்த்தைகளை உபயோகித்து எழுதியவர்களில் ஆங்கிலத்தில் சேக்ஸ்பியரும்  தமிழில் கம்பரும் ஆவார். அதனால்தான் அவர்கள் காலம் தாண்டி பேசப்படுகிறார்கள்.

இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் அதற்குண்டான பதிலை விலாவாரியாகவும் சுவராஸ்யமாகவும் சொல்லி எங்களை கட்டிப் போட்டிருந்தார்.  அவருடைய பேச்சில் மயங்கி கொஞ்சம் விலகியே இருந்த நாங்கள் எங்களை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய் மனதளவில் நெருங்கி இருந்தோம்.

இரவு உணவு அருந்திய பிறகு  எங்களின் வேண்டுகோளின்படி அவருடைய அந்த நாள் இரவை எங்களுக்கு கொடுத்தது எங்கள் பாக்கியம் என்றே சொல்வேன்.

அதன்பிறகும் நடு இரவுவரை சளைக்காமல்  எங்களோடு உரையாடியது எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதது.
நள்ளிரவு உரைவீச்சு


அதிலிருந்து சில துளிகள்..

# இயக்குனர் ஜீவாவும் எஸ்.ராவும்  மிகவும் நெருக்கமானவர்கள்.  ஏறக்குறைய அவருடைய  எல்லாப் படங்களிலும் எஸ்.ரா. பணியாற்றி இருக்கிறார்.  ஜீவாவின் படங்களில் பங்கேற்கும்  டெக்னீசியன்களை எதாவொரு காட்சியில் தலை காட்ட வைத்துவிடுவார்.  அனால் ஜீவா மட்டும் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மறுத்துவிடுவாராம்.  யார் எவ்வளவு சொன்னாலும் பிடிவாதமாக நடிக்கவே மாட்டாராம்.  தாம் தூம் படத்தில் ஒரு காட்சியில்  விருப்பப்பட்டு நடித்தாராம்.  பிறகு அந்தப் படத்தில் பாதியிலேயே அவர் இறந்துவிட்டது நாம் அறிவோம்.  படத்தை முடித்து, எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து படத்தை கோர்த்துக் கொண்டிருக்கும்போது ஓர் காட்சி வந்தது.  ஜெயம் ரவி ஒரு தெருவை கடக்கும்போது பின்புலத்தில் ஜீவா வருகிறார். அவர் தெருவை கடந்து சென்றபிறகு  நின்று திரும்பி ''டாடா பை பை "  என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.   அந்த காட்சியை கண்டதும் அப்படியே அடித்து போட்டது மாதிரி உட்கார்ந்துவிட்டாராம்.  நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னவர் கடைசியில் டாட்டா சொல்வது மாதிரி நடித்தது எதனால் என்று யாருக்குத் தெரியும்.

#  நடிகர் கவுண்டமணியுடனான உரையாடலை சிரிக்க சிரிக்க சொன்னது அருமை.

# இயக்குனர் பாலாவுடனான நட்பை சொன்னதும் அவன்-இவனைப் பற்றி நாங்கள் கேட்ட அத்தனை  எடக்கு கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்ன விதம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

#பிடித்த சினிமா, பிடித்த புத்தகம், பிடித்த உணவு, சுந்தர ராமசாமி, என்று அவரைப் பற்றி ஏகமாய் தெரிந்துகொண்டோம்.

அதன் பிறகும் பிரிய மனம் இல்லாமல் அடுத்த நாள் நிகழ்ச்சி இருந்ததால் அவர் கிளம்பி போகவேண்டியதாப் போயிற்று.

அந்த இரவினில் அவருடைய நினைப்பினில் இமைகள் மூட மறுத்து  அடம் பிடித்தது.

அடுத்த நாள் சேர்தளம் நடத்திய அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அவர் வருகையின் மகுடமாக அமைந்தது.  பயணங்கள் பற்றிய அவரது  நீண்ட உரை அந்த ஹாலில் இருந்த அனைவரையும் கட்டிப் போட்டது.  அதன் பிறகு அவரது வாசகர்கள் ஒவ்வொருவரும் கேட்ட அறிவுபூர்வமான கேள்விகளும் அவரது நேர்மையான பதில்களும் அவர் மேல் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.

 அவருடைய உரையாடலை இந்த நிரலியில் கேட்கலாம்.

நிகழ்ச்சி  முடிந்தபின்னும்  கலையாத கூட்டம் அவர் மேல் வாசகர்கள் வைத்திருந்த அன்பைக் காட்டியது.

# நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை? என்று ஒருவர் கேட்டார்.  கவிதை படிக்க மட்டுமே பிடிக்கும்.  எனக்கு கவிதை எழுத வராது என்று சொன்ன நேர்மை எல்லோருக்கும் பிடித்திருந்தது.

#எப்படி எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் பதிலளிக்க  முடிகிறது? என்று ஒருவர் கேட்டார்.
எப்போதும் எல்லாக் கேள்விகுக்கும் பதில் அளிக்க மாட்டேன். எனக்கு பதில் தெரியாது எனில் தெரியாது என்று சொல்ல நான் தயங்கியதில்லை என்று சொன்னார்.

#வாசகருக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது என்று அடுத்த கேள்வி விழுந்தது.  அதற்கு அவரது அனுபவத்திலிருந்து சொன்ன பதில்..
"நான் ஓர் பிரபல எழுத்தாளரை எனது நண்பனோடு சந்திக்க அவரது வீட்டுக்கு செண்டிருந்தேன்.  சிறிது நேரம் பேசியவர் சினிமாவுக்கு மனைவியோடு போகவேண்டி இருப்பதால் மாலை எங்களை வரச்சொல்லிவிட்டு படம் பார்க்க பொய் விட்டார்.  நாங்கள் வீட்டுக்கு வெளியே வந்து நின்றுகொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம். புதிய ஊர். எங்கு போவது என்று தெரியவில்லை.  சரி என்று நாங்களும் ஒரு சினிமாவுக்கு போவதென்று தீர்மானித்து ஒரு தியேட்டரில் போய் உட்கார்ந்தோம்.  பார்த்தால் முன்சீட்டில்  அந்த எழுத்தாளர் மனைவியோடு அமர்ந்திருந்தார்.  எங்களை பார்த்ததும் அவருக்கு பலத்த அதிர்ச்சி. எங்களுக்கும் அதுவே.  அவரோ 'என்ன எங்களை பின்தொடர்ந்து வருகிறீர்களா?' என்று கேட்டார்.  நாங்கள் அப்படியெல்லாம் இல்லை என பகர்ந்தோம்.  ஆனால் அவர் அதை நம்பவில்லை. எங்களைப் பார்த்து 'ஒழுங்கு மரியாதையாக இந்த இடத்தை காலி செய்து விடுங்கள்.. இல்லையெனில் நாங்கள் எழுந்து போய் விடுவோம்'-என்றார்.  நாங்கள் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,'நீங்கள் எழுந்து போவதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை' என்று உறுதியாக சொன்னோம்.  உடனே அவர் தன் மனைவியோடு  எழுந்து சென்றுவிட்டார்.  நாங்கள் படம் முடித்தபிறகு மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று காலிங் பெல் அடித்தோம்.  வந்து கதவை திறந்தவர் என்ன என்று அதட்டலாகக் கேட்டார்.  நாங்கள், 'நீங்கள் மாலை வரச் சொன்னீர்களே?'-என்றோம்.  கதவை அடித்து சாத்திவிட்டு உள்ளே சென்றவர் பிறகு கதவை திறக்கவேயில்லை.

அதேபோல் இன்னொரு எழுத்தாளர் வீட்டிற்கு சென்றிருந்தபோது தண்ணீர் கேட்டோம்.  தண்ணீர் கொண்டு வர உள்ளே போனவர் ஒரு மணி நேரமாக வெளியே வரவே இல்லை. மீண்டும் காலிங் பெல் அடித்தோம்.  அவரது மனைவி வந்தார்.  எழுத்தாளர் தூங்கி கொண்டிருக்கிறார், அப்புறமாய் வந்து பார்க்கச் சொன்னார்.

அதன் பிறகு எஸ்.ரா. சொல்கிறார்

"அப்போது நான் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்.  நான் ஒரு  எழுத்தாளர் ஆனால் என்னுடைய வாசகர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களோடு அவர்கள் ஆசை தீரும் வரை பெசிக்கொண்டிருக்கவேண்டும். "

இப்படி அவர் சொன்னபோதுதான் அவரைப் பற்றி நான் வரைந்து வைத்திருந்த மன ஓவியம் சாயம் போய் அழிந்து காணாமல் போனது  

என்னைப்  பொருத்தவரை  முதல் பத்தியில் சொன்ன மாதிரியான பாவத்தோடுதான் முதலில் அவரை அணுகினோம்.  கொஞ்சம் கொஞ்சமாக அவரை இதயபூர்வமாக நெருங்கினோம்.  இறுதியில் அவரை புகைவண்டி நிலையத்தில் பிரியும்போது,  எங்கள் உள்ளங்கள் எல்லாவற்றையும் கொள்ளை கொண்டுபோன நெடுநாள் நண்பனாகவே  அவர் எங்களுக்கு தெரிந்தார்.  மீண்டும் எப்போது அந்த நண்பனை சந்திப்போம் என்று ஏங்க வைத்ததை அவரது சாதனையாகவே கருதலாம்.

  

2 comments :

  1. கிட்டதட்ட எல்லோருக்குமே இப்படி தோன்றியிருப்பது ஆச்சர்யம்தான், இல்லையா சார்?

    ReplyDelete
  2. நன்றி முரளி... இன்னும் அவரைச் சந்தித்த பாதிப்பு விலகவில்லை.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......