PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, May 24, 2012

உருமி-சந்தோஷ் சிவனின் கூர்மையான ஆயுதம்


சந்தோஷ் சிவனின் உருமி நாளை வெளியாகிறது. நான் இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்து எழுதிய விமர்சனத்தை இப்போது மீள்பதிவு செய்கிறேன்.


வாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம்.  அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.


கி.பி.1498 வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களில் தன் சகாக்களுடன் ஆப்பிரிக்காவில் கால் பதித்து அவர்களை வென்ற பிறகு அங்கேயிருந்த குஜராத்தி மாலுமியை சிறை பிடித்து காலிகட் நோக்கி பயணம் ஆகிறான். கேரளாவில் தன்கால் தடம் பதிக்கிறான். அங்கேயிருந்த மிளகைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறான். அதற்காக மூன்று மடங்கு விலை தர முன்வந்தும் கேரள ராஜா செம்பூதிரி வணிகத்துக்கு மறுக்கிறார். ஆனால் தனது நாட்டுக்கு திரும்பிச் சென்ற வாஸ்கோ 1502-ல் மிளகின் மேல் மாறாத காதல் கொண்டு மீண்டும் பெரும் படையோடு வருகிறான். வரும் வழியில் நானூறு பேரோடு மெக்கா சென்று வரும் நான்கு முஸ்லிம் கப்பல்களை பிடித்து வைத்துக் கொள்கிறான்.

இதை கேள்விப்பட்ட ராஜா கொத்துவால் (நம்ம ஆர்யா) ஒரு நம்பூதிரியை தனது எழு- எட்டு வயதான மகனோடு சமாதானம் பேச தூதனுப்புகிறான்.  ஆனால் அந்த நம்பூதிரியின் நாக்கை அறுத்து, மற்றொரு நாயின் காதை  அறுத்து நம்பூதிரியின் காதோடு தைக்கப் படுகிறது. இதைகேள்விப் பட்ட கொத்துவால் கப்பலில் புகுந்து வாஸ்கோ-வைத் தாக்குகிறான். வாஸ்கோ தப்பித்துவிட கொத்துவால் கொல்லப்படுகிறான். இதைக் கண்ட கொத்துவாலின் மகன் கேளு கடலில் குதித்து தப்பிக்க கப்பல் தீ வைக்கப்பட்டு   எல்லோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் இறக்கும் தருவாயில்விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான். அதுதான் உருமி. நம்ம ஊர் சுருள் கத்தி. எம்.ஜி.ஆர். சில படங்களில் சண்டை போடுவாரே...அது மாதிரியான ஆயுதம். அதை வைத்துக்கொண்டு கேளு(பிரிதிவி ராஜ்)பெரியவனான பிறகு அதே வாஸ்கோ-வை தனது முஸ்லிம் நண்பன் கவ்வாலி(பிரபு தேவா), போர்த்துகீசியர்களை பழி வாங்கும் எண்ணம் கொண்ட அரக்கல் ஆயிஷா(ஜெனிலியா) ஆகியோரோடு எதிர்த்து சண்டை போட்டு வாஸ்கோவை வென்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை.


இது உருமிக்கும் தீத்துப்பி(துப்பாக்கி)க்குமான சண்டை.


கதை-திரைக்கதை-வசனம்-சங்கர் ராமகிருஷ்ணன்.  அழகாக வடிவமைத்திருக்கிறார்.  சரித்திரத்தின் ஒரு துளி உண்மையை எடுத்துக்கொண்டு கதையை பின்னிய விதம் அருமையோ அருமை.  அதில் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும் விசுவாசத்துக்கு விலை போன தியாகங்களும் அமைத்து கமர்சியல் கதையாக  கையாண்ட விதம் அருமை.
சந்தோஷ் சிவன்- அவருடைய கேமராவிற்கு எங்கிருந்துதான் காட்சிகள் கிடைக்கிறதோ... ஒவ்வொரு பிரேமும் மனதை அள்ளுகிறது. பசுமை, வானம், தண்ணீர், மலை எல்லாவற்றையும் கூடுதல் அழகோடு காட்டுகிறது. கொட்டும் அருவியின் ஒரு முனையில் இருந்து பிருதிவியும் மறுமுனையில் நின்று ஜெனிலியாவும் லுக் விட்டுக்கொள்ளும் சீன் கிளாஸ். இதை ராவணனில் பார்த்திருந்த போதும் சலிக்கவில்லை.

வித்யாபாலன் வரும் ஒரு பாடல் ஒளிப்பதிவு விளையாடுகிறது. சந்தோஷ் சிவனின் டைரக்சன் துல்லியமாக உள்ளது. துப்பாக்கியின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் செதுக்கி எடுத்திருக்கிறார் படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் அதிகம் தான். எடிட்டிங்கில் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். பழமையையும் புதுமையையும் லிங்க் செய்த விதம் புதுமையாக உள்ளது. மணிரத்னம் பாதிப்பு.

சண்டைக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. அனல் அரசு அசர அடித்திருக்கிறார். ஜெனிலியாவை நன்றாகவே கொடுத்த காசுக்கு மேலாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள். அழகாக ஸ்லோ மோஷனில் சண்டை போடும் அழகே தனி. ஜெனிலியாவின் அப்பாவியான அசடான  டெம்ப்ளேட்-ஐ இதில் உடைத்துள்ளார்.

நித்யா மேனன் ப்ரெஸ்நெஸ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஜெகதி பாபுவின் நடிப்பு நன்றாக உள்ளது. அவரின் நெளிவும், சுளிவும் அருமையான பாடி லாங்வேஜ்.


பிரிதிவிராஜ், பிரபுதேவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவை காட்சியின் இறுக்கத்தை உடைக்க நன்றாகவே பயன்படுகிறார். ஆர்யா நான் கடவுள் ஜுரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்-இருப்பினும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

பழங்கால மலயாளம் நன்றாக புரியும்படி உள்ளது. ஏறக்குறைய தமிழ்தான்.

இன்னும் நன்றாக செதுக்கி இழைத்து தமிழுக்கு கொண்டு வாருங்கள் சந்தோஷ்...ஜெயித்துவிடலாம்.

படம் - பார்க்கலாம் - பார்க்கவேண்டும்.

Friday, May 11, 2012

ஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை!



உன் கண்கள்
ஒரு அழகான
ஆப்பாயில்!
வெள்ளைப் புறவிழியின்
நடுவே இருக்கும்
வெந்தும் வேகாத
மஞ்சள் கருவிழி!
ஐந்து விரல்களில்
அப்படியே சுருட்டி
ஒழுகி முடிவதற்குள்
உள்ளே விடத் தோணுதடி!

கொஞ்சம் பெப்பர்
தூவிய
உன் கோபப் பார்வைதானடி
ஆப் அடிக்க 
நல்ல இணையான சைட்டிஸ்!



உன் மெத்தென்ற
கன்னங்கள் இரண்டும்
நீலகிரி பேக்கரியின்
சூடான 'பன்'னுகள்!
நாயர்கடை
டீ வாங்கி
நனைத்துத் தின்ன
உந்தன் பன்னு கன்னங்களை
இரவல் தருவாயா?




அவ்வப்போது வரும்
என் சிறுநீரகப் பிரச்சனைக்கு
உந்தன் வாழைத் தண்டு
கால்களைத் தருவாயா
சூப் வைத்து குடித்து
நிரந்தர நிவாரணம் பெறுகிறேன்!










உன் குடை மிளகா மூக்கை
சற்றே மறைத்து வை
பஜ்ஜிக்கடை பாய்
உன்னைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்!









உன் பலாச்சுளை
காதுகளோடு
கேரளா பக்கம்
போய்விடாதே...
சிப்ஸ் போட்டு
விற்றுவிடுவார்கள்!








உன் மாதுளை பற்களை
காட்டி
அடிக்கடி சிரிக்காதே...
மிக்சியோடு
ஜூஸ் கடைக்காரன்
உன் பின்னாடியே
அலைந்துகொண்டிருக்கிறான்!









உன் இதழோரம்
வழியும் திராட்சை ரசத்தை
சேமித்து
டாஸ்மாக் பாருக்கு
அனுப்பி வை
எந்தன் ஜொள்ளும்
உந்தன் ஜொள்ளும்
கலந்த கலவையில்
புதியதொரு
போதை மிகுந்த
மதுபானம் செய்வோம்!


 

Friday, April 20, 2012

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

நண்பர் பரிசல் போல் அவியல் என்று கலவையாய் எழுத ஒரு தலைப்பு வேண்டும் என தோன்ற உடனே தோன்றியது இதுதான். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். இந்த தலைப்பில் வேறு யாராவது எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது எழுதினால் தயவு செய்து கோர்ட்டுக்கேல்லாம் போகாமல் என்னிடம் ஒரு sms மூலம் தெரிவித்தால் போதும்.தொல்காப்பியர் மேல் சத்தியம்,உங்கள் தலைப்பை உங்களுக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் குடும்பத்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சென்ட்டர் மீடியானில் இருந்து திடீர் என்று குதித்த ஒருவரால் வண்டி, பொண்டாட்டி, பிள்ளையோடு தார் ரோட்டில் விழ நல்ல காயம். ஆஸ்பத்திரியில் அவரைச் சேர்த்துவிட்டு இலவசமாய் வண்டி எப்படி ஓட்டுவது என கொஞ்சம் அட்வைசும் பண்ணிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நானும் என் தங்கமணியும் கிளம்பினோம்.

ஆஸ்பத்திரி முக்குத் தாண்டியதும் மண்ரோட்டில் இருந்து தார் ரோடு ஏறும்போது வண்டி டயருக்கும் தார் ரோட்டுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. சட்டென்று கவிழ்த்துவிட்டது. நான் சுதாரித்துக்கொள்ள தங்கமணி அப்படியே பின்புறமாய் விழுந்து பின்தலையில் அடி. பெருத்த சேதம் எதுவும் இல்லையென்றாலும் பொண்டாட்டியின் பூரிக்கட்டையில் அடிவாங்கினால் தலையில் கோலிக்குண்டு அளவுக்கு வீங்கிக்கொள்ளுமே அது மாதிரி தலையில் சின்னக் கொம்பு முளைத்திருந்தது.

எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற எரிச்சலில்
"இதற்குத்தான் ஓவரா அட்வைஸ் பண்ணக்கூடதுங்க்றது" -என்று அர்ச்சனை விழுந்தது.

உடனே அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரி போக டாக்டர் இதற்காகத்தான் காத்திருந்தது போல சி.டி.ஸ்கேன் எடுக்கச் சொல்லிவிட்டார். நான் அவசியம் எடுக்கனுமா என்றேன். 'தலையில்லையா?பாத்துக்கறது பெட்டர். அசால்ட்டா இருக்காதீங்க' என்றார்.

உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டு சுடச்சுட தர அதை நான் பார்த்தபோது மூளையின் பல பரிமாணங்கள் அதில் தெரிந்தது. அட நம்ம தங்கமணிக்கு இவ்வளவு மூளையா என்று ஆச்சர்யப்பட்டேன். ஏதாவது பிரச்சினை இருக்கா என்று ஸ்கேன் எடுத்தவரிடம் கேட்டேன். அவர் ஒரு முறை ஸ்கேன் ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தங்கமணியை ஒரு தடவை பார்த்தார். மீண்டும் ஒருமுறை ரிபோர்ட்டைப் பார்த்துவிட்டு 'எதுவா இருந்தாலும் நாங்க ஒண்ணும் சொல்லக்கூடாது சார். நீங்க டாக்டரையே பாருங்க' என்று பில்டப் கொடுத்தார்.

எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது. தங்கமணி, "ஏங்க ஏதாவது ஆப்பரேசன் பண்ணச் சொல்லுவாங்களோ?" என்று கேட்டாள்.
"ஆமா உடனே கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சு சுத்தியலால் மண்டையை பிளந்து ஆப்பரேசன் செய்யப் போறாங்க" -என்றேன்.

தங்கமணிக்கு முகம் வெளுத்துவிட்டது. வாய் கந்தசஷ்டி கவசம் முணுமுணுத்தது.

சிறிது நேரத்தில் டாக்டரிடம் இருந்து அழைப்பு வர எங்களை உட்கார வைத்து ரிப்போர்ட்டைப் பார்த்தார். முதலில் சாதாரண கண்களில் பார்த்தார். பிறகு கண்ணாடி போட்டுகொண்டு பார்த்தார். திடுக்கிட்டார். பிறகு அருகில் சுவற்றில் இருந்த லைட்டில் மாட்டிப் பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை பார்த்தார், என் தங்கமணியை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார்.

அவ்வளவுதான் எங்களுக்கு வேர்த்தது. தங்கமணியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

டாக்டர் தன கண்ணாடியை சரி செய்துகொண்டு, ஒருமுறை செருமிக்கொண்டு தங்கமணியை நேராகப் பார்த்து, "ஒண்ணுமில்லை" என்று ஒத்தை வார்த்தையாக சிரித்துக்கொண்டே சொன்னார். தங்கமணி நம்பாமல் "ஒண்ணுமில்லையா சார்" என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.

"ஒண்ணுமே இல்லம்மா. பயப்படாம போங்க"

அவரின் டைமிங் காமெடி நன்றாகத்தான் இருந்தது. நாம யாரு...விடுவோமா?

"என்ன சார் ஒண்ணுமே இல்லையா?"-என்றேன்.

அவர் சீரியஸாக, "டோன்ட் அப்ரைட்.. நத்திங் சீரியஸ்"-என்றார்.

நான் "என்ன சார் நான் கொஞ்சம் மூளையாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்?" -என்றேன்.

அவர் 'ங்கே' என்று விழித்தபடி இருக்க, நாங்கள் பழி வாங்கிய சந்தோஷத்தில் வெளியே வந்தோம்.

பிறகு நேற்று எனக்காக பல் டாக்டரிடம் போயிருந்தேன். பற்கள் தேய்ந்து கடைவாய்ப் பல்லில் குழி விழுந்து முதலிலேயே கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து அடைத்திருந்தேன். அந்த சிமென்ட் பூச்சு இரண்டு வருடம் கழித்து விழுந்துவிட பல் மிகவும் கூசியது. சரி மீண்டும் சிமெண்ட் வைத்துவிடலாம் என்று நல்ல மேஸ்திரியை ஸாரி நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று வந்திருந்தேன். அங்கிருந்த பெண் அநியாயத்திற்கு சிடுசிடுவென இருந்தது. எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தது. தங்கமணி வேறு உங்க வேலையை இங்க காட்டிராதீங்க என்று முதலிலேயே வானிலை எச்சரிக்கை கொடுத்துவிட்டாள்.

டாக்டரைப் பார்த்த பிறகு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்தார். வேறொன்றுமில்லை பல் கூசாமலிருக்க பேஸ்ட், பிரஸ், மவுத்வாஸ்தான். பல் கூச்சம் போனபிறகு டிங்கரிங் பண்ணிக்கலாம் என்றார். பிறகு அந்தப் பெண் எங்களை தனியாக அழைத்துவந்து கம்ப்யூட்டரில் பல் விளக்குவது எப்படி என்று டெமோ காட்டினார்.

பிறகு 'உங்களுக்கு வேற ஏதாவது தொந்தரவு இருக்கா?" என்று கேட்டது அந்த சிடுசிடு.

தங்கமணி, 'ஒன்றுமில்லை' என்று சொல்ல நான் இடைமறித்து, "இந்தப் பொண்டாட்டிதான் பெரிய தொந்தரவா இருக்கு!"-என்றேன்.

சட்டென பல்ப் எரிந்தது அந்தப் பெண்ணின் முகத்தில். அது வரை அசிங்கமாக இருந்த அந்தப் பெண்ணின் முகம் அழகாகத் தெரிந்தது.

அருகில் தங்கமணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி இருந்தது. அந்தப் பக்கம் நான் திரும்பவே இல்லையே!!!!!

டிஸ்கி: இந்தப் பெயரில் (தே.மா.ப.சு) அவ்வப்போது உங்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே இருப்பேன்.

 

Wednesday, March 21, 2012

MICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உலகம்!


நாம் என்றாவது ஒரு எறும்பின் பயணத்தை தொடர்ந்திருக்கிறோமா? சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா?  மழை வந்த பின்னால் எறும்புக்கு எப்படி இறக்கை முளைக்கிறது?

இப்படி பல கேள்விகள், நம் சிறுவயது சந்தேகங்களின் அவிழ்க்கப்படாத  முடிச்சுகள் எவ்வளவோ இருக்கின்றன.  அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமான செய்திப்படம்தான்-MICRO COSMOS.

இதை செய்திப்படம் என்று சொல்வதில் எனக்கு சம்மதமில்லை.  இது ஒரு முழுநீள சித்திரம் என்றே சொல்வேன்.  இதில் காதல் உண்டு.  சண்டை உண்டு.  வாழ்வுக்காகப் போராடும் போராட்டம் உண்டு.  கூட்டமாய் சாவும் மனதைப் பிழியும் சோகக்காட்சிகள் உண்டு. படத்தை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் முடியாமல் எழமாட்டீர்கள் என்பதை திண்ணமாகக் கூறமுடியும்.

படத்தின் ஆரம்பத்தில் காமிரா பிரபஞ்சவெளியில் துவங்கி மேகக்கூட்டத்தை கடந்து காட்டைக் காட்டி புல்வெளியில் இறங்கி ஒரு புல்லின் மீது நிற்கும்.  காமிரா அந்தப் புல்லை பிரமாண்டமாய்க் காட்டும். அந்த ஒற்றைப் புல்லைப் பற்றியபடி ஒரு வெட்டுகிளியின் கால்கள் மட்டும் நகரும்.

ஒரு ரஜினி படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி அருமையாக இருக்கிறது. ஒரு எறும்பு மெகா சைசில் புல்லுக்கு இடையில் நகர்ந்து செல்லும்.  ஒரு காண்டாமிருகத்தின் கொம்புகள் மட்டும் தெரியம்.  அதை முழுமையாகக் காட்டும்போது ஒரு வண்டாய் மாறும்.

பூ ஒன்று அழகாக விரியும்.  உள்ளிருந்து வண்டொன்று ஓடும்.  பூவுக்குள்ளிருந்த தேனை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது மாதிரி வண்டுகள் உறிஞ்சும் காட்சி, அப்போது நடக்கும் மகரந்த சேர்க்கை, பனித்துளியை குடிக்கும் எறும்பு, சூரிய வெப்பத்தில் ஆவியாகும் பனித்துளி, எறும்பும் வண்டும் சண்டையிடும் காட்சி என காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறார்கள்.

நத்தைகள் இரண்டு ஓருயிர் ஈருடலாய் ஆலிங்கனம் செய்யும் காட்சி...நாம் எந்தப் படத்திலும் பாராதது.  அதற்கான பின்னணி இசை பொருத்தமானது.  மணிரத்தினத்தின் ஓம் நமஹா பாடல் நினைவுக்கு வருகிறது. இதை மீறியொரு காதல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் வந்ததில்லை எனலாம்.

குளவி ஒன்று முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.  அது வெளியே வந்ததும் அதன் முதல் உணவே அந்த முட்டை ஓடுதான் எனும்போது அந்த குளவிக்கு அந்த உணவை தின்னவேண்டும் எனும் சிஸ்டத்தை நினைத்து ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது.

எட்டுக்கள் பூச்சி தன்னுடைய உணவை வேட்டையாடும் விதம் மற்றொரு ஆச்சர்யம்.  வலையை விரித்து காத்திருக்கும் சிலந்தி, அதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சியை உடனே நான்கு உருட்டு உருட்டி தனது வலையில் pack செய்து கொள்கிறது.  பிறகு அதன் ரத்தத்தை மட்டும் உறுஞ்சிக் கொள்கிறது.

பிறகு பூ வாடுகிறது.  கோடை தலை விரித்து ஆடுகிறது. நிலங்கள் வெடிக்கிறது.  எறும்புகள் சின்ன ஒரு குழியில் இருக்கும் கொஞ்சூண்டு தண்ணீரை குடிக்கிறது.  ஒரு தாய் எறும்பு தனது பிள்ளைக்கு தண்ணீர் ஊட்டிவிடும் காட்சி அற்புதமானது.  ஆபாவாணன் ஊமை விழிகளில் காட்டுவது போல கம்பளிப் பூச்சி ஒன்று தொலைவில் வருகிறது.  அருகில் வரும்போது நூற்றுக்கணக்காக மாறுகிறது.  அதுவும் உடையாத ஒன்றன் பின் ஒன்றான வரிசையில் வருகிறது.  மற்றொரு திசையில் வரும் இன்னொரு பூச்சி வரிசை இடையில் அழகாகச் சொருகி செல்லும் காட்சி அற்புதமானது.  ஊர்வலம் சென்ற பூச்சிகள் ஓரிடத்தில் இரை கிடைக்காததால் ஒன்றன் ஒன்றன்மீது விழுந்து அத்தனையும் இறந்து போகின்ற காட்சி உண்மையில் நெகிழச் செய்கிறது.

எறும்புகளின் வாழ்க்கை முறை அழகாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.  அது உணவை சேமிக்கும் முறை.  தனது வலைக்குள் உணவைக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் முறை.  திடீரென்று மழை வந்து அத்தனையும் வீனாதல்.  எறும்புகளுக்கு இறக்கை முளைத்து பறந்து செல்லுதல்,  எறும்புகளின் பார்வையில் வளைக்குள் இருந்து பறவையின் அலகு ஒன்று உள்ளே வந்து கொத்திச் செல்வது என்று அற்புதமாக இருக்கிறது.

சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டு ஒன்று அதன் பாதையில் எத்தனை மேடு பள்ளங்கள்.  அவற்றை எப்படி சமாளித்து உருட்டிச் செல்கிறது.  அது போகும் வழியில் ஒரு செடியின் முள்ளில் சாண உருண்டை மாட்டிக்கொள்ள சற்றும் மனம் தளராமல் முள்ளிளிருந்து அதை விடுவித்து எடுத்துச் செல்லும் காட்சி ஒரு அழகான த்ரில்லிங்கான கவிதை.

மாமிசம் தின்னும் தாவரம் ஒன்று தனது பூவை விரித்து காத்திருக்கிறது. வாசனை தேடி வருகின்ற பூச்சியை மடக்கிப் போட்டு பூவுக்குள் மூடி தின்னும் காட்சி இதுவரை நாம் பார்த்திராதது.

இன்னும் எதிரியிடம் தப்பிக்க பந்து போல் சுருண்டுகொள்ளும் வண்டு,  இலையைத் தின்னும் புழுக்களின் கூட்டம். பூவுக்குள் உறங்கும் வண்டு,  இரவுக்காட்டில் உறங்கும் ஒவ்வொரு பூச்சிகள் என மனதை விட்டு அகலாத அற்புதங்கள் நிறைந்தது இந்தப் படம்.

இறுதியில் கொசுவின் பிறப்பு அற்புதங்களின் உச்சம்.

நண்பர்களே மனிதனுக்குத்தான் ஆறறிவு எனும் தியரி இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் உடைந்து போகும் என்பது உறுதி.  படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

இப்போதைக்கு அதன் ட்ரைலர் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=76R2EKEnoJQ

 

Monday, March 19, 2012

கணினியும் கலப்பையும்- கருத்தரங்கம்.


நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.
பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது.  இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.

முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார்.  கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார்.  அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது.  அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.

 ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது.  ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது.  எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது.  பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது.  ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது.  நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன்.  ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது.  நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.

எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது.  புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது.  இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது.  அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன்.  ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது.  எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது.  அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது.  ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது.  அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன்.  ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன்.  ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது.  எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது.  அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது.  கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது.  (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே).  கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது.  பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது.  ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது.  ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது.  கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.

அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார்.  அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.


"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம்.  காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார்.  அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன்.  தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது.  (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார்.  இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார்.  அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள்.  இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது.  நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள்.  ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை.  இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள்.  நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"

இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.

அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார்.    இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர்.  எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.  எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும்.  மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார்.  மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார்.  நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.  எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.  நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.



தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார்.  ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார்.  இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.

சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.

இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும்.  நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று.  நீங்கள்?





 

Monday, January 30, 2012

புத்தகக் கண்காட்சியில் குறும்படங்கள்

நேற்றைய புத்தகக் கண்காட்சியில் கூட்டம் அம்மியது.  இதைப் போலவே மற்ற நாட்களும் இருந்தால் திருப்பூரில் ஒரு அறிவுப் புரட்சி வெடித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

நேற்று மாலை உலககப்பட அரங்கில் சினிமாவைப் பற்றிய டாகுமெண்டரி போட்டார்களாம்.  அதை நான் தவறவிட்டுவிட்டேன்.  நான் போகும்போது துக்கம் என்கிற ஒரு குறும்படம் ஓடிக்கொண்டு இருந்தது.

ஜாதி இல்லைன்னு யார் சொன்னது.  இன்னும் கிராமங்களில் போய்ப் பாருங்க..ஜாதி பிரமாதமா வளர்ந்துட்டு இருக்குன்னு சொல்லும் படம்.  ஒரு தலித் வீட்டில் சாவு விழுந்து விடுகிறது.   அந்த சாவை விசாரிக்க வரும் கிராமத்துப் பஞ்சாயத்து தலைவர் சாவு வீட்டுக்குள் வராமல் தெருவில் நின்று கொண்டிருக்கிறார்.  சம்பந்தப்பட்ட சாவு வீட்டுப் பெண்மணி வீதி வரை வந்து ஊர்ப் பெரியவரின் காலில் விழுந்து அவரது ஆறுதலை ஏற்கிறார்.  ஆனால் அந்தப் பெரியவரோ(?) அந்தப் பெண்மணி காலில் விழும்போது சட்டென்று ஓரடி பின்நகர்கிறார்.  தவறியும் கூட அந்தப் பெண்மணியின் கை அவரது காலில் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.  பெரும்பான்மையான கிராமங்களில் இந்த நிலைதான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கிறார் இந்த டைரக்டர் சிவா.

இந்தப் படத்தைப் பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் விமர்சனம் வந்திருக்கிறது.

அந்த டைரக்டர் பேசும்போது தனது சொந்த அனுபவம் என்று அவர் அதை விவரித்த விதம் அருமையாக இருந்தது.  இந்தப் படத்தை ஒரு வக்கீல் அருமையாக விமர்சனம் செய்தார்.  என்னிடம் மைக் வந்த போது 'துக்கம் தொண்டையை அடைக்கிறது' என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்தேன்.

அடுத்ததாக சுபாஷ் எனும் புதுமுக டைரக்டரின் படம்.  இன்சூரன்ஸ் பணத்துக்காக தன சொந்த அண்ணனையே கொலை செய்து பெண்கள் பின்னாடி சுற்ற பைக் வாங்க திட்டமிடும் தம்பியின் கதை.  இன்னும் தெளிவாகச் செய்திருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய படம்.  அவரின் கன்னி முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.  இவர் இன்னும் முயற்சி செய்தால் நிச்சயம் உயரங்களை எட்டுவார்.

அடுத்ததாக காசு என்கிற குறும்படம்.  அவினாசி சிவா என்று ஒருத்தர் நடித்து டைரக்ட் பண்ணி இருந்தார்.  செருப்பு தைப்பவர்.  காலையில் வந்து கடையை விரிக்கிறார்.  மாலை வரை யாரும் வருவாரில்லை.  அர்ஜுனனின் பார்வை வீழ்த்தப்படும் பொருளின் மீதே இருப்பது மாதிரி   அவருடைய பார்வை கால்களின் மீதே இருக்கிறது.  பிய்ந்து போன செருப்பை ஒருவன் வீசி எறிந்து விட்டுப் போவது மனதை உருக்குகிறது.  சரி இனி ஒன்றும் ஆவப்போவதில்லை என்று முடிவு செய்து பொருள்களை எடுத்து பையில் போடுகிறார். கடைசியில் ஒரு ஈயத் தட்டில் இருந்த தண்ணீரை கொட்டிவிட்டு தட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது தட்டில் பிச்சைக்காசுகள் வந்து விழுகிறது.  ஒருவன் உழைக்கத் தயாராய் இருக்கும்போது ஆதரிக்காத உலகம் அவன் தட்டை தெரியாத்தனமாக ஏந்தும்போது ஆதரிக்கிறது..  அருமையாக இருந்தது.  வெல்டன் சிவா.

அடுத்ததாக அமளி துமளி என்கிற படம்.  இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தமையால் அதைப் பற்றி இங்கே வேண்டாம். இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர் நமது நண்பர்கள் தாண்டவக்கோனும் ரவிக்குமார் அவர்களும்.

பிறகு நானும் எனது மகன்களும் புத்தகக் கண்காட்சியில் புகுந்தோம்.  அங்கே காணக் கிடைத்த காட்சிகள்.....

எங்கேயும் எப்போதும் ஹீரோவாக இருப்பவர் நம்ம சுஜாதாதான்....
இறந்தும் வாழ்கிறார் இவர்.  இரந்தும் வாழ்கிறார் சிலர்.


அகம் புறம் அந்தப்புரம் எனும் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு புத்தகம்.  கிழக்குப் பதிப்பகம்.  விலை ரொம்ப அதிகமில்லை ஐநூறு என்று நினைக்கிறேன்.  வரலாறு முக்கியம்னு சொல்றவங்களுக்கு விலையெல்லாம் பெருசா?



புத்தகம் தேடும் குழைந்தைகள்....


கலைஞரின் குடும்ப புகைப்படம்.  ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் கலைஞரின் அபூர்வப் புகைப்படங்கள் நூலிலிருந்து...

குடும்பப் புகைப்படம் போட்டு ஆட்சியை தூக்கினது ஆனந்தவிகடன்தான்.
 தலைவரின் மாஸ்டர் பீஸ்..
 இது எந்தக் குழந்தை...

"அருகிலேயே இருந்தாலும்
கை வர மறுக்கிறது
அடுத்த நொடியின் ரகசியம்"

சிந்தனின் அருமையான கவிதை...
கமலின் அபூர்வப் புகைப்படம்.  புத்த பிட்சுவாய்.. மணா எழுதிய கமல் பற்றிய  நூலில் இருந்து...
கலைஞரும் எம்.ஜி.ஆரும்..



 

Wednesday, January 25, 2012

'அமளி துமளி' குறும்பட விமர்சனம்



நேற்று திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தில் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள்.  திருப்பூர் கிருஷ்ணன் முக்கிய விருந்தாளியாக வந்திருந்தார்.  ஆனால் கூட்டம் குறைவாகவே வந்திருந்தது.  அதை ஈடு கட்ட தங்களது சொந்த பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அழைத்துவந்து உட்கார வைத்து இருந்தார்கள்.  பள்ளி மாணவர்களை எதற்கெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் பாருங்கள்.  அவர்களும் இது ஓர் பாடவகுப்பாய் பாவித்து வழக்கம் போல சல சலவென அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  யார் உச்சஸ்தாயியில் பேசினாலும் கை தட்டிக் கொண்டிருந்தனர்.

கே.பி.கே. செல்வராஜ் பேசும்போது "மழைவர என்ன ராகம் வாசிக்க வேண்டும்"- என கேட்டார்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் "அமிர்தவர்ஷினி" என்று சொன்னார்.

"சரி.  புயல் வர என்ன ராகம் பாடவேண்டும்?"

 எல்லோரும் விழித்தனர்.

"வொய் திஸ் கொலைவெறி பாடினால் புயல் வந்து ஒரு தட்டு தட்டிவிடும்" என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  என்னே ஒரு டைமிங்?

திருப்பூர் கிருஷ்ணன் கொஞ்சம் நா.பா பற்றியும் மு.வ பற்றியும் மலரும் நினைவுகளாகப் பேசினார். இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்திருந்தால் நன்றாகப் பெசஈருப்பாரோ என்னவோ?

அடுத்து மூன்று குறும்படங்கள் போட்டுக் காட்டினார்கள்.

நமது நாளைய இயக்குனர் ரவிக்குமாருடைய ஜீரோ கிலோ மீட்டர், பசி படங்களும்,  தாண்டவக்கோனின் அமளி துமளியும் திரையிட்டார்கள்.

ரவிக்குமாரின் பசியும், ஜீரோ கி.மீ. இரண்டு படங்களும் கலைஞர் டி.வியில் பார்த்து பல தடவை பரவசப் பட்டுவிட்டதால் அமளி துமளி படம் என்னை வசீகரித்தது.


இன்றைய நிலையில் விவாகத்துக்கு பெண் கிடைப்பதுதான் மிகக் கஷ்டமாய் இருக்கிறது.  ஆனால் விவாகரத்து ஈசியாக கிடைத்துவிடுகிறது.  விவாகரத்து பெருகிவரும் இந்த கால கட்டத்தில் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அற்பமாக இருக்கும்.

போனவார ஆனந்தவிகடனின் என்விகடனில் வெளியான வக்கீல்களின் பேட்டியைப் படித்தால் பகீர் என்கிறது.  காலையில் ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம்.  வெளியே வந்து மதிய உணவு.  என்ன சாப்பிடுவது- வெஜ் அல்லது நான் வெஜ்ஜா என்று பிரச்சினை.  நண்பர்கள் எல்லோரும் நான் வெஜ் கேட்டதால் மாப்புவும் நான் வெஜ் என்று உறுதியாக நின்றார்.  பெண்ணோ நல்ல நாள் அதுவுமா நான் வெஜ் கூடாது என்று சொல்ல பிரச்சினை முற்றியது.  இது செட் ஆவாது என்று முடிவு செய்து உடனே எதிரில் கண்ட வக்கீல ஆபீசுக்குப் போய் பரஸ்பர விவாகரத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு பிரிந்துவிட்டனராம்.

என்ன காதல் செய்தனரோ? என்ன கன்றாவியோ?  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.

இந்தப் படமும் அதைப் பற்றியதுதான்.

உப்புச் சப்பில்லாத காரணத்துக்காக கணவனும் மனைவியும் அவர்களுடைய ஒரே பையன் முன்னிலையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.   கணவன் அவளுடைய செல்போனை போட்டு உடைத்துவிட்டு ஆபீஸ் போய் விடுகிறான்.

மனைவி பையனை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் அடுப்பில் கையை சுட்டுக்கொள்கிறாள்.  பையன் பள்ளிக்கு போக முடியவில்லை.  அந்த நேரம் பார்த்து அப்பாவின் போன் வருகிறது.  மகள் அழுதபடியே போனை எடுக்கிறாள்.  அப்பா பதறிப் போய் என்ன ஏதுவென்று விசாரிக்க மகளும் சண்டையை மேம்போக்காக சொல்லிவிடுகிறாள்.

ஆத்திரம் அடைந்த அப்பா உடனே அவருடைய மனைவிக்கு கான்பிரன்ஸ் காலில் அழைத்து மகளை விசாரிக்கச் சொல்ல தாயோ பதறுகிறார்.   கோபம் தலைக்கேற அதே லைனில் வக்கீலை பிடித்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.  அவரோ உடனே விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடவேண்டியதுதான் என்கிறார்.

இதையெல்லாம் அந்த பையன் பதட்டத்தோடு பார்த்துகொண்டிருக்கிறான்.
எங்கே அப்பா அம்மா பிரிந்துவிடுவார்களோ என்கிற பயம் முகத்தில் தெரிகிறது.  சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவின் ஆபீஸ் போய்ப் பார்க்கிறான்.

அங்கே அப்பாவின் ஆபீசில் நண்பர்களுடன் ஆலோசனை.  ஆளாளுக்கு மனைவியை ஒதுக்கிவிட ஐடியா கொடுக்கிறார்கள்.  நமக்குத்தான் பிரச்சினை பெரிசாக்குனாத்தானே திருப்தி.

இந்த சமயத்தில் அந்தப் பையன் உடைந்த செல்போனை சரி செய்து அப்பாவுக்கு ஸாரி என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறான்.  அவ்வளவுதான் எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.

ஒரு இரண்டெழுத்து வார்த்தையில் தீர்க்கிற பிரச்சினையை மற்றவர்கள் எல்லோரும் எப்படி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்.
இந்த படத்தை பார்க்க இங்கே  செல்லுங்கள்.

இவருடைய 'பூங்கா', 'இப்படிக்கு பேராண்டி' என்கிற முந்தைய படங்களை பார்த்திருக்கிறேன்.  அதில் லென்த்தியான ஷாட்களும் வசனங்களும் சோர்வைத் தந்தன.  ஆனால் இந்தப் படத்தில் எடிட்டிங் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள்.

நடித்த நடிகர்களும் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்கள்.

தாண்டவக்கோனின் மெச்சூர்டான இயக்கத்தை பார்க்கிறேன்.  வெல்டன் சார்.  இதே மாதிரியான சிறப்பான படங்களை எடுத்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

என்னுடைய பசங்களுக்கும் என் தங்கமணிக்கும் இவருடைய படங்கள் மிகவும் பிடிக்கும்.  எங்கள் வீட்டில் அடிக்கடி இவருடைய குறுந்தகடுகள் ஓடிச் சலித்துவிட்டன.

இவருடைய எல்லாப் படங்களின் குறுந்தகடு இன்று தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் இவருடைய ஸ்டாலில் கிடைக்கும்.  இவை மட்டுமில்லாமல் இன்னொரு ஸ்டாலில் எல்லாவகையான உலக சினிமாக்களும் கிடைக்கும்.  ஆகையால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்து வாருங்கள்.




 

Monday, January 23, 2012

திருப்பூர் புத்தகத் திருவிழா ஒரு முன்னோட்டம்.

திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 9வது புத்தகக் கண்காட்சி வருகிற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற இருக்கிறது.

தினசரி மாலை குறும்படங்களும், கருத்தரங்கமும், பட்டிமன்றமும், கலை நிகழ்ச்சிகளும், பாட்டுமன்றமும், வழக்காடுமன்றமும் நடைபெற இருக்கிறது.  இலக்கிய ஆர்வலர்களுக்கு தினமும் ராஜபோஜனம்தான்.   ஜமாய்ங்க திருப்பூர் மக்களே!

இந்த புத்தக 'விழா'வை - ஒரு திருவிழாவாக கொண்டாடி திருப்பூர் மக்கள் மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.  அதற்க்கு ஒரு முன்னோட்டமாக ஒரு திருவிழாவை நேற்றுப் பார்த்தேன்.

இந்த புத்தக விழாவை ஒட்டி திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே கலை திறனாய்வுப் போட்டி ஒன்று நேற்று நடத்தப் பட்டது.  ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டியும் திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.



நான் போட்டி நடந்த திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்குப் போயிருந்தேன்.  ஒரே திருவிழாக் கோலமாய் இருந்தது.  ரோட்டில் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி இருந்தது. புதிதாய் வருபவர்களுக்கு நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி சென்றிருந்தார்கள்.  சிலர் ஆர்.டி.ஓ. வீட்டின் முன்பு அவர் வெளியே வரமுடியாதபடி நிறுத்திவிட்டுச் சென்றதால் போலீசார் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தனர்.

உள்ளே போய்ப் பார்க்கையில் திருப்பூரே அங்குதான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாப் பள்ளிகளிருந்தும் வந்திருக்கிறார்கள் போலிருந்தது.  போன வருடம் இருந்த அளவை விட இருமடங்கு இருக்கும்.

ஓவியப் போட்டிகளில் சிறிய குழந்தை முதல் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் வரை திரளாக வந்து கலந்துகொண்டதைப் பார்க்கும்போது புத்தக விழா நிச்சயம் புத்தகத் திருவிழாவாக பரிணமித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூரில் மட்டும் ஐயாயிரம் பேரும் இதர இடங்களில் சேர்ந்து ஐயாயிரம் பேரும் மொத்தமாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள் என கண்காட்சி வரவேற்புக் குழுவினர் தெரிவித்தார்கள்.   பத்தாயிரம் என்பது சாதாரணமல்ல, இதன் பின்னணியில் எத்தனை உழைப்பு இருக்கிறது என்று எண்ணி மலைத்துவிட்டேன்.



இதில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் தனது பெற்றோர்களை கண்காட்சிக்கு இழுத்து வருவார்களேயானால் கண்காட்சி எத்தனை பிரமாண்டமாய் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பரிசுபெற்ற மற்றும் பரிசு பெறாத சிறந்த ஓவியம், கவிதை, கட்டுரைகளையும் கண்காட்சி நடைபெறும் பனிரெண்டு நாட்களும் காட்சிக்கு வைப்பார்களேயானால் நிச்சயம் குழந்தைகள் தனது பெற்றோர்களோடு புத்தகவிழாவுக்கு வருவார்கள்.  குழந்தைகளுக்கென்று சிறப்புத் தள்ளுபடி எதுவும் அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கலந்து கொள்ளும் குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் மூலம் பத்துப் பேரை தேர்ந்தெடுத்து ஐநூறு ரூபாய் அளவில் புத்தகங்கள் இலவசமாக வழங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது.

சேர்தளம் சார்பாக கண்காட்சியில் எங்கள் பங்கும் இருக்கும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண நிகழ்ச்சியை குழந்தைகள் திருவிழாவாக்கி காட்டியிருக்கிறார்கள்.  நாம் என்ன செய்யப் போகிறோம்?
 

Sunday, January 1, 2012

DAM 999 விமர்சனம்.


ஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம்,  முல்லைபெரியார் அணையைப் பற்றிய படம் என்று படம் காட்டிய படம், எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாமே என்று பார்த்தேன்.

படத்தில் நாலைந்து கதைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு போகிறது.  வினய்(ஜெயம்கொண்டான்)-விமலா ராமன் காதல் கதை, வினய்-யின் மனைவி டாகுமெண்டரி பண்ணி சாகசங்கள் செய்யும் கதை,  இவர்களின் குட்டிப்பபையன் சர்க்கரை நோய் நோயாளி, பிரெட்ரிக்-ரசியா நேவியில் பணிபுரியும் ஜோடிகளின் காதல் கதை.  இவங்க தாத்தாதான் அணையைக் கட்டினாராம். ஆஷிஸ் வித்யார்த்தி வில்லன்-அது ஒரு தனி ட்ராக்.

 வினய்-யின் அப்பா ஒரு ஆயுர்வேதிக் மற்றும் ஜோசியர்.  அவர் கணிப்பது எல்லாம் சரியாக நடக்கிறது.   தனது மகனுக்கும் மகள் போல வளர்க்கும் விமலா ராமனுக்கும் காதல். ஆனால் ஜாதகத்தில் ஒத்து வராது என்று காதலைப் பிரித்து, மகன் வேறொரு வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்து, சர்க்கரை நோயாளி மகனை பெற்று, அவனது மனைவியோஅசைன்மென்ட் அசைன்மென்ட் என்று சுற்றிகொண்டிருப்பதால் வெறுத்து தன் பழைய காதலியை சந்தித்து காதல் பண்ணலாம் என்று சொல்லும்போது பழைய மனைவி வந்து நானே இருந்துக்கிறேன், ஒரே ஒரு அசைன்மென்ட் கடைசியா முடிச்சுட்டு வரேன்னு சொல்ல தட்டுத் தடுமாறும் வினய்-யும் மண்டையை பிச்சுக்கும் நாமும் கடந்த காலத்தில் எத்தனை தமிழ்ப் படங்களை பார்த்து பாதியில் எழுந்து வந்தோமோ எத்தனை டைரக்டர்கள் சாபம் விட்டார்களோ தெரியவில்லை.  அப்படி படுத்தி எடுக்கிறார்கள்.

நல்லவேளை நம்ம அம்மா ஜெ செய்த ஒரே நல்ல காரியம் இந்த படத்தை தடை பண்ணியதுதான். அநேகமாக படத்தை பார்த்துத்தான் தடையே பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதில் டேம் எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அதைத்தான் படம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.  கடைசியில் பத்து நிமிடங்களுக்கு நம்ம சின்னப் பசங்கள் வீடியோ கேம் விளையாட்டில் வருமே அதுமாதிரி செட்போட்டு டேம் உடைகிறமாதிரி காட்டுகிறார்கள்.  மலையாளிகளே காறித்துப்பும் அளவுக்கு இருக்கிறது காட்சிகள்.  பிணம் விழும் காட்சியெல்லாம் பார்த்து இது ஒரு ஹாலிவுட் படம் என்று நம்பமுடியவில்லை.  நம்ம ராமநாராயணனை விட்டிருந்தால் பட்டாசு கிளப்பி இருப்பார்.


எதை நம்பி வார்னர் பிரதர்ஸ் பணத்தைப் போட்டார்கள் எனத் தெரியவில்லை.   டேம் உடைவதும் அதன் பலமின்மையால் உடைவதாகக் காட்டவில்லை.  நிலநடுக்கம் ஏற்படுவதாலும், அரசியல்வாதிகளின் ஊழலால் கட்டப்பட்ட அணை என்பதாலும் உடைகிறது.  அதில் மெரைன் சிட்டி எனும் ஊர் அழிவதாக் காட்டி கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் (ஜோதிடரைத் தவிர) பிழைத்துக்கொள்கிறார்கள்.  பிறகு பார்த்தால் அந்த மெரைன் சிட்டி-யில்தான் புத்தக வெளியீடு நடக்கிறது.  வெள்ளம் வந்ததற்கான அறிகுறியே காணவில்லை.  அட தேவுடா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையைக் காட்டி இந்த படத்துக்கு மார்க்கெட்டிங் பண்ணி போணி பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் இசை வேண்டுமானால் கொஞ்சம் தேறலாம்.  அதுவும் ஆஸ்கார் செல்லும் அளவுக்கெல்லாம் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தை தடை நீக்கி மக்களிடையே கொண்டு வரவேண்டும்.  நிச்சயம் மக்களே புறக்கணிப்பார்கள்.  அப்படி ஒரு மொக்கைப் படம்.  ஆகவே மக்களே ஒரு வேளை தடை நீங்கி வந்தால் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள்.  அப்படிப் போகணும்னா சொல்லுங்க இருநூறு நாட்களைத் தாண்டி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கும் பவர் ஸ்டாரின் லத்திகா படத்துக்கு டிக்கெட் எடுத்து தர்ரேன்.