PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, November 14, 2011

டயர்வண்டி -சிறுகதை



ரு சைக்கிளோட்டி ஓடும் பஸ் முன் திடீரென புகுந்ததுதான் பிரச்சினை.  80 கி.மீ வேகத்தில் ஓட்டி வந்த அந்த பேருந்தின் ட்ரைவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அனிச்சையாய் திடீரென ப்ரேக்கை மிதித்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத பயணிகள் நிலை தடுமாறினார்கள். நான்காம் வரிசையின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணுச்சாமியும் நிலை தடுமாறி பின்னிருக்கை கம்பியில் தலை நங் என்று இடித்ததுக் கொண்டான்.  தலை விண்ணென்று வலித்தது.  தலையை தடவிப் பார்த்துக்கொண்டான்.  காயம் எதுவும் ஆகியிருக்கவில்லை.

அறிவு கெட்ட நாயே….”

ட்ரைவர் சைக்கிள்காரனை திட்டிக் கொண்டிருந்தார்.  ஆனால் அவனோ கொஞ்சமும் கவலைப்படாமல்என் உச்சி மண்டைல சுர்ருங்குது…..சுர்ர்ர்ர்ர்என்று பாடியபடி லாவகமாக சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டிப் போனான்.

கண்ணுச்சாமிக்கு கண் இருள் கட்டியது. வயிற்றுக்குள் போயிருந்த பிராந்தி மூளையில் கலந்திருந்தது.  அது வலியை மறக்கச் செய்தது.   கொஞ்ச நேரத்தில் சுதாரிப்பு வந்தது. 

ண்ணுச்சாமி குன்னத்தூரைச் சேர்ந்தவன்.  ஊரை ஒட்டிய ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அப்பாவும் அம்மாவும் விவசாயம் பார்த்துக்கொள்ள இவன் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கிறான். 

முதலில் குன்னத்தூரில் உள்ள கடையில்தான் வேலை செய்தான்.  அங்கு சரியானபடி வருமானம் இல்லாததால் ஒரு லட்சம் செலவு பண்ணி திருப்பூர் கடைக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தான்.
 இங்கு வந்த பிறகு வருமானம் பரவாயில்லை.  பனியன் கம்பெனியில் உழைத்து வாங்கும் காசு அத்தனையையும் மக்கள் டாஸ்மாக் கடைக்கே கொண்டுவந்து கொடுத்தார்கள்.  பெரும்பாலான தொழிலாளிகள் டீ-க்கு பதிலாக சரக்கையே குடித்தார்கள்.  அவர்களின் உடம்பில் ஊசியால் குத்தினால் ரத்தத்திற்குப் பதிலாக சாராயமே வரும். 

கண்ணுச்சாமிக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.  மனைவி கயல்விழி ஒரு பக்காவான கிராமத்துப் பெண்.  வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து சனி, திங்கள் கிழமைகளில் புருசனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருப்பவள்.  அவர்களுக்கு நான்கு வயதில் விசு எனும் பையனும் மூன்று வயதில் ரிதன்யா எனும் பெண்ணும் இருக்கின்றனர். 

இவன் இரவு வீட்டுக்கு கிளம்பும்போது ஒரு குவாட்டர் பிராந்தியை விழுங்கிவிட்டுத்தான் கிளம்புவான்.  போய்ச் சேர இரவு மணி பத்தாகிவிடும்.  அதுவரை குழந்தைகள் இருவரும் விழித்துக் கொண்டுதான் இருப்பர்.  இவன் வாங்கிக்கொண்டு போகும் முறுக்கை பாதித் தூக்கமென்றாலும் தின்றுவிட்டுத்தான் தூங்குவார்கள்.  வார லீவு நாட்களில் குழந்தைகளை முன்னும் பின்னும் டிவிஎஸ் வண்டியில் உட்கார வைத்து ஊரை சுற்றி வருவான்.  அப்போது அந்த குழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தை பார்க்கும்போது கண்ணுச்சாமிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

திருப்பூரில் புதிதாக வந்திருக்கும் சர்க்கஸ் பார்க்க கயலையும் குழந்தைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டிப் போகவெண்டும்.  குழந்தைகள் மிகவும் சந்தோசப்படும்.  கயலையும் வெளியே கூட்டிப் போய் எத்தனை நாட்களாகி விட்டது.  ஆறு மாதம் முன்பு பெருமாநல்லூர் கொண்டாத்தா கொவிலுக்கு திருவிழாவின் போது கூட்டிப் போனதுதான்.  அதன்பிறகு எங்கேயும் கூட்டிப் போனதில்லை.  பாவம் அவளும் ஒன்றும் இதுவரை கேட்டதில்லை. 

பஸ்ஸை விட்டு இறங்கும்போதும் தலை சற்றே வலித்தது.  வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே விசுவும் ரிதன்யாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.  ஓடி வந்து அப்பா என காலைக் கட்டிக்கொண்டார்கள்.  கையிலிருந்த மிக்சர் பாக்கெட்டை பிடுங்கிக் கொண்டான் விசு.  அவனைத் துரத்தியபடி ரிதன்யா ஓடினாள்.

கண்ணுச்சாமி நேராக கை கால்கள் கூட கழுவாமல் கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.  கயல் பதறிப் போய் ஓடிவந்தாள்.

ஏனுங்..மாமா என்னாச்சுங்க….வந்த உடனே படுத்துட்டீங்க….”

ஏனோ தெரியலைடீ….தல லேசா வலிக்குது….கொஞ்சம் தைலம் இருந்தா போட்டுவிடு

கயல் ஓடிப்போய் அமிர்தாஞ்சன் எடுத்து வந்து நெற்றியில் தடவி விட்டாள்.  தலையை தடவிக் கொடுத்தாள்.

இந்த கருமத்தை குடிக்காட்டி என்ன?  கண்டபடி காசை செலவளிக்காதீங்கன்னா கேட்டாத்தானே ஆகும்.  நமக்கும் ரெண்டு புள்ளைக இருக்குதுன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?”

அப்போது ரிதன்யா அழுதுகொண்டே வந்தாள். 

அப்பா….எனக்கு மிச்சர் தரவே மாட்டேங்குறான்…”

ஸ்ஸூ….அப்பாவை தொந்தரவு பண்ணாத….அப்பாவுக்குத் தலை வலிக்குதாம்

ஏப்பா தலையை வலிக்குதா?  நான் வேணா மாத்திரை தரட்டுமா?”
ஓடிப்போய் மாத்திரை டப்பாவை தேடினாள்.

கண்ணுச்சாமி அப்படியே தூங்கிப்போனான்.  அவனுடைய மார்பில் தலை வைத்து ரிதன்யாவும் அவனுடைய காலடியில் விசுவும் தூங்கிப் போனார்கள்.

காலையில் விழித்தபோதும் அதே தலைவலி நீடித்தது.  யாரிடம் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.  சொன்னால் வேலைக்குப் போகவிடமாட்டார்கள்.  இன்றைக்கு வேலைக்குப் போயே ஆகவெண்டும்.  இவன் போய்தான் இந்த வாரத்திற்கான சரக்குகளை வாங்க பர்ச்சேஸ் ஆர்டர் போடவெண்டும்.

கடைக்கு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது.  பர்ச்சேஸ் ஆர்டர் போட ஸ்டாக் எடுக்க ஆரம்பித்தான்.  அவனது உதவியாளன் முருகன் இன்னும் வந்து சேரவில்லை.  கண்ணுச்சாமியால் நிற்க முடியவில்லை.  அப்படியே உட்கார்ந்து விட்டான்.  முருகன் வந்து இவனைப் பார்த்தபோது அதிர்ச்சியானான்.

என்னண்ணேஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கீங்க….?”

ஒண்ணும் இல்லடா  சீக்கிரம் ஸ்டாக் எடு.  பர்ச்சேஸ் ஆர்டர் போடணும்

அதை விடுங்க….ஒரு நிமிசத்துல எடுத்துடலாம்  இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு…?”

தலை வலிக்குதுடா  வெற ஒண்ணுமில்ல..  நேத்து ராத்திரி டவுன் பஸ்காரன் திடீர்னு பிரேக் போட்டானா..  பின் மண்டையில நல்ல அடி.  ராத்திரி புடிச்சு தல விட்டு விட்டு வலிக்குது.”

சரி  வாங்கண்ணே.  ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடலாம்…”

இல்லடா ஒண்ணும் இல்லடா  இப்பல்லாம் ஆஸ்பத்திரியில ஒண்ணும் இல்லாததற்கெல்லாம் மூட்டை மூட்டையா பணம் பிடுங்கறான்.  கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாப் போய்விடும்

முருகன் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தான்.  நேரம் செல்ல செல்ல கண்ணுச்சாமியின் முகம் மிகவும் வாடத்துவங்கியது.  உடனே ஒரு ஆட்டோ பிடித்து அருகில் இருக்கும் ரேவதி மெடிக்கல் செண்டருக்கு கூட்டிச்சென்றான்.

டாக்டர் அவனைப் பார்த்ததும் விவரங்களைக் கேட்ட பிறகு தலைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்.  ஸ்கேன் எடுத்து வரும்போதே கண்ணுச்சாமி மயங்கி விழுந்தான்.  உடனே அட்மிட் செய்யப்பட்டான்.  ஸ்கேன் ரிசல்ட் ப்ள்ட் க்ளாட்டிங் இன் ப்ரெய்ன் என்று சொன்னது.  மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கட்டியாக நின்றுவிட்டது.  ஆபரேசன் அவசியம் என்றார்கள். 

கண்ணுச்சாமியின் அப்பாவும் கயல்விழியும் வரவழைக்கப்பட்டார்கள்.  கையெழுத்து வாங்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.  விசுவும் ரிதன்யாவும் வீட்டில் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்கள்.
அடுத்த நாள் காலை பணம் செலவ்வாகிவிடுமே என்று பயந்த மிடில்க்ளாஸ் மனிதன், இரண்டு இளம் பிஞ்சுகளின் தகப்பன் கண்ணுச்சாமி செத்துப்போனான். 

 வீட்டில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள்.  விசுவுக்கும் ரிதன்யாவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.  தனக்கு மிகவும் பிடித்த மாமாவும் அத்தையும் வந்திருந்தார்கள்.  ஆனால் எப்போதும் தன்னைப் பார்த்து சிரிக்கும் அத்தை ஏன் அழுகிறாள் என்பதுதான் அவர்களுக்கு புரியவில்லை.  பெரியப்பாவின் பையன் ரகு அண்ணா கூட வந்திருக்கிறான்.  ஆனால் அவன் விசுவோடு விளையாட வரமாட்டேன் என்கிறான். 

பாடி எப்ப வருமாமா….?” என்று பக்கத்து வீட்டுத் தாத்தா கேட்டார். 

போஸ்ட் மார்ட்டமெல்லாம் பண்ணி வந்து சேர பதினோரு மணியாய்டும்…”-என்று பதில் சொன்னார் பெரியப்பா.

ஏப்பா பாடிய அறுக்காம தர மாட்டாங்குளா?”

பொதுவா அறுக்க மாட்டாங்க. ஆக்சிடெண்ட் கேஸ்னா அறுக்காம கொடுக்க மாட்டாங்க….”

என்ன சொல்றது.  நேத்து நல்லாதானய்யா இருந்தான்.   இன்னெக்கி இப்படிப் போய்ச்சேருவான்னு யாரு நெனைச்சாங்க.  இந்த பிஞ்சுகளைக் கண்டாதான் மனசு அறுக்குதுப்பா…”

என்ன பண்றது பெருசு.  கடவுள் வெளையாடுற வெளையாட்டு இது

விசு அழுது கொண்டிருந்தான்.  ரிதன்யாவின் முகம் இன்னும் சிறிது நேரத்தில் அழுதுவிடுவாள் போலிருந்தது.  எளவுக்கு வந்திருந்தவர்கள் அவர்களைப் பார்த்து இச் கொட்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் இருந்த செந்தில், கண்ணுச்சாமியின் பங்காளி  விசுவை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றார்.  ரிதன்யா அவர் பின்னாடியே ஓடினாள்.

ஏண்டா தம்பி அழுவுறே….  அப்பா வெணுமா?”.

இல்ல

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வேற என்னடா?”

எங்கூட யாரும் வெளையாட வரவே மாட்டேஙுறாங்க.  ரகு அண்ணா, சுந்தர், ராசு யாரும் வர மாட்டேங்குறாங்க……”

இப்போது ரிதன்யாவும் அழ ஆரம்பித்தாள்.

நீ ஏம்மா அழுவுறே?”

ம்ம்ம்எனக்கு லாலிபாப் வேணும்.”

இருவரையும் கடைக்குக் கூட்டிப்போனான்.  இருவருக்கும் லாலிபாப் வாங்கிக் கொடுத்தான்.  விசு அதை வாங்க மறுத்துவிட்டான்.

வேற என்னடா வேணும்?”

எனக்கு வெளையாட டயர்வண்டி வேணும்…”

அதுக்கு இப்ப எங்கடா போறது?”

எங்க வீட்டு ஓட்டுமேல இருக்குஎடுத்துக் கொடுங்க.  நான் வெளையாடனும்

சரி வாஎடுத்து தாரேன்

அவர்கள் இருவரோடு வீட்டுக்கு வரும்போது ஆஸ்பத்திரியில் இருந்து பாடி வந்திருந்தது.  வண்டியில் இருந்து பிணத்தை இறக்கி கீழே வைத்து சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள்.

யாரோமகனையும் மகளையும் கொண்டு வாங்கோஎன்று அழைத்தார்கள்.  செந்தில் இருவரையும் கூட்டத்தின் இடையே கூட்டிப் போனான். 

விசுவின் அழுகை வலுத்தது.  ரிதன்யாவோ லாலிபாப் சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தாள்.

வா பாப்பா.  அப்பாவைப் பாத்துட்டு வந்துடலாம்

இல்ல.  கொஞ்சம் இருங்க நான் இதை சாப்பிட்டுட்டு வந்துடறேனே..” என்று சொல்லியபடி லாலிபாப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

சரி.. நீயாவது வாடா…”-என்று விசுவை கூப்பிட்டான்.

ம்ம்ஹூம்..  நான் வரமாட்டேன்எனக்கு டயர் வண்டியை எடுத்துக் கொடுங்க. நான் வெளையாடனும்….”

இடது கையில் விசுவையும் வலது கையில் ரிதன்யாவையும் தூக்கிக்கொண்டு செந்தில் பாடியை நோக்கிப் போக யத்தனித்தான்.  ஆனால் இருவரும் கத்தி அழ ஆரம்பித்தார்கள்.  இருவரும் அழுத அழுகையைப் பார்த்து கூட்டமே கதறி அழுதது. 

செந்தில் கூட்டத்தின் அருகிலேயே செல்ல முடியவில்லை.  இருவரும் துள்ளியபடியே கத்தியதால் கையில் இருந்து நழுவினார்கள். செந்திலால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. ஆகையால் செந்தில் ஓட்டின் மீது தேடிப்பார்த்து டயர்வண்டியை எடுத்து விசுவின் கையில் கொடுத்தான்.  ஸ்விட்ச் போட்டது போல அழுகை உடனே நின்றது. 

குச்சி?”

குச்சியைத் செந்தில் தேடுமுன் விசு 'குச்சி வேணாம்' என்று சொல்லியபடி  
விசு டயர்வண்டியை கையாலேயே  தட்டியபடி மெதுவாக ஓடினான்.  அவன் பின்னால் ஒரு கையால் லாலிபாப்பை சூப்பியபடி இன்னொரு கையில் கண்களைத் துடைத்தபடி  ரிதன்யா ஓடினாள்.  அதே நேரத்தில் பிணத்தை சுமந்தபடி பிணவண்டி அவர்கள் பின்னால் சென்றது.   பிணவண்டியின் பின்னால் சாவுக்கு வந்திருந்த மக்கள் மெதுநடையாய் சென்றனர். 


அப்போது டயர்வண்டியின் குறுக்கே ஒரு சின்னப் பையன் விழுந்தபோது 


"அறிவு கெட்ட நாயே.... ரோட்டைப் பாத்துப் போகமாட்டியா?"-என திட்டிக் கொண்டிருந்தான்.



11 comments :

  1. நன்று...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கதை. இனி தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. சிறுகதைகள் படிப்பதற்கு சுலபம்.. அதனை சிருஷ்டிப்பது எவ்வளவு பிரயத்தனத்துக்கு உரியது என்பது எழுதுபவர்களுக்குத் தான் புரியும்... தங்களின் பிரயத்தனம், எழுதுபவன் என்கிற முறையில் எனக்கும் கொஞ்சம் புரிவதாகவே உணர்கிறேன்...

    ReplyDelete
  4. நன்றி கோவை நேரம்

    ReplyDelete
  5. நன்றி தமில்வாசி பிரகாஷ்...பின்தொடர்தலுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நன்றி சுந்தரவடிவேலு..
    சிறுகதை எழுதுவதை விடவும் கவிதை எழுதுவது என்பது மிகவும் சிரமம். அதற்கு கடுமையான உழைப்பு வேண்டும். அது உங்களிடம் நிறையவே உள்ளது.

    ReplyDelete
  7. கதை அருமை நண்பா

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. நச்சுன்னு முடிச்சுட்டீங்க. சூப்பர்.

    ReplyDelete
  10. நல்ல கதை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @சி.பி.செந்தில்குமார்
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    @ ananthu

    மிக்க நன்றி அனந்து

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......