PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, January 22, 2013

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

புத்தகக் கண்காட்சிப் போட்டியா.. தேர்த் திருவிழாவா?

திருப்பூர் புத்தகத் திருவிழா 2013-ஐ ஒட்டி சென்ற ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கான கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றன.  

இந்த நிகழ்வுக்கு சேர்தளம் சார்பில் நானும் சென்றிருந்தேன்.  நான் போன வருடம் மாதிரி சாதாரணமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.  ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது,  மிகப் பிரமாண்டமான கூட்டம் கூடி இருந்தது.  

குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கென்று சுமார் ஆறாயிரம் பேர் திரண்டிருந்தனர்.  அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து அமரவைத்து ஓவியம் வரையவைத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் குழந்தையோடு பங்கேற்று ஒரு தேர்த் திருவிழாவுக்கு வந்த சந்தோசத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டத்தை சேர்த்த புத்தகத் திருவிழா குழுவினருக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும்.  ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அவர்களின் சீருடையோடு பேருந்தில் அழைத்து வந்திருந்தார்கள்.  

இத்தனை ஆர்வம் எப்படி வந்தது என்று பார்த்தால்  இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியே காரணம் என்றே தெரிந்தது.  இந்தக் கல்வி திட்டத்தில் மாணவர்களின் தனி மனிதத் திறமையை வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை.


எனது பையன் படிக்கும் மெட்ரிக் பள்ளியில் கூட சமச்சீர் கல்விதான்.  ஒரு நாள் ரீசைக்ளிக் பொருள்களில் ஏதாவதொரு உபயோகமான பொருளைச் செய்து வரச் சொன்னார்கள்.  கவிதை எழுதச் சொன்னார்கள்.  நாடகம் போடச் சொன்னார்கள்.  தொலைகாட்சி நல்லதா கேட்டதா என்று பட்டிமன்ற விவாதம் செய்யச் சொன்னார்கள்.   ஒவ்வொருவரும் இரண்டு நிமிடம் ஒரு பொருளைப் பற்றி பேசச் சொன்னார்கள்.  ஓவியம் வரையச் சொன்னார்கள்.  ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றிய தகவல் சேகரிக்கச் சொன்னார்கள்.  வீட்டைச் சுற்றியுள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை சேகரித்து எடுத்து வரச் சொன்னார்கள்.  இதற்க்கெல்லாம் ஒரு மதிப்பெண் கொடுத்து மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்கள்.


நிச்சயமாகச் சொல்கிறேன்.. சத்தமில்லாமல் ஒரு தலைமுறை நல்லமுறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.  அதற்கான அடையாளமே இவ்வளவு கூட்டம் கூட்டமாக ஒரு போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனை கூட்டமும் புத்தகக் கண்காட்சிக்கு வருமேயானால் புத்தகத் திருவிழா நிச்சயம் தேர்த் திருவிழாவாக மாறும்...பிரமாண்ட வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.


கவிதைப்போட்டியில் சில சுவராஷ்யங்கள்..
நான் கவிதை எழுதிய தாள்களை சேகரிக்கும் பணியில் இருந்ததால் சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது....

ஒரு பையன் 'மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று பாரதிதாசன் கவிதையை அப்படியே எழுதி இருந்தான்.
இன்னொருவனோ அழகான கையெழுத்தில் 'வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்" என்று பாரதியாகி இருந்தான்.  இன்னொருவன் வெற்றி நிச்சயம் என்று அண்ணாமலை பாட்டை அப்படியே எழுதி இருந்தான்.  ஒரு பள்ளியில் இருந்த வந்த நான்கு பேரும் ஒரே மாதிரி கவிதை எழுதி  வரி மாறாமல் எழுத்துப் பிழைகூட மாறாமல் எழுதி இருந்தார்கள்.

கலாய்ப்பதற்கேன்றே வருவார்கள் போலிருக்கிறது.   
 

Monday, January 21, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-2.


ப்ளாக் பக்கம் தலைகாட்டி வெகு நாளகி விட்டது. உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது.  அதுதான் மூக்கையாவது காட்டிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்.

எனது ரசிகர் பட்டாளம்(?) வேறு எழுது எழுது என்று ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும் கெஞ்சிக் கொண்டிருப்பதால் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  ஆகையால்.... இனி நான் உங்களை விடமாட்டேன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..


எங்களது வீட்டில் எப்போதும் ரகளைதான்.  யாராவது ஒருத்தர் பல்ப் வாங்கிக் கொண்டிருப்போம்.

நேற்று காலை டிபன் நேரம்.  தங்கமணி தோசை வார்த்து போட்டுக்கொண்டிருந்தாள். நெடு நாட்களாக எங்களுக்கு வைக்கப் படுகிற சில  தோசைகளில் நடுவில் வட்டமாக உள்ளங்கை அளவில் ஒரு சிறிய பாகம் காணாமல் போய் இருக்கும்.  அது எப்படி என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இருந்தபோதும் தோசை ருசியாக இருப்பதாலும் முருகலாகவும் இருப்பாதால் கேள்விகள் கேட்பதில்லை.  மேலும் வாய் என்பது சாப்பிடத்தானே தவிர கேள்வி கேட்பதற்கு இல்லை என்பது எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் விதிகளில் ஒன்று.

இந்த விதியை மீறி அவ்வப்போது நாங்கள் பல்ப் வாங்கிக்கொள்வதும் உண்டு. எனது பிள்ளைச் செல்வங்களுக்கு தோசை முருகலாக இருந்தாக வேண்டும்.  ஆனால் கொஞ்சம் கூட தோசை தீய்ந்து கருகக்கூடாது.    எனது சின்னப் பையன் யுகாவுக்கு வைக்கப்பட்ட தோசையில் நடுவில் கொஞ்சம் கருகி இருந்தது. உடனே தட்டுக்கும் பூமிக்குமாக குதித்தான்.

உடனே சமையலறையில் இருந்து ஓடிவந்த தங்கமணி அடடா கருகிய பாகத்தை டெலீட் செய்யாம கொடுத்திட்டேனே என்றாள்.  அப்போதுதான் எங்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ரகசியம் புரிந்தது.

மகனோ, "ஏம்மா எனக்கு கருத்த தோசையை கொடுத்தே.  தூக்கி வெளியே போடவேண்டியதுதானே" -என்றான்.

தங்கமணி அவனை நிதானமாக முறைத்தபடி,  "அப்படியா... அப்படீன்னா முதல்ல உன்னைத்தான் தூக்கி வெளியே போட்டிருக்கணும்.  உன்னைப் பெத்தப்போ கருப்பா இருந்த்தன்னு  அப்பவே தூக்கிப் போட்டிருக்கணும்"-என்றாள்.

அவ்வளவுதான்.  கப்சிப்.  டைனிங் டேபிள் விதி தன்னால் அமுலுக்கு வந்தது.
நான்,"செவ்வாழ வாயை வெச்சுட்டு கம்முன்னு இருடானா கேக்கிறியா?"-என்று சொன்னேன்...(மனசுக்குள்தான்!!!!).


வாழ்கையில் நல்லா...
கனவுகள்  சுவராஸ்யமானவை. அதுவும் எனக்கு வரும் கனவுகள் அவ்வப்போது ஒரு குறும்படத்துக்கான கருவைத் தந்திருக்கின்றன.  போனவாரம் வந்த கனவு அற்புதமானது.

நடு இரவு நேரம்.  ஒரு மெயின் ரோட்டில் நடு ரோட்டில் உட்கார்ந்து நாலைந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருகிறோம். அதில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்  பையனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  நான்,"வாழ்க்கையில் அடிபட்டாத்தான் உயரமுடியும்டா.  எவ்வளவு அடிபடுகிறோமா அவ்வளவு அனுபவம் கிடைத்து நல்ல உயரத்துக்கு வளர முடியம்"-என்கிறேன்.

அப்போது நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வருகிறது.  நாங்கள் நடு ரோட்டில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதைப் பார்த்து எங்களை மிரட்டி அனுப்புகிறது.  எல்லோரும் விலகிவிட அந்தப் பையன் மட்டும் அங்கேயே நிற்கிறான்.  எதிர்த்து பேசுகிறான்.  போலீஸ் அவனை நாலு மிதி மிதித்து அனுப்புகிறது.  நாங்கள் அவனை சூழ்ந்து "ஏண்டா அடி வாங்கினே... பேசாம வரவேண்டியதுதானே"-என்று கேட்கிறோம்.  அவனோ,"நீங்கதானே  அடிபட்டாதான் முன்னேறமுடியும்னு சொன்னீங்க.  அதனாலதான்!"-என்கிறான்.  கட்.  கனவு கலைகிறது.

இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது... பிறகு பகிர்கிறேன்.


பிரியாத ப்ரியங்களுடன்...

Thursday, May 24, 2012

உருமி-சந்தோஷ் சிவனின் கூர்மையான ஆயுதம்


சந்தோஷ் சிவனின் உருமி நாளை வெளியாகிறது. நான் இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்து எழுதிய விமர்சனத்தை இப்போது மீள்பதிவு செய்கிறேன்.


வாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம்.  அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.


கி.பி.1498 வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களில் தன் சகாக்களுடன் ஆப்பிரிக்காவில் கால் பதித்து அவர்களை வென்ற பிறகு அங்கேயிருந்த குஜராத்தி மாலுமியை சிறை பிடித்து காலிகட் நோக்கி பயணம் ஆகிறான். கேரளாவில் தன்கால் தடம் பதிக்கிறான். அங்கேயிருந்த மிளகைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறான். அதற்காக மூன்று மடங்கு விலை தர முன்வந்தும் கேரள ராஜா செம்பூதிரி வணிகத்துக்கு மறுக்கிறார். ஆனால் தனது நாட்டுக்கு திரும்பிச் சென்ற வாஸ்கோ 1502-ல் மிளகின் மேல் மாறாத காதல் கொண்டு மீண்டும் பெரும் படையோடு வருகிறான். வரும் வழியில் நானூறு பேரோடு மெக்கா சென்று வரும் நான்கு முஸ்லிம் கப்பல்களை பிடித்து வைத்துக் கொள்கிறான்.

இதை கேள்விப்பட்ட ராஜா கொத்துவால் (நம்ம ஆர்யா) ஒரு நம்பூதிரியை தனது எழு- எட்டு வயதான மகனோடு சமாதானம் பேச தூதனுப்புகிறான்.  ஆனால் அந்த நம்பூதிரியின் நாக்கை அறுத்து, மற்றொரு நாயின் காதை  அறுத்து நம்பூதிரியின் காதோடு தைக்கப் படுகிறது. இதைகேள்விப் பட்ட கொத்துவால் கப்பலில் புகுந்து வாஸ்கோ-வைத் தாக்குகிறான். வாஸ்கோ தப்பித்துவிட கொத்துவால் கொல்லப்படுகிறான். இதைக் கண்ட கொத்துவாலின் மகன் கேளு கடலில் குதித்து தப்பிக்க கப்பல் தீ வைக்கப்பட்டு   எல்லோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் இறக்கும் தருவாயில்விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான். அதுதான் உருமி. நம்ம ஊர் சுருள் கத்தி. எம்.ஜி.ஆர். சில படங்களில் சண்டை போடுவாரே...அது மாதிரியான ஆயுதம். அதை வைத்துக்கொண்டு கேளு(பிரிதிவி ராஜ்)பெரியவனான பிறகு அதே வாஸ்கோ-வை தனது முஸ்லிம் நண்பன் கவ்வாலி(பிரபு தேவா), போர்த்துகீசியர்களை பழி வாங்கும் எண்ணம் கொண்ட அரக்கல் ஆயிஷா(ஜெனிலியா) ஆகியோரோடு எதிர்த்து சண்டை போட்டு வாஸ்கோவை வென்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை.


இது உருமிக்கும் தீத்துப்பி(துப்பாக்கி)க்குமான சண்டை.


கதை-திரைக்கதை-வசனம்-சங்கர் ராமகிருஷ்ணன்.  அழகாக வடிவமைத்திருக்கிறார்.  சரித்திரத்தின் ஒரு துளி உண்மையை எடுத்துக்கொண்டு கதையை பின்னிய விதம் அருமையோ அருமை.  அதில் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும் விசுவாசத்துக்கு விலை போன தியாகங்களும் அமைத்து கமர்சியல் கதையாக  கையாண்ட விதம் அருமை.
சந்தோஷ் சிவன்- அவருடைய கேமராவிற்கு எங்கிருந்துதான் காட்சிகள் கிடைக்கிறதோ... ஒவ்வொரு பிரேமும் மனதை அள்ளுகிறது. பசுமை, வானம், தண்ணீர், மலை எல்லாவற்றையும் கூடுதல் அழகோடு காட்டுகிறது. கொட்டும் அருவியின் ஒரு முனையில் இருந்து பிருதிவியும் மறுமுனையில் நின்று ஜெனிலியாவும் லுக் விட்டுக்கொள்ளும் சீன் கிளாஸ். இதை ராவணனில் பார்த்திருந்த போதும் சலிக்கவில்லை.

வித்யாபாலன் வரும் ஒரு பாடல் ஒளிப்பதிவு விளையாடுகிறது. சந்தோஷ் சிவனின் டைரக்சன் துல்லியமாக உள்ளது. துப்பாக்கியின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் செதுக்கி எடுத்திருக்கிறார் படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் அதிகம் தான். எடிட்டிங்கில் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். பழமையையும் புதுமையையும் லிங்க் செய்த விதம் புதுமையாக உள்ளது. மணிரத்னம் பாதிப்பு.

சண்டைக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. அனல் அரசு அசர அடித்திருக்கிறார். ஜெனிலியாவை நன்றாகவே கொடுத்த காசுக்கு மேலாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள். அழகாக ஸ்லோ மோஷனில் சண்டை போடும் அழகே தனி. ஜெனிலியாவின் அப்பாவியான அசடான  டெம்ப்ளேட்-ஐ இதில் உடைத்துள்ளார்.

நித்யா மேனன் ப்ரெஸ்நெஸ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஜெகதி பாபுவின் நடிப்பு நன்றாக உள்ளது. அவரின் நெளிவும், சுளிவும் அருமையான பாடி லாங்வேஜ்.


பிரிதிவிராஜ், பிரபுதேவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவை காட்சியின் இறுக்கத்தை உடைக்க நன்றாகவே பயன்படுகிறார். ஆர்யா நான் கடவுள் ஜுரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்-இருப்பினும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

பழங்கால மலயாளம் நன்றாக புரியும்படி உள்ளது. ஏறக்குறைய தமிழ்தான்.

இன்னும் நன்றாக செதுக்கி இழைத்து தமிழுக்கு கொண்டு வாருங்கள் சந்தோஷ்...ஜெயித்துவிடலாம்.

படம் - பார்க்கலாம் - பார்க்கவேண்டும்.

Friday, May 11, 2012

ஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை!



உன் கண்கள்
ஒரு அழகான
ஆப்பாயில்!
வெள்ளைப் புறவிழியின்
நடுவே இருக்கும்
வெந்தும் வேகாத
மஞ்சள் கருவிழி!
ஐந்து விரல்களில்
அப்படியே சுருட்டி
ஒழுகி முடிவதற்குள்
உள்ளே விடத் தோணுதடி!

கொஞ்சம் பெப்பர்
தூவிய
உன் கோபப் பார்வைதானடி
ஆப் அடிக்க 
நல்ல இணையான சைட்டிஸ்!



உன் மெத்தென்ற
கன்னங்கள் இரண்டும்
நீலகிரி பேக்கரியின்
சூடான 'பன்'னுகள்!
நாயர்கடை
டீ வாங்கி
நனைத்துத் தின்ன
உந்தன் பன்னு கன்னங்களை
இரவல் தருவாயா?




அவ்வப்போது வரும்
என் சிறுநீரகப் பிரச்சனைக்கு
உந்தன் வாழைத் தண்டு
கால்களைத் தருவாயா
சூப் வைத்து குடித்து
நிரந்தர நிவாரணம் பெறுகிறேன்!










உன் குடை மிளகா மூக்கை
சற்றே மறைத்து வை
பஜ்ஜிக்கடை பாய்
உன்னைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்!









உன் பலாச்சுளை
காதுகளோடு
கேரளா பக்கம்
போய்விடாதே...
சிப்ஸ் போட்டு
விற்றுவிடுவார்கள்!








உன் மாதுளை பற்களை
காட்டி
அடிக்கடி சிரிக்காதே...
மிக்சியோடு
ஜூஸ் கடைக்காரன்
உன் பின்னாடியே
அலைந்துகொண்டிருக்கிறான்!









உன் இதழோரம்
வழியும் திராட்சை ரசத்தை
சேமித்து
டாஸ்மாக் பாருக்கு
அனுப்பி வை
எந்தன் ஜொள்ளும்
உந்தன் ஜொள்ளும்
கலந்த கலவையில்
புதியதொரு
போதை மிகுந்த
மதுபானம் செய்வோம்!


 

Friday, April 20, 2012

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

நண்பர் பரிசல் போல் அவியல் என்று கலவையாய் எழுத ஒரு தலைப்பு வேண்டும் என தோன்ற உடனே தோன்றியது இதுதான். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். இந்த தலைப்பில் வேறு யாராவது எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது எழுதினால் தயவு செய்து கோர்ட்டுக்கேல்லாம் போகாமல் என்னிடம் ஒரு sms மூலம் தெரிவித்தால் போதும்.தொல்காப்பியர் மேல் சத்தியம்,உங்கள் தலைப்பை உங்களுக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் குடும்பத்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சென்ட்டர் மீடியானில் இருந்து திடீர் என்று குதித்த ஒருவரால் வண்டி, பொண்டாட்டி, பிள்ளையோடு தார் ரோட்டில் விழ நல்ல காயம். ஆஸ்பத்திரியில் அவரைச் சேர்த்துவிட்டு இலவசமாய் வண்டி எப்படி ஓட்டுவது என கொஞ்சம் அட்வைசும் பண்ணிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நானும் என் தங்கமணியும் கிளம்பினோம்.

ஆஸ்பத்திரி முக்குத் தாண்டியதும் மண்ரோட்டில் இருந்து தார் ரோடு ஏறும்போது வண்டி டயருக்கும் தார் ரோட்டுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. சட்டென்று கவிழ்த்துவிட்டது. நான் சுதாரித்துக்கொள்ள தங்கமணி அப்படியே பின்புறமாய் விழுந்து பின்தலையில் அடி. பெருத்த சேதம் எதுவும் இல்லையென்றாலும் பொண்டாட்டியின் பூரிக்கட்டையில் அடிவாங்கினால் தலையில் கோலிக்குண்டு அளவுக்கு வீங்கிக்கொள்ளுமே அது மாதிரி தலையில் சின்னக் கொம்பு முளைத்திருந்தது.

எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற எரிச்சலில்
"இதற்குத்தான் ஓவரா அட்வைஸ் பண்ணக்கூடதுங்க்றது" -என்று அர்ச்சனை விழுந்தது.

உடனே அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரி போக டாக்டர் இதற்காகத்தான் காத்திருந்தது போல சி.டி.ஸ்கேன் எடுக்கச் சொல்லிவிட்டார். நான் அவசியம் எடுக்கனுமா என்றேன். 'தலையில்லையா?பாத்துக்கறது பெட்டர். அசால்ட்டா இருக்காதீங்க' என்றார்.

உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டு சுடச்சுட தர அதை நான் பார்த்தபோது மூளையின் பல பரிமாணங்கள் அதில் தெரிந்தது. அட நம்ம தங்கமணிக்கு இவ்வளவு மூளையா என்று ஆச்சர்யப்பட்டேன். ஏதாவது பிரச்சினை இருக்கா என்று ஸ்கேன் எடுத்தவரிடம் கேட்டேன். அவர் ஒரு முறை ஸ்கேன் ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தங்கமணியை ஒரு தடவை பார்த்தார். மீண்டும் ஒருமுறை ரிபோர்ட்டைப் பார்த்துவிட்டு 'எதுவா இருந்தாலும் நாங்க ஒண்ணும் சொல்லக்கூடாது சார். நீங்க டாக்டரையே பாருங்க' என்று பில்டப் கொடுத்தார்.

எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது. தங்கமணி, "ஏங்க ஏதாவது ஆப்பரேசன் பண்ணச் சொல்லுவாங்களோ?" என்று கேட்டாள்.
"ஆமா உடனே கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சு சுத்தியலால் மண்டையை பிளந்து ஆப்பரேசன் செய்யப் போறாங்க" -என்றேன்.

தங்கமணிக்கு முகம் வெளுத்துவிட்டது. வாய் கந்தசஷ்டி கவசம் முணுமுணுத்தது.

சிறிது நேரத்தில் டாக்டரிடம் இருந்து அழைப்பு வர எங்களை உட்கார வைத்து ரிப்போர்ட்டைப் பார்த்தார். முதலில் சாதாரண கண்களில் பார்த்தார். பிறகு கண்ணாடி போட்டுகொண்டு பார்த்தார். திடுக்கிட்டார். பிறகு அருகில் சுவற்றில் இருந்த லைட்டில் மாட்டிப் பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை பார்த்தார், என் தங்கமணியை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார்.

அவ்வளவுதான் எங்களுக்கு வேர்த்தது. தங்கமணியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

டாக்டர் தன கண்ணாடியை சரி செய்துகொண்டு, ஒருமுறை செருமிக்கொண்டு தங்கமணியை நேராகப் பார்த்து, "ஒண்ணுமில்லை" என்று ஒத்தை வார்த்தையாக சிரித்துக்கொண்டே சொன்னார். தங்கமணி நம்பாமல் "ஒண்ணுமில்லையா சார்" என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.

"ஒண்ணுமே இல்லம்மா. பயப்படாம போங்க"

அவரின் டைமிங் காமெடி நன்றாகத்தான் இருந்தது. நாம யாரு...விடுவோமா?

"என்ன சார் ஒண்ணுமே இல்லையா?"-என்றேன்.

அவர் சீரியஸாக, "டோன்ட் அப்ரைட்.. நத்திங் சீரியஸ்"-என்றார்.

நான் "என்ன சார் நான் கொஞ்சம் மூளையாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்?" -என்றேன்.

அவர் 'ங்கே' என்று விழித்தபடி இருக்க, நாங்கள் பழி வாங்கிய சந்தோஷத்தில் வெளியே வந்தோம்.

பிறகு நேற்று எனக்காக பல் டாக்டரிடம் போயிருந்தேன். பற்கள் தேய்ந்து கடைவாய்ப் பல்லில் குழி விழுந்து முதலிலேயே கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து அடைத்திருந்தேன். அந்த சிமென்ட் பூச்சு இரண்டு வருடம் கழித்து விழுந்துவிட பல் மிகவும் கூசியது. சரி மீண்டும் சிமெண்ட் வைத்துவிடலாம் என்று நல்ல மேஸ்திரியை ஸாரி நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று வந்திருந்தேன். அங்கிருந்த பெண் அநியாயத்திற்கு சிடுசிடுவென இருந்தது. எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தது. தங்கமணி வேறு உங்க வேலையை இங்க காட்டிராதீங்க என்று முதலிலேயே வானிலை எச்சரிக்கை கொடுத்துவிட்டாள்.

டாக்டரைப் பார்த்த பிறகு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்தார். வேறொன்றுமில்லை பல் கூசாமலிருக்க பேஸ்ட், பிரஸ், மவுத்வாஸ்தான். பல் கூச்சம் போனபிறகு டிங்கரிங் பண்ணிக்கலாம் என்றார். பிறகு அந்தப் பெண் எங்களை தனியாக அழைத்துவந்து கம்ப்யூட்டரில் பல் விளக்குவது எப்படி என்று டெமோ காட்டினார்.

பிறகு 'உங்களுக்கு வேற ஏதாவது தொந்தரவு இருக்கா?" என்று கேட்டது அந்த சிடுசிடு.

தங்கமணி, 'ஒன்றுமில்லை' என்று சொல்ல நான் இடைமறித்து, "இந்தப் பொண்டாட்டிதான் பெரிய தொந்தரவா இருக்கு!"-என்றேன்.

சட்டென பல்ப் எரிந்தது அந்தப் பெண்ணின் முகத்தில். அது வரை அசிங்கமாக இருந்த அந்தப் பெண்ணின் முகம் அழகாகத் தெரிந்தது.

அருகில் தங்கமணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி இருந்தது. அந்தப் பக்கம் நான் திரும்பவே இல்லையே!!!!!

டிஸ்கி: இந்தப் பெயரில் (தே.மா.ப.சு) அவ்வப்போது உங்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே இருப்பேன்.

 

Wednesday, March 21, 2012

MICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உலகம்!


நாம் என்றாவது ஒரு எறும்பின் பயணத்தை தொடர்ந்திருக்கிறோமா? சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா?  மழை வந்த பின்னால் எறும்புக்கு எப்படி இறக்கை முளைக்கிறது?

இப்படி பல கேள்விகள், நம் சிறுவயது சந்தேகங்களின் அவிழ்க்கப்படாத  முடிச்சுகள் எவ்வளவோ இருக்கின்றன.  அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமான செய்திப்படம்தான்-MICRO COSMOS.

இதை செய்திப்படம் என்று சொல்வதில் எனக்கு சம்மதமில்லை.  இது ஒரு முழுநீள சித்திரம் என்றே சொல்வேன்.  இதில் காதல் உண்டு.  சண்டை உண்டு.  வாழ்வுக்காகப் போராடும் போராட்டம் உண்டு.  கூட்டமாய் சாவும் மனதைப் பிழியும் சோகக்காட்சிகள் உண்டு. படத்தை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் முடியாமல் எழமாட்டீர்கள் என்பதை திண்ணமாகக் கூறமுடியும்.

படத்தின் ஆரம்பத்தில் காமிரா பிரபஞ்சவெளியில் துவங்கி மேகக்கூட்டத்தை கடந்து காட்டைக் காட்டி புல்வெளியில் இறங்கி ஒரு புல்லின் மீது நிற்கும்.  காமிரா அந்தப் புல்லை பிரமாண்டமாய்க் காட்டும். அந்த ஒற்றைப் புல்லைப் பற்றியபடி ஒரு வெட்டுகிளியின் கால்கள் மட்டும் நகரும்.

ஒரு ரஜினி படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி அருமையாக இருக்கிறது. ஒரு எறும்பு மெகா சைசில் புல்லுக்கு இடையில் நகர்ந்து செல்லும்.  ஒரு காண்டாமிருகத்தின் கொம்புகள் மட்டும் தெரியம்.  அதை முழுமையாகக் காட்டும்போது ஒரு வண்டாய் மாறும்.

பூ ஒன்று அழகாக விரியும்.  உள்ளிருந்து வண்டொன்று ஓடும்.  பூவுக்குள்ளிருந்த தேனை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது மாதிரி வண்டுகள் உறிஞ்சும் காட்சி, அப்போது நடக்கும் மகரந்த சேர்க்கை, பனித்துளியை குடிக்கும் எறும்பு, சூரிய வெப்பத்தில் ஆவியாகும் பனித்துளி, எறும்பும் வண்டும் சண்டையிடும் காட்சி என காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறார்கள்.

நத்தைகள் இரண்டு ஓருயிர் ஈருடலாய் ஆலிங்கனம் செய்யும் காட்சி...நாம் எந்தப் படத்திலும் பாராதது.  அதற்கான பின்னணி இசை பொருத்தமானது.  மணிரத்தினத்தின் ஓம் நமஹா பாடல் நினைவுக்கு வருகிறது. இதை மீறியொரு காதல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் வந்ததில்லை எனலாம்.

குளவி ஒன்று முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.  அது வெளியே வந்ததும் அதன் முதல் உணவே அந்த முட்டை ஓடுதான் எனும்போது அந்த குளவிக்கு அந்த உணவை தின்னவேண்டும் எனும் சிஸ்டத்தை நினைத்து ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது.

எட்டுக்கள் பூச்சி தன்னுடைய உணவை வேட்டையாடும் விதம் மற்றொரு ஆச்சர்யம்.  வலையை விரித்து காத்திருக்கும் சிலந்தி, அதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சியை உடனே நான்கு உருட்டு உருட்டி தனது வலையில் pack செய்து கொள்கிறது.  பிறகு அதன் ரத்தத்தை மட்டும் உறுஞ்சிக் கொள்கிறது.

பிறகு பூ வாடுகிறது.  கோடை தலை விரித்து ஆடுகிறது. நிலங்கள் வெடிக்கிறது.  எறும்புகள் சின்ன ஒரு குழியில் இருக்கும் கொஞ்சூண்டு தண்ணீரை குடிக்கிறது.  ஒரு தாய் எறும்பு தனது பிள்ளைக்கு தண்ணீர் ஊட்டிவிடும் காட்சி அற்புதமானது.  ஆபாவாணன் ஊமை விழிகளில் காட்டுவது போல கம்பளிப் பூச்சி ஒன்று தொலைவில் வருகிறது.  அருகில் வரும்போது நூற்றுக்கணக்காக மாறுகிறது.  அதுவும் உடையாத ஒன்றன் பின் ஒன்றான வரிசையில் வருகிறது.  மற்றொரு திசையில் வரும் இன்னொரு பூச்சி வரிசை இடையில் அழகாகச் சொருகி செல்லும் காட்சி அற்புதமானது.  ஊர்வலம் சென்ற பூச்சிகள் ஓரிடத்தில் இரை கிடைக்காததால் ஒன்றன் ஒன்றன்மீது விழுந்து அத்தனையும் இறந்து போகின்ற காட்சி உண்மையில் நெகிழச் செய்கிறது.

எறும்புகளின் வாழ்க்கை முறை அழகாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.  அது உணவை சேமிக்கும் முறை.  தனது வலைக்குள் உணவைக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் முறை.  திடீரென்று மழை வந்து அத்தனையும் வீனாதல்.  எறும்புகளுக்கு இறக்கை முளைத்து பறந்து செல்லுதல்,  எறும்புகளின் பார்வையில் வளைக்குள் இருந்து பறவையின் அலகு ஒன்று உள்ளே வந்து கொத்திச் செல்வது என்று அற்புதமாக இருக்கிறது.

சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டு ஒன்று அதன் பாதையில் எத்தனை மேடு பள்ளங்கள்.  அவற்றை எப்படி சமாளித்து உருட்டிச் செல்கிறது.  அது போகும் வழியில் ஒரு செடியின் முள்ளில் சாண உருண்டை மாட்டிக்கொள்ள சற்றும் மனம் தளராமல் முள்ளிளிருந்து அதை விடுவித்து எடுத்துச் செல்லும் காட்சி ஒரு அழகான த்ரில்லிங்கான கவிதை.

மாமிசம் தின்னும் தாவரம் ஒன்று தனது பூவை விரித்து காத்திருக்கிறது. வாசனை தேடி வருகின்ற பூச்சியை மடக்கிப் போட்டு பூவுக்குள் மூடி தின்னும் காட்சி இதுவரை நாம் பார்த்திராதது.

இன்னும் எதிரியிடம் தப்பிக்க பந்து போல் சுருண்டுகொள்ளும் வண்டு,  இலையைத் தின்னும் புழுக்களின் கூட்டம். பூவுக்குள் உறங்கும் வண்டு,  இரவுக்காட்டில் உறங்கும் ஒவ்வொரு பூச்சிகள் என மனதை விட்டு அகலாத அற்புதங்கள் நிறைந்தது இந்தப் படம்.

இறுதியில் கொசுவின் பிறப்பு அற்புதங்களின் உச்சம்.

நண்பர்களே மனிதனுக்குத்தான் ஆறறிவு எனும் தியரி இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் உடைந்து போகும் என்பது உறுதி.  படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

இப்போதைக்கு அதன் ட்ரைலர் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=76R2EKEnoJQ

 

Monday, March 19, 2012

கணினியும் கலப்பையும்- கருத்தரங்கம்.


நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.
பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது.  இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.

முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார்.  கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார்.  அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது.  அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.

 ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது.  ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது.  எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது.  பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது.  ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது.  நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன்.  ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது.  நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.

எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது.  புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது.  இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது.  அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன்.  ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது.  எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது.  அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது.  ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது.  அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன்.  ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன்.  ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது.  எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது.  அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது.  கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது.  (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே).  கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது.  பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது.  ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது.  ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது.  கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.

அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார்.  அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.


"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம்.  காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார்.  அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன்.  தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது.  (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார்.  இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார்.  அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள்.  இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது.  நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள்.  ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை.  இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள்.  நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"

இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.

அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார்.    இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர்.  எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.  எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும்.  மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார்.  மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார்.  நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.  எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.  நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.



தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார்.  ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார்.  இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.

சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.

இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும்.  நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று.  நீங்கள்?