PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, November 6, 2015

இளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை!!!

வெளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை.  கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான்.  தன் கையை வெட்டிக்கொண்டு சாகப் போகிறான்.  அப்போது அவன் வீட்டிலிருக்கும் ரேடியோ திடீரென பாடுகிறது.

'என்ன காயம் ஆனபோதும் எந்தன் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது பொன்மானே'

இளையராஜாவின் பாடல் அவனுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்.  சரி சாவதற்கு முன் இந்தப் பாடலை கேட்டுவிட்டு செத்துவிடுவோம் என்று எழுந்து சென்று அந்தப் பாடலை கேட்கிறான்.

அவனுக்காக போட்ட பாடல் மாதிரியே தெரிகிறது.  கையை வெட்டிக்கொள்ள வேண்டாம்,  உந்தன் மேனி தாங்காது என்று தடவுகிறது அந்த தேன் குரல்.

அந்த பாடல் முடிந்ததும் RJ ரேடியோவில் பேசுகிறாள்.  அது சன்பிளவர் FM, பேசுவது தென்றல்,   'கண்மணி அன்போடு காதலன்' என்கிற நிகழ்ச்சி.  இன்று நாம் கேட்கப்போகும் காதல் கதையை சொல்லப்போகும் லக்கி காலர் யாரு என்று டயல் செய்கிறாள்.  அது  விரக்தியில் இருக்கும் நம் கதாநாயகனுக்கு வருகிறது.  அவனிடம் பேசுவதன் மூலம் அவன் விரக்தியை உணர்கிறாள்..  'உங்க கேர்ல் பிரண்டோட சண்டையா?' என கேட்கிறாள்.  'செம்ம லவ் போல..' என்று அவனது 'சோகத்துக்கு மருந்து தடவ இளையராஜா பாடி வெச்சிருக்காரு...'என்று ஒரு சோகப் பாடல் போடுகிறாள்.

'ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்... மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்லவேணும்.. கொட்டுமழைக் காலம் உப்பு விக்கப் போனேன்.. காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்.. தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே...'  

அவன் சோகம் இளையராஜாவின் கானத்தில் கொஞ்சம் கரைகிறது...தப்புக்கணக்கை போட்டுவிட்டாய் என்று சொல்கிறது.  மற்றவரை குற்றம் சொல்ல வேண்டாம் என்கிறது.

பாடல் முடிந்ததும் அவள் லைனுக்கு வருகிறாள்.  'சொல்லுங்க என்ன சோகம்?' என்கிறாள்.

'அவளோடு காலையில் இருந்து பேசவில்லை.... அவளோட பேசாத...அவளோடு இல்லாத இந்த நாள்...' என்று சோக கீதம் பாடுகிறான்.  தென்றல் அவனை ரிலாக்ஸ் ஆக்க முயற்சிக்கிறாள்.

'வெளியே ஜோரான மழை.  மழையோட   ஒவ்வொரு துளியும் மண்ல ஊடுருவற மாதிரி ராஜா சார் இசை நம்  ஒவ்வொரு செல்லிலயும் ஊடுருவி இருக்கு.  இப்ப ஒரு காபி மட்டும் இருந்தா... மழை..காபி...ராஜா சார்....'   


அந்தக் குரல் அவனுக்கு ஆணையிடுவது போல்  இருக்கிறது.  போ போய் ஒரு காபி போட்டு இந்த மழையையும் இளையராஜாவையும் அனுபவி...என்பது போல் இருக்கிறது.

'ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது...நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் எதோ செய்யுது... தென்றல் வந்து தீண்டும்போது....என்ன வண்ணமோ.. மனசுல.."

பாட்டை கேட்ட படி அவன் காபி போடுகிறான்.  அங்கே எறும்புகள் கூட்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. ஒன்றின் அடிச்சுவட்டை பற்றி அடுத்த எறும்பு சென்றபடி இருந்தன.  அது அவன் தனிமையை விரட்டி கூட்டமாக இருக்கச் சொல்கிறது.  அவன் மனசு மாதிரியே காபியும் கொதிக்கிறது.  காபியோடு வெளியே வருகிறான்.  பாட்டைக் கேட்டபடி மழையை மனசுக்குள் உள்வாங்கியபடி பால் கலக்காத கசப்புக் காப்பி தொண்டையில் இறங்குகிறது.  அவனுக்கும்  வாழ்க்கை கசப்பெல்லாம் விழுங்கிவிட்ட உணர்வு வருகிறது.  ஒரு செடியை மழை முழுதாக நனைத்த மாதிரி மழை அவன் மனசை முழுதாக குளிர்வித்திருந்தது.  மனதில் இருள் விலகி ஒரு ஒளி பிறக்கிறது.

பாடல் முடிந்ததும் தென்றல் லைனுக்கு வருகிறாள்.

 'ஹல்லோ சார் இப்போ எப்படி FEEL பண்றீங்க?'

'இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கு தென்றல்'

 அவனின் காதல் கதையை கேட்கிறாள்.   வீட்டை எதிர்த்து கல்யாணம் முடிந்த கதையைச் சொல்கிறான்.

'அப்புறம் என்ன சண்டை?' என்று கேட்கிறாள்.

'அவளுக்கு இளையராஜா பாட்டுன்னா உயிர்.  காலையில் அவ கேட்டுட்டு இருந்த ராஜா சார் சாங்க நிறுத்திட்டேன்.  அப்ப ஆரம்பிச்ச சண்ட பெருசாயி அவள லேசாத்தான் தள்ளி விட்டேன்.  கட்டில்ல அடிச்சு விழுந்துட்டா.. அப்புறம் போயிட்டா...'

அருகில் இருக்கும் பெட்ரூம் திரைசீலை காற்றுக்கு மெதுவாக ஆடுகிறது.  அங்கே யாரோ இருப்பது போல தெரிகிறது...

'போயிட்டான்னா.....'  என்று தென்றல் கேட்கும்போது ஒரு பீதி தெரிகிறது.

கட்...கட்...முழு கதையையும் நானே சொல்லிட்டா..எப்படி? ...மீதிய கீழே இருக்கும் லிங்கில் பாருங்க.

கொஞ்சம் காபி...கொஞ்சும் மழை.. குறும்படம்.

இந்த குறும்படத்தில் அந்த பாடல்கள் அவனது சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி தேர்ந்தெடுத்து போட்டிருப்பது அழகு.  ஷூட்டிங் நடத்தும் இடத்தில் கிடைக்கும் பொருள்களை படத்துக்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது அழகு.

அந்த வீடு பழமையும் புதுமையும் கலந்த வீடு.  பெண்டுலம் ஆடும் பழைய மாடலில் புதிய கடிகாரம், பழைய மாடவிளக்கு அதில் புதுமையாக மெழுகுவர்த்தி வைத்து இருக்கும்,  பழைய மாடல் ரேடியோவில் மாற்றம் செய்யப்பட்டு FM கேட்கும் மாதிரி செய்யப்பட ரேடியோ.  பழைய காதலர்கள் சிலை புதுமையாக பளிங்குக் கல்லில்.  இதை உணர்த்தவே பழைய கருப்பு வெள்ளையில் புதிய காதல் கதையோ?

கருப்பு வெள்ளை கலர் அவனோட சோகத்தை சொல்லுகிறது.  அவன் காதல் கதை வரும்போது கலராகிறது.

வசனங்கள் எழுதி இருப்பவர் பிரபல எழுத்தாளர்  'பரிசல்காரன்' கே.பி.கிருஷ்ணகுமார்.    படத்துக்கு தேவையான க்யூட்டான வசனங்கள் படத்துக்கு ஒரு வண்ணத்தை தருகின்றன.

தனிமை தவிர்க்க எறும்புகள் கூட்டமாக  நகர்வதும்,  மனசு கொதிப்பது போல் காபி கொதிப்பது,  அவன் மனசு குரங்கு மாதிரி பாய்வதை குரங்கு பொம்மையை காட்டியும்,  மனசு குளிர்வதை செடியை மழை நனைப்பதையும்,
இப்படி கிடைக்கும் இடங்களில் எடிட்டர் சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் அவனை பார்த்து கண் சிமிட்டுவது, மழையை பார்த்தவாறு ஈசி சேரில் அமர்ந்து இருக்கும் காட்சி, காதல் சின்ன கோப்பை காபியில் ஆவி வருவது,  விளக்கு இப்படி பல காட்சிகளில் CINEMATOGRAPHER சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

இளையராஜா ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து கலக்கி இருக்கிறார் டைரக்டர் சூர்யபாரதி.     முதலிலேயே சஸ்பென்ஸ் வைத்து படம் முழுக்க பதைபதைப்பாக கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தென்றலின் குரலில் பேசி இருக்கும் ப்ரியா.D க்கு ரேடியோ உலகத்தில்  நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல தேர்ச்சி பெற்ற RJவைப் போல் கேட்பவரை வசீகரிக்கும் மாயாஜாலக் குரல்.  நடித்திருக்கும் விஷ்ணுவும் சௌமியாவும் நடிப்பு மோசம் சொல்வதற்கில்லை.



பரிசல்காரன் சொல்வது மாதிரி  ஒரு காபி கோப்பையோடு மழை பெய்யும் அந்தி மாலை நேரத்தில் காதுகளில் ஹெட்போனுடன் இந்தப் படத்தை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள்.  அவர்கள் இளையராஜாவை நேசிப்பவர்களாயிருந்தால் வெறியர்களாக மாறுவார்கள்.

இப்படத்தை இயக்கி இருக்கும் சூர்யபாரதி என் மகன்.... இல்லை..இல்லை... நான் சூர்யபாரதியின்  அப்பா!!!  வளரும் கலைஞனை வாழ்த்துவோம்.
 

1 comment :

  1. அருமையான பாடல் குறிப்புக்கள் இனித்தான் குறும்படம் பார்க்க வேண்டும் நேரம் ஒதுக்கி.பகிர்வு நன்றி.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......