PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, October 12, 2011

வாகை சூட வா -தமிழ்ப் படவுலகம் வாகை சூடும்..

கொஞ்சம் காலம் கடந்துதான்  வாகை சூட வா காண வாய்ப்பு கிடைத்தது.
 ஆனால் படத்தைப் பற்றி நாலு வார்த்தையாவது எழுதவேணும் என்று தோன்றியது.

முழுக்க முழுக்க  செங்கல் சூளைதான் களம்.  செங்கல் சூளையில்  வேலை செய்யும் சிறுவர்கள்தான் ஹீரோக்கள்.
என்னமா நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு சிறுவனிடமும் இருக்கும் நேட்டிவிட்டி, பாடி லாங்வேஜ், விமலை கலாய்ப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் எனது இளமைப் பருவத்தை பார்த்தேன்.

முதல் காட்சி.... கை ஒன்று திரையில் தெரிகிறது.  கையில் முருங்கைக் காய்கள் கொண்ட ஒரு பை.  கைக்கு சொந்தக்காரர்.  பார்த்தால்...பாக்கியராஜ்.  டைரக்டரின் ரசனை அலாதியாய் இருக்கிறது.

 கதையின் காலகட்டம் 1960 என்பதால் நிறைய மெனக் கெட்டிருக்கின்றனர்-டைரக்டரும், ஆர்ட் டைரக்டரும்.  சவாரி வண்டி, துணி ஏலம்(சீலை எடுத்து ரெண்டு வருசந்தான் ஆகுது..அதுக்குள்ளே கிழிஞ்சுபோச்சு),பனை மரமேறும் மீன், தோல் கவர் லேடியோ,
மண் பானைகள், ஈய டம்ளர்,   நத்தை சூப்,    ரிப்பன் வைத்த ரெட்டை ஜடை,  கனகாம்பரப் பூ, கழுத்து கருப்பு கயிறு, கூரை வீட்டில் காடா விளக்கு, சைக்கிளில் லாந்தர் விளக்கு,   கழுதை உப்பு வியாபாரம், கோபால் பல்பொடி விளம்பரம், பித்தளை சொம்பு அயரன் பாக்ஸ், ட்ரங்கு பெட்டி, மூக்கு நீண்ட லாரி,  பஸ் என அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பொருளிலும் தெரிகிறது.  இவையெல்லாம் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனவைகள். இவைகளை மீண்டும் காணும்போது மனதினில் ஒரு இனம் தெரியாத பரவசம்.

ஆடு முட்ட வருவதும், சிறுவர்கள் அதை சமாளிப்பதும், அதை அரைகுறையாய் வாத்தியாருக்கு சொல்லிக் கொடுப்பதும் அதன் பின்..ஸாரி.. முன்விளைவுகளும் ரசிக்கலாம்.

சவாரி வண்டியில் முதலாளி போகும்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை தருவது.. இன்னும் கூட சில கிராமங்களில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இறந்தவர்களுக்கு எருக்க மாலை போடுவது,  அந்த ஒப்பாரிப் பாட்டில் இருக்கும் எதார்த்தம் அருமை.  ரெட்டை மூக்கு வெத்தலையின் மூலம் தன காதலை தெரிவிப்பதும், அதற்கு பதிலாய் புது துணி எடுத்துக் கொடுத்தாகணும் என்பதும் நல்ல டெக்னிக்.

இசை-ஜிப்ரான். பாட்டுகளில் சரசர சாரக் காத்தும், போறாளே போறாளே, ஒப்பாரி பாட்டும் அருமை.  'சூளையில கல்லு வேகையில சின்னப் புள்ளையும் வேகுதம்மா... 'அட்டகாசமான நெஞ்சைத் தொட்ட வரிகள்.   யாரு எழுதுனது?  வைரமுத்துவா? பின்னீட்டீங்க போங்க.

விமலைப் பொறுத்த வரையில் இயக்குனர்களின் நடிகராகி வருகிறார்.  அப்பாவித்தனம், விடுகதைக்கு விடை கேட்டு அப்பாவுக்கு கடிதம்,  ஹீரோ அடி வாங்குவதும், விமல் அப்படியே பொருந்துகிறார். ஊர் மக்கள் செங்கல்லையே ஆயுதமாக்கி ஆட்களை விரட்டுவதும்.. டச்சிங்.
அலங்காரமில்லா அழகிய முகம்

இனியா... மேக்கப் இல்லாத முகம், அப்படியே கிராமத்துப் பொண்ணாக மிளிர்கிறார்.  காதல் ஜெயித்துவிட்டதில் ஒரு ஆடுகளம் லுங்கி டான்ஸ் மாதிரி ஒரு ஆட்டம் போடுகிறாரே அருமை.
கடைசியில் ஒலிக்கும் நான் பேச நினைப்பதெல்லாம்..பாடல் இன்னொரு டச்சிங்.
அலங்காரத்தோடு இனியா...

கணக்குப் போடும் ராமையா...பிறகு அவரே மாட்டிக்கொள்வதும், அதை அவர் சமாளிப்பதும்.. ரசிக்கலாம்.  நகைச்சுவையில் வடிவேலுவின் இடம் காலியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.  இந்த மாதிரியான பாத்திரங்கள் அவர் செய்தால் தூக்கிச் சாப்பிட்டிருப்பார்.  அவர் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இறுதிக் காட்சியில் செங்கல் லோடு ஏற்றிவிட்டு சிறுவர்கள் கணக்கு போட்டு காசு கேட்கும் காட்சி -நச் என்று முடித்திருக்கிறார் டைரக்டர். hats off you sarkunam sir.
உழைப்பவர் தோற்ப்பதில்லை


இடையில் தொய்வான திரைக்கதையை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.  இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேர்த்திருக்கலாம்.  பையன்கள் ஒவ்வொருவராய் மனம் மாறி வருவது போலவும், இருவர் மட்டும் கடைசியில் வருவது போலவும் கதை அமைத்திருந்தால் படம் தொய்விருந்திருக்காது.  ஏதோ சொல்லணும்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.

இந்த மாதிரியான படங்களை வரவேற்க வேண்டும்-குறைகள் அதிகம் சொல்லாமல்.

யாரிடம் குறைகள் இல்லை- எதில் குறைகள் இல்லை.  அதெல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கணும்.

 வாகை சூட வா- வெற்றி நிச்சயம்.
 

1 comment :

  1. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......