PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, February 1, 2014

Into the Wild(2007)-தொலையும் அனுபவம்.

02.02.2014-ஞாயிறு அன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் INTO THE WILD எனும் திரைப்படத்தைப் பற்றி ஓர் சிறிய அறிமுகம்.

நான் எப்போதாவது நினைப்பதுண்டு.... ‘சகலத்தையும் விட்டுவிட்டு எந்த ஒரு அடையாளமுமின்றி கால் போன போக்கில் மனம் போன போக்கில் இந்த பரந்த வெளியில் காணாமல் போய்விட்டால் என்ன?’

நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?  பயணங்கள் எப்போதும் அழகானவை.  ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தையே கொடுக்கின்றன.  அதுவும் இலக்கின்றி பயணம் செய்வது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தையே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாவலாசிரியர் எஸ்.ரா. ஒரு நாள் காலை அவரது  மனைவி கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து மார்க்கெட் போய்வரச் சொன்னாராம்.  அப்போது புறப்பட்டவர் ஒரு மாதம் கழிந்தே திரும்பி வந்தாராம்-கையில் காய்கறி இல்லாமல்.  மார்க்கெட் போகும் வழியில் ஒரு பஸ் வர அதில் ஏறி அமர்ந்து ஐம்பது ரூபாய்க்கு எங்கு கொண்டு விடுமோ அதுவரை சென்றுவிட்டு அப்படியே கால்நடை.  லிப்ட் கேட்டு என்று தேசாந்திரியாய் மாறி சுற்றி வந்தாராம்.  அதன் பிறகே அற்புதமான தேசாந்திரி என்கிற புதினம் நமக்கு கிடைத்தது.

In To The Wild இந்த திரைப்படமும் இது மாதிரியான கிறிஸ்டோபர் என்கிற தேசாந்திரியின் உண்மைக்கதைதான். 1990-ல் வட அமெரிக்காவிலிருந்து அலாஸ்கா வரையான க்ரிஸ்-ன் இரண்டு வருட பயணத்தை சுவைபட கூறி இருக்கிறார் இயக்குனர் Sean Penn.

படத்தின் ஆரம்பக்காட்சியில் பனிபடர்ந்த அலாஸ்கா முனையின் ஒரு பகுதியிலிருந்து நடக்க ஆரம்பிப்பான் க்ரிஸ்.  அவனை ஏற்றிவந்த வாடகை வாகன ஓட்டுனர் சொல்லுவார்..”உயிரோடு திரும்பி வந்தால் என்னைக் கூப்பிடு”.






இங்கு பற்றிக்கொள்ளும் கேள்விகளும் அதற்கான விடைகளுமே கதை.
கொஞ்ச தூரம் கடந்த பிறகு யாரோ விட்டுப்போன பஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறான்.  அதிலேயே தங்கிவிடுகிறார்.  அழகான பனிமலை, சுற்றிலும் ஆனந்தமயமான சூழல்.  படிக்க புத்தகம், தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் தனக்கு தேவையானதை சுட்டுத் தின்ன பறவைகளும், விலங்குகளும் என அமைந்த சூழ்நிலையில் வாழ்கிறான்..  எல்லாவற்றியும் தனது டைரியில் பதிவு செய்கிறான்.
இங்கு வர இரண்டு வருடம் ஆகியிருக்கிறது....

இரண்டு வருடம் முன்பு படித்து பட்டம் வாங்கியபின் அவனது அப்பா அம்மா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் தன் காரில் பயணத்தை ஆரம்பிக்கிறான்.  தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் தானம் செய்துவிட்டு தனது அடையாளங்கள் எல்லாவற்றையும் எரித்துவிட்டு அலெக்ஸ் என்கிற புதுப் பெயரோடு பயணம் ஆரம்பமாகிறது.

ஒரு நாளிரவு வந்த வெள்ளத்தில் கார் பழுதாகிவிட அதை அப்படியே விட்டு விட்டு கால்நடையாக கிளம்பிவிடுகிறான்.  அங்கங்கே லிப்ட் கேட்டு கிடைக்கிற வண்டியில் பயணம் அமைகிறது.  ஒரு தம்பதியை சந்திக்கிறான்.  அவர்களோடு கொஞ்ச நாள், பிறகு ஒரு அறுவடை மிஷின் வைத்திருக்கும் wayne  என்பவரோடு வேலை செய்கிறான்.  அவரிடம் சில வேலைகளை கற்றுக்கொள்கிறான்.  பார் ஒன்றில் இருவருக்கும் நடக்கும் உரையாடல் சுவையானது.
“நான் அலாஸ்கா போகிறேன்”
“அங்கு எதற்கு...  மார்க்கட்டிங்கா?
“பெரிய மலைகள், ஆறுகள், நீல வானம், மற்றும் ஆயுதங்கள் இல்லை,  மேப்  இல்லை...எதுவுமே இல்லை..”
“அங்கு நீ என்ன செய்வாய்”
“எனக்கான வாழ்க்கை வாழ்வேன்,  இந்த வீணாப் போன சமூகத்திலிருந்து விலகி...”
“யாரந்த வீணாப்போன சமூகம்?’
“பெற்றோர், அரசியல்வாதி, வேஷம்..போடும் எல்லா குமப்லும்..”
“நீ தவறு செய்கிறாய்”
நல்லது சொன்னா யார் கேக்குறா.. அலெக்ஸ் அங்கிருந்து செல்கிறான்.  அடுத்த பயணம், பாயும் காட்டாற்றில் லைசென்ஸ் இல்லாமல் ஒரு சின்ன காயக் எனும் சாகசப் படகில் ஹெல்மெட் கூட இல்லாமல் செல்கிறான்.  அங்கே அடிக்கடி சண்டைபோட்டு அடுத்த நிமிடமே சமாதானம் ஆகிக்கொள்ளும் ஒரு காதல் ஜோடியை சந்திக்கிறான்.    
 
அங்கிருந்து அவர்கள் வழிகாட்டுதல்படி மெக்ஸிகோ செல்கிறான்.  மீண்டும் நகரம்- உயர்ந்த கட்டிடங்கள், முகம் அறியா மனிதர்கள் இங்கிருந்து தப்பி ரயில் பயணம்.  அடையாளம் இல்லாமல் எல்லை கடக்கிறான்.  போலீசிடம் மாட்டி அடி உதை படுகிறான்.
 
மீண்டும் முதலில் சந்தித்த ரேய்னி-ஜான் ஜோடியை சந்திக்கிறான்.  அங்கு ஒரு பணிந்து வயதுப் பெண் இவன் மேல் காதல் கொள்கிறான்..  இதையெல்லாம் மறுதலித்து மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறான். 

வழியில் ஓய்வுபெற்ற ராணுவ கிழவரை சந்திக்கிறான்.  அவரிடம் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்கிறான்.  இப்படி சந்திக்கிற ஒவ்வொருவரையும் நிராகரித்துவிட்டு பனிபடர்ந்த அலாஸ்கா கானகத்தை நோக்கிய பயணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பழைய பேருந்தை அடைகிறான்.
 
இங்கு கொஞ்ச நாள் ஜாலியாக இருந்தாலும் பிறகு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறான்.  ஒரு விஷச் செடியின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அவன் படும் கஷ்டங்கள் என செல்கிறது கதை.  அவன் திரும்பி வந்தானா- அந்தப் பயணத்தின் முடிவில் கற்ற பாடம் என்ன என்பதை உருக்கமாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளருக்கு படம் முடிந்த பிறகு எழுந்து நின்று சபாஷ் போடவேண்டும்.  அவ்வளவு அழகாக பதிவு செய்திருக்கிறார்.  கிரீஸ்-ஆக நடித்த எமிலியின் நடிப்பு அட்டகாசம்- உடல் மெலிந்து இறுதிக்காட்சியில் நம் மனதை அள்ளிச் செல்கிறார்.

ஜிப்சி தம்பதிகள்- நாடோடி தம்பதிகள்-திருட்டு cd விபனையாளன்- காம நோக்கில் அணுகும் காதலி- மகனாக வந்து விடுகிறாயா என கேட்கும் வயதானவர்- இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அப்பா-  அப்பாவுடன் சதா சண்டை போட்டுகொண்டிருக்கும் அம்மா- பாசமிகு தங்கை என படம் நெடுக விதைத்திருக்கும் பாத்திரங்கள் நிறைய அன்பு வழிகிறது.

நிற்கக்கூட முடியாமல் இருக்கும்போது ஒரு கரடி வந்து மிரட்டுவது அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

எத்தகைய அனுபவமாய் இருப்பினும் அதை  இன்னொருவரிடம் பகிரும்போதுதான்  முழுமை அடைகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லும் படம். அதனால்தான் வெளிநாடு சென்றவர் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு அவர் எதிர்ப்படுபவரிடமெல்லாம் 'நான் அமெரிக்காவில் இருந்தப்ப...' என்று ஆரம்பிப்பது.  நாங்கல்லாம் ஒட்டகப்பாலில் டீ குடிச்சவிங்க... 

HAPPINESS ONLY REAL WHEN SHARED

HAPPINESS ONLY REAL WHEN SHARED

HAPPINESS ONLY REAL WHEN SHARED
 

1 comment :

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......