PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, December 30, 2013

எங்கள் வீட்டில் ஆனந்தப் பிரசவம் -2- வெற்றுக்கூடு


இது எங்கள் வீட்டில் ஓர் ஆனந்தப் பிரசவத்தின் தொடர்ச்சி...
அதை வாசிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்.

உறங்கும் குஞ்சுகள்

அடுத்த நாள்  அருகில் சென்று கூட்டை கையில் தொடாமல் உள்ளே பார்த்தபோது கடைசி முட்டையும் பொரிந்து குஞ்சு வெளியே வந்திருந்தது.  கூட்டுக்குள் ஒரே குதூகலம்தான். எப்போதும் கீச் கீச் என்ற ஒலிகள எழுந்தவண்ணமே இருந்தன.

இரண்டு மூட்ன்று நாள் அவதானித்ததில் தாய்க்குருவி அதிகாலை குளிர் அடங்கும்வரை கூட்டுக்குள் இருக்கிறது.  சிறிது வெயில் வந்து கூதல் அடங்கிய பின் எட்டுமணிக்குமேலே கூட்டைவிட்டு இரையைத் தேடி போகிறது.  பிறகு அவ்வப்போது இரையுடன் வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுகிறது.  நாங்கள் யாரும் இரண்டு மூன்று நாட்கள் கூட்டின் அருகில் செல்லவே இல்லை.

அப்படியே போனாலும் தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து தொடாமல் எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவந்துவிடுவோம்.

கூட்டின் அருகிலேயே ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தூளி மாதிரி கட்டி அதில் தானியங்களை உடைத்து போட்டு வைத்தோம்.  தாய்க்குருவி இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும்.  கீச் கீச் என்று கூவிக்கொண்டு அந்த தானியங்களை கொத்தி தின்ன ஆரம்பித்தது.

அந்தக் கூடு மிகச் சிறியது.  தாய்க்குருவியோடு ஐந்து குருவிகளுக்கும் அந்த சிறிய கூடு போதுமானதா என்கிற கேள்வி எங்களுக்குள் உதித்தது.  இருந்தபோதும் கூட்டை கட்டிய குருவிக்கு இது தெரியாதா என்று வாளாவிருந்தோம்.

மூன்றாம் நாள் காலை பத்து மணிக்கு கூட்டின் அருகில் போய் பார்த்தபோது கூட்டினுள் தாய்க்குருவி இருக்கவில்லை.  ஆகையால் தைரியமாய் கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்ததும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  கூட்டினுள் இப்போது இரண்டு குஞ்சுகள் மட்டுமே இருந்தது.  மற்ற இரண்டு குஞ்சுகள் எங்கேவெனத் தெரியவில்லை.  பறவைப் பார்வையாளர்களைக் கேட்டபோது..தாய்க்குருவி அதைத் தின்று இருக்கலாம் என்று கூறினார்கள்.  அடப்பாவி இப்படியும் நடக்குமா என்று வியப்பதைத் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

கூட்டின் இடப்பற்றாக்குறையால் தாய்க்குருவி இளம்குஞ்சுகளை தின்றிருக்க ஒரு நியாயம் இருந்தது.  இல்லாவிடில் மற்ற வளர்ந்த இருகுஞ்சுகளும் ஏறி மிதித்து இளம் குஞ்சுகள் செத்திருக்கலாம்.  தாய்க்குருவி செத்த குஞ்சுகளை அப்புறப்படுத்தி இருக்கக்கூடும்.  ஆனால் உடைந்த முட்டையின் ஒட்டுப்பகுதிகள் கூட்டினுள் இருக்கவில்லை.  கூடு நன்றாக சுத்தாமாகவே இருந்தன.

மனதைத் தேற்றிக்கொண்டு அந்தக் கூட்டை தினமும் அவதானிக்க ஆரம்பித்தோம்.  தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து கூட்டருகில் சென்று கையில் தொடாமல் அந்தக் குஞ்சுகளை கொஞ்சினோம். அதுவும் கூட்டருகில் யார் வந்தாலும் சத்தம் கேட்டதும் தாய்க்குருவிதான் வந்துவிட்டதென்று எண்ணி வாயைத் திறந்தபடி கத்தும்.  சில வேளைகளில் தாய்க்குருவி எண்கள் அருகிலேயே இருந்து நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தூரமிருந்து பார்த்தது.  பிறகு பயமின்றி எங்கள் அருகில் வந்தது.  நாங்கள் அதற்காக அதிர்ந்து கூட பேசுவதில்லை.  எல்லோரும் மௌனமொழியிலேயே பேசிக்கொள்வோம்.  ஆகையால் தாய்க்குருவி இப்போதெல்லாம் எங்களைக் கண்டு பயப்படுவதில்லை.

குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்தது.  கண்கள் மட்டும் பெரிதாகவே இருந்தது.  கால்கள் வளர்ந்திருந்தது.  கால் நகங்கள் முளைத்திருந்தது.  அவற்றின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.

அடுத்த நாள் மாலை மணி நான்கு இருக்கும்.  நான் ஆபீசிலிருந்து வந்ததும் முதல் வேலையாக கூட்டைப் பார்க்கப் போனேன்.  தாய்க்குருவி அங்கே இருக்கவில்லை.  கூட்டை எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.  கூடு வெற்றுக்கூடாக இருந்தது.  பசங்களையும் தங்கமணியும் கத்திக் கூப்பிட்டேன்.  அவர்கள் வருவதற்குள் அருகில் தேடினேன்.  கீழே ஒரு குஞ்சு விழுந்துகிடந்தது.  குனிந்து அதைப் பார்த்தேன்.  உயிர் இருந்தது.  அருகில் இன்னொரு குஞ்சுவும் கிடந்தது. அதுவும் உயிரோடேயே இருந்தது.  என்ன செய்வதென்று தெரியாமல் அதனருகில் அமர்ந்து நால்வரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.




ஒரு பிளாஸ்டிக் முறத்தை எடுத்து அலுங்காமல் இரு குருவிகளையும் எடுத்து கூட்டினுள் விட்டோம்.  கொஞ்சம் உயிர் இருக்கவே செய்தது.  அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு கூட்டைவிட்டு தள்ளி வந்து நின்றுகொண்டோம்.  இப்போது தாய்க்குருவி எங்கிருந்தோ வாயில் உணவோடு பதட்டமாக வந்து கூட்டுக்கு சென்றது.    கொஞ்ச நேரத்தில் குஞ்சுகளின் கீச் சத்தம் கேட்டதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது.

கூடு சிறியதாக இருப்பதால் அது கூட்டின்  விளிம்புக்கு வந்து தவறி கீழே விழுந்திருக்க வேண்டும். கூட்டுக்கும் கீழே தரைக்கும் சுமார் நான்கடி உயரம் மட்டுமே இருக்கும்.  நல்லவேளை உயரம குறைவாக இருந்ததால் அடி குறைவாகவே பட்டிருக்கும்.  ஆனால் குஞ்சுகள் எப்போது விழுந்தது, எவ்வளவு நேரம் அது தரையிலேயே கிடந்தது என்று தெரியவில்லை.   மதிய நேரமாகையால் தரையும் கொஞ்சம் சூடாகவே இருந்திருக்கும் என்பதை நினைக்கும்போது பதைப்பாகவே இருந்தது.  பாவம் குஞ்சுகள் அதை எப்படி தாங்கியதோ என்று மனதில் ஒரு பாரம் குடியேறி உட்கார்ந்துகொண்டது.

அன்றைய இரவு எங்கள் எல்லோருக்குமே பதற்றம் சூழ்ந்த நீளமான இரவாகவே இருந்தது.  குஞ்சுகள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என மனது அடித்துக்கொண்டது.



விடிகாலை எழுந்து ஆவலோடு கூட்டருகில் சென்றேன்.  கூட்டில் தாய்க்குருவி இருக்கவில்லை.  கூட்டினுள் சத்தமுமில்லை.  மிக மெதுவாக எட்டிப்பார்த்தேன்.  குஞ்சுக் குருவியின் கால் பகுதி மேலே தெரிந்தது.  இரண்டும் மல்லாக்க இருந்தது.


இன்னும் அருகில் சென்று பார்த்தபோது சலனமில்லாத அந்தக் குஞ்சுக்குருவிகள் இரண்டும் இறந்து கிடந்தன.  படாரென்று இதயம் வெடித்ததைப் போல உணர்ந்தேன்.  அதற்குள் வீட்டில் எல்லோரும் வந்து பார்த்து அதிர்ச்சியில் சிலையாயினர்.  தங்கமணியின் கண்கள் குளம் கட்டி நின்றது.  ஒருவாரமாக எங்கள் உணர்வுகளோடு விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குஞ்சுக்குருவிகளின் பிணங்கள்  எங்களின் இதயத்தை கொஞ்சம் அதிகமாகவே அசைத்துப் பார்த்தது.

அதை அப்படியே விட்டுவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.  யாருக்கும் சாப்பிடத் தோன்றவில்லை.  மனசில் ஒரு பாரம் உட்கார்ந்துகொண்டு இம்சை செய்தது.  பிறகு நாமென்ன செய்வது என்று ஒருவாறாக எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம்.  மதியம் சென்று பார்த்தபோது கூடு வெறுமையாக இருந்தது.  குஞ்சுகளைக் காணவில்லை.  கூட்டுக்குள் நான்கு குஞ்சுகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் சுத்தமாக இருந்தன.  அந்த வெற்றுக்கூட்டை பார்க்கும்போது ஒரு தோல்வியின் தடயத்தைப் பார்ப்பதுபோலவே இருந்தது.



இப்போது கீச் கீச் எனும் சிம்பொனி இசை இல்லை... வீடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.  ஆறுதலாக அவ்வப்போது தாய்க்குருவி மட்டும் வந்து ஜன்னலில் தலையை காட்டிவிட்டு தொங்கும் பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் தானியங்களை கொத்திவிட்டுப் போகும்.
இனி இங்கே கூடு கட்ட அனுமதியில்லை என்று எழுதி வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

 

2 comments :

  1. வலைச்சர அறிமுகம் வாழ்த்துகள்.

    ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குஞ்சுகளுடன் பயணித்தோம் இறுதியில் கவலையாகிவிட்டது.

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......